அம்பானியே வந்து பார்க்கிறார் என்றால்.. தேர்தலுக்குப் பின் ஸ்டாலினுக்கு நிறைய வேலை இருக்கும் போலயே!
சென்னை: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பிளைட்டைப் பிடிக்கிறார்.. சென்னை வருகிறார்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.. மகள் கல்யாணத்திற்கு அழைப்பு விடுகிறார். மேட்டர் ரொம்ப சின்னதுதாதன்.. ஆனால் அம்பானியே கிளம்பி வந்து ஸ்டாலினை சந்தித்து பேசியதில் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.
உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இப்போதுள்ள அரசியல் சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மார்ச் மாதம் முகேஷ் அம்பானியின் மகனுக்கும் பிரபல வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகளுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. கடந்த ஜூலை மாதம் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கவுள்ளது.
இந்த திருமண விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலினை அழைப்பதற்காக முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீடா அம்பானியும் ஸ்டாலினின் வீட்டிற்கு வந்து அழைத்துள்ளனர். இந்த சந்திப்பு திருமண அழைப்பிற்காக மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அதற்கு பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி வெறுமனே ஒரு பிரபல தொழிலதிபர் மட்டுமல்ல. தற்போதைய சூழலில் முகேஷ் அம்பானி பிரதமர் மோடியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர். இவரது தொழில் நிறுவனங்களுக்கு பாஜக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது என்று காங்கிரசும் எதிர்கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அம்பானி வருகையில் என்ன ரகசியம்
இந்த நிலையில் பாஜக தமிழகத்தில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்று திட்டவட்டமாக அறிவிக்காத நிலையிலேயே உள்ளது. அதோடு வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே இதுவரை வந்த கருத்துக் கணிப்புகள் அத்தனையும் கூறுகின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் மீண்டும் ஆட்சியமைக்க மாநில கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படும். இந்த சூழலில் பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதால் அவர்களின் ஆதரவை எப்படியேனும் கோருவது என்ற நிலைக்கு பாஜக வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே முகேஷ் அம்பானி தமிழகத்திற்கு வந்து ஸ்டாலினை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
புதிய வெளிச்சத்தில் ஸ்டாலின்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, ஹிலாரி கிளிண்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மேனகா காந்தி, உட்பட பல்வேறு பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். இந்த திருமணத்திற்கு ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. இந்த சூழலில் இப்போது ஸ்டாலின் அழைக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிகரிக்கும் முக்கியத்துவம்
இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது.. முன்பு இருந்ததை விட இப்போது அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலின் மீது அதிக வெளிச்சம் விழுந்துள்ளது. அதிலும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டதும், அவருக்கு ராகுல் காந்தி கொடுத்து வரும் முக்கியத்துவமும் அனைவராலும் உற்று பார்க்கப்படுகிறது.
டச்சே பண்ணாத மோடி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிவரும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய சூழலில் ஆட்சியமைக்க இவர்களது ஆதரவு தேவைப்படும் என்றே பாஜக கருதுகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல கடந்த முறை திருப்பூருக்கு வந்த பிரதமர் மோடி தனது பேச்சில் காங்கிரசையும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் வறுத்தெடுத்தாரே தவிர திமுகவை ஒரு வார்த்தை கூட விமர்சித்துப் பேசவில்லை.
ஸ்டாலினை திட்டுவதில்லை
அதோடு ஸ்டாலின் என்னதான் மோடியையும் பாஜகவையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தாலும் பாஜக திமுகவையோ அல்லது ஸ்டாலினையோ விமர்சிப்பது இல்லை. திமுகவிடம் ஒரு மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறது. ஆகவே தேர்தலுக்கு பிந்தைய சூழலில் திமுக ஆதரவை பாஜக கோருவதற்காகவே முகேஷ் அம்பானியின் வருகை இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுக்கு திமுக ஆதரவளிக்கும் பட்சத்தில் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்ற அறுதப் பழைய வசனத்தையே இரு கட்சிகளும் பேசிக்கொள்ளும் என்பதிலும் சந்தேகமில்லை.