இளங்கோவனை கரை சேர்க்க களம் இறங்குமா திமுக.. தேனியில் காத்திருக்கும் காங்கிரஸ்!
சென்னை: காங்கிரஸ் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் திமுகவின் கூட்டணி பலத்தோடு களம் இறங்குவது அவருக்கு பிளஸ். அதோடு அவர் திமுக தலைமையோடு நெருக்கம் காண்பித்து வருவதால் திமுகவினர் அவருக்காக இங்கு கடுமையாக போராடுவார்கள் என்றே தெரிகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் மூன்று முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. தொகுதி மறு சீரமைப்பின் கீழ் பெரியகுளம் மக்களவைத் தொகுதி ஒழிக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம். ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தேனி மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது.
நேற்று காலைவரை அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திர நாத்தும் அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும் இந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காங்கிரசின் வேட்பாளர் பட்டியல் வெளியானது இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மோதும் மூன்று வேட்பாளர்களும் வலிமையான வேட்பாளர்கள் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேனி தொகுதியை பொருத்தமட்டில் இது அதிமுக கோட்டை என்றே கூறலாம். கடந்த தேர்தல் வரலாறுகளை பார்க்கும்போது அதிமுக இந்த தொகுதியில் 7 முறை வென்றுள்ளது. திமுக இருமுறை வென்றுள்ளது. காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஒருமுறையும் சுதந்திரா கட்சி ஒருமுறையும் வென்றுள்ளனர்.
கிளி ஜோசியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர்
2014 –ல் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் அதிமுகவே வென்றது. இந்த வெற்றி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது. அதிமுக சார்பில் இங்கு போட்டியிட்ட பார்த்திபன் 5.71 லட்சம் வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் 2.56 லட்சம் வாக்குகளும் பெற்றனர். 2014 –ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற அதே வாக்குகளை எண்ணிக்கை அடிப்படையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போதும் தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைகளிலும் சேர்த்து அதிமுக பெற்றது. ஆக நடந்து முடிந்த தேர்தல் வரை தேனி தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே உள்ளது.
தற்போதைய அமமுகவின் து.பொது செயலாளர் தினகரன் அதிமுக உறுப்பினராக இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு இணக்கமாக இருந்தபோது போட்டியிட்டு வென்ற தொகுதியும் பெரியகுளம் தொகுதிதான். 1999-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர் அதன்பிறகு 2004 –ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் ஜே. எம். ஆரோன் ரசீத்தை விட 21,155 வாக்குகள் குறைவாக பெற்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார். தோல்வியை தழுவினாலும் அதிமுகவின் செல்வாக்கு இன்னும் அங்கு குறையவில்லை. அதோடு தேனி தொகுதியை பொருத்தமட்டில் தங்க தமிழ் செல்வன் குடும்பத்திற்கும் அங்கு தனி மதிப்பு உண்டு.
இந்நிலையில் குடும்ப அரசியலை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்திய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திர நாத்தை அதிமுக சார்பில் களமிறக்கியுள்ளார். பெரும் பண பலத்தோடும் படை பலத்தோடும் இவர் இங்கு இப்போது ஓட்டு வேட்டையாடி வருகிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் மீதான அதிருப்தியும் இங்கு கண்கூடாக பார்க்க முடிகிறது. குடும்ப அரசியல், ஒபீஸ்சின் கிணறு விவகாரம் போன்றவற்றால் அப்பகுதி மக்களிடையே அவர் மீதான அதிருப்தியை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதே வேளையில் அதிமுகவினர் இவருக்காக கடுமையாக விட்டமின் “ப” பலத்தோடு களப்பணி ஆற்றி வருகிறார்கள்.
ஓபிஎஸ் தங்களுக்கு கடுமையான துரோகம் இழைத்துவிட்டார் ஆகவே அவரை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளது அமமுக. அதற்காக அமமுகவின் முக்கிய தளபதியான தங்க தமிழ் செல்வனை களமிறக்கியுள்ளது அக்கட்சி. 2009 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆருண் ரஷீதும் அதிமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில் ஆருண் ரஷீத் 6302 வாக்குகள் அதிகம் பெற்று தங்க தமிழ்செல்வனை தோற்கடித்தார். தங்க தமிழ் செல்வன் வெறும் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதற்கு அடுத்து 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் மோதின இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பார்த்திபன் 5,71,254 வாக்குகளும் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் 2.56 லட்சம் வாக்குகளும் பெற்றனர்.
ஆக கடந்த தேர்தல் (மக்களவை+சட்டபேரவை) வரை இது அதிமுகவின் கோட்டை என்றே நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இம்முறை தேர்தல் களம் மாறியுள்ளது. ஓபிஎஸ்சே இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுகவின் வாக்குகள் பிரிவதை தடுக்க முடியாது காரணம் இந்த தொகுதியை பொறுத்த மட்டில் டி.டி.வி தினகரனுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அதுபோல வேட்பாளாராக களம் காணும் தங்க தமிழ் செல்வன் குடும்பத்திற்கும் இங்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. எனவே அதிமுக வாக்குகள் பிரிவது உறுதி.
அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு இங்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கூட்டணி பலத்தோடு போட்டியிட்டாலும் ஐந்து முறை காங்கிரஸ் இங்கு வென்றிருப்பதில் இருந்தே அதை புரிந்து கொள்ள முடிகிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் திமுகவின் கூட்டணி பலத்தோடு களம் இறங்குவது அவருக்கு பிளஸ். அதோடு அவர் திமுக தலைமையோடு நெருக்கம் காண்பித்து வருவதால் திமுகவினர் அவருக்காக இங்கு கடுமையாக போராடுவார்கள் என்றே தெரிகிறது.
ஆகவே ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக கோட்டையில் நடைபெறும் தேர்தலில் ரத்தத்தின் ரத்தங்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. அதிமுக வாக்குகள் பிரியும் சூழலில் அதிமுக பாஜக கூட்டணியை பிடிக்காதவர்கள் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்தால் இங்கு “கை” யே ஓங்கும் என்பது இப்போதைய கள நிலவரம். தேர்தல் பிரச்சாரமும் விட்டமின் “ப” –வும் பாய்வதை பொறுத்து வெற்றியின் பாதை திசை மாறி கூட பயணிக்க வாய்ப்புள்ளது.