அப்போ மழை வரும் வரை தண்ணீர் குடிக்காமல், குளிக்காமல், கழிக்காமல் இருக்க சொல்கிறாரா விஜயகாந்த் மகன்!
சென்னை: தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய அதிமுக அதை உற்பத்தி செய்யவில்லை என்றும் மழை பெய்தால் அதுவாகவே சரியாகிவிடும் என்றும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் என்றாலே தொண்டர்களை அடிப்பது, நாக்கை துருத்தி பேசுவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவரையே அவரது மகன் விஜய பிரபாகரன் விஞ்சும் நிலைக்கு சென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.
விஜயகாந்த் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும் நேரத்தில் கட்சி பொறுப்புகளை விஜய பிரபாகரனிடமும் மைத்துநர் சுதீஷுடனும் ஒப்படைத்து விட்டு சென்றார். அப்போதிலிருந்து மைக்கை கையில் எடுத்தாலே விஜய பிரபாகரனுக்கு தடுமாற்றம்தான்.
கூட்டணி பேரம்
எதற்கு எப்படி ரியாக்ஷன் காட்டுவது, எப்படி பேசுவது என்பது குறித்தெல்லாம் இன்னும் அவருக்கு தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிக மிகவும் கிராக்கி செய்து வந்தது. ஒரே நேரத்தில் கூட்டணி பேரத்தை அதிமுகவுடனும் திமுகவுடனும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வீட்டு வாயிலில் கேள்வி
இந்த சமயத்தில் விஜயகாந்தை அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது வீட்டில் சென்று சந்தித்தனர். அப்போது அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் விஜயகாந்த் கட்சிக்கு 1000 ஓட்டு கூட விழுகாது என கிண்டல் செய்தனர். இதை கேட்ட விஜய பிரபாகரன், தேமுதிகவுக்கு வாக்கே விழாது என்றால் ஏன்டா என் வீட்டு வாசல்ல காத்து கிடக்கீங்க என கேள்வி எழுப்பினார்.
தேமுதிக
தன்னை விட வயதில் பெரியவர்களை நேற்று அரசியலுக்கு வந்த விஜய பிரபாகரன் இது போல் பேசியுள்ளது, அனைவரின் தலையிலும் சுத்தியலால் ஓங்கி அடித்தது போல் இருந்தது. இதை தேமுதிக தலைமை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அறிவுப்பூர்வம்
இந்த நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து சொல்றேன் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத கருத்தை அறிவுப்பூர்வமாக கூறுவது போல் கூறியுள்ளார்.
அதிமுக
அவர் கூறுகையில் தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை. மழை பெய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். அப்போது தண்ணீர் பற்றாக்குறைக்கு கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுகவை எதிர்த்து பேச தயங்குகிறாரா, இல்லை அதிமுகவை கேள்வியே கேட்கக் கூடாது என்கிறாரா.
சமைக்கக் கூடாது
விஜய பிரபாகரன் கூறுவதை பார்த்தால் மழை பெய்தால் தண்ணீர் பிரச்சினை சரியாகிவிடும் என்றால் அது வரை யாரும் குளிக்கவோ, தண்ணீர் குடிக்கவோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ, துணிகளை துவைக்கவோ, சமைக்கவோ கூடாது என்கிறாரா என்பது புரியவில்லை.
கோபம்
தமிழகத்தையே உலுக்கி வரும் தண்ணீர் பிரச்சினையில் தண்ணீர் தேடி தாய்மார்கள் மணிக்கணக்கில் நடக்கின்றனர், பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளிச் செல்லும் முன்பும் பின்பும் தண்ணீர் எடுத்து கொடுத்து உதவி செய்கின்றனர், பல இடங்களில் ஊற்று நீரை பிடிப்பதில் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். இத்தகைய பெரிய சூழலில் தண்ணீர் பிரச்சினை குறித்த கேள்விக்கு அறிவுஜீவி போல் ஒரு பதிலை விஜய பிரபாகரன் கூறியுள்ளது கோபத்தை ஏற்படுத்துகிறது.
விஜயகாந்த்
கூட்டணி கட்சி என்றால் எதிர்க்கவே கூடாதா என்ன? யாராவது மைக்கை நீட்டினால் எதையாவது உளறிட வேண்டியது தானா? ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் 3-ஆவது இடத்தை கூட பிடிக்க முடியாது நிலைக்கு தேமுதிக சென்றுள்ளது. வாக்கு வங்கியும் குறைந்துவிட்டதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் உத்தேசித்து வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அன்பையும் விஜய பிரபாகரன் கெடுக்காமல் இருந்தால் சரி.