அரசைக் காப்பாற்ற.. இன்னொரு பிரம்மாஸ்திரமும் கையில் இருக்காம்.. பரபரக்கும் அரசியல் களம்!
Recommended Video
சென்னை: தமிழக அரசைக் காப்பாற்ற கடைசி பிரம்மாஸ்திரத்தையும் தமிழக அரசு கைவசம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகே தமிழக அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் என்றே சென்று கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் இப்படியெல்லாம் ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்று கூறும் அளவுக்கு தகுதி நீக்க விளையாட்டு பார்ட் பார்ட்டாக அரங்கேறி வருகிறது.
தற்போது இந்த தகுதி நீக்க விளையாட்டு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. தகுதி நீக்கம் மற்றும் உறுப்பினர்கள் மறைவு ஆகியவற்றால் தமிழக சட்டபேரவை மீண்டும் ஒரு இடைதேர்தலை சந்தித்தது. 22 தொகுதிகளுக்கான இடைதேர்தலில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெறவுள்ளது.
3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லமாட்டோம்.. தேர்தலை சந்திப்போம்.. அமமுக
அரசுக்கு ஆபத்து
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு எதிராக வரும்பட்சத்தில் அரசு கவிழ்ந்து விடும். ஆகவே அரசை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருகட்டமாக தினகரனுக்கு ஆதரவளித்து வரும் அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஆகிய மூவரின் செயல்பாட்டைக் கண்டித்து சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார்.
அன்சாரி, கருணாஸ், தனியரசு
இது தவிர நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் எந்த பக்கம் சாயப் போகிறார் என்ற முடிவை தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தமிமுன் அன்சாரி நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது. தனிய அரசு கடைசி வரை அதிமுக பக்கமே இருக்கக் கூடும். இந்த நிலையில்தான் தனது ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கவுள்ளாராம். அது 2017 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம். தமிழகத்தைப் பொறுத்தவரை குட்கா விற்பனை அதிகாரப் பூர்வமாக தடை செய்யப்பட ஒரு பொருள். ஆனால் அதன் விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிடுகிறது.
குட்கா
அந்த செய்தியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக. சென்னை மாநகர காவல்துறை ஆணையர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் அடங்கிய டைரியை வருமானவரித்துறை கைப்பற்றியது. அதன் விவரங்களைத் தமிழக தலைமைச் செயலாளருக்குக் கடிதமாக அனுப்பியும் மேற்கொண்டு, உரிய விசாரணை நடக்கவில்லை என்று அந்த ஆங்கில நாளிதழ் அம்பலப் படுத்துகிறது.
சட்டசபையில் குட்காவால் அமளி
இந்த நாளிதழ் செய்தியை கையில் எடுத்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத் துரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைக்கிறார். அதோடு தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட குட்கா மிக எளிதாக கிடைக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
உரிமை மீறல் பிரச்சினை
அதற்கு திமுகவினர் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்று ஆளும்கட்சியினர் கேட்க தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 21 பேர் திடீரென குட்கா பொட்டலங்களைச் சட்டசபையில் எடுத்துக்காட்டினர். அதிர்ந்து போகிறது ஆளும்கட்சி. தி.மு.க உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக் குழுவுக்குப் பரிந்துரை செய்கிறார். இந்தப் பிரச்சனை உரிமைக் குழு தலைவரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் செல்கிறது. பொள்ளாச்சி ஜெயராமன் உரிமைக் குழு தலைவர் என்ற முறையில் விசாரணை மேற்கொள்ளுகிறார்.
இடைக்கால தடை
உரிமைக் குழுவில் எதிர்க்கட்சி தலைவரும் ஒரு உறுப்பினர். ஆகவே உரிமைக் குழு கூட்டம் நடைபெறும்போது அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் தனக்கு முறையான அழைப்பு எதுவும் வரவில்லை. தன்னை அழைக்காமலே இதுவரை இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின். இந்த நிலையில் உரிமைக்குழுவின் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுகிறது திமுக. நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது இந்த தடையை நீக்க வேண்டும் என ஆளும்தரப்பு பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது.
தடையை நீக்க நடவடிக்கை
நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொள்ளாச்சியில் இருந்த ஜெயராமன் சென்னைக்கு விரைந்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் நீதிமன்ற இடைக்கால தடையை நீக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார். அப்படி தடை நீங்கும் பட்சத்தில் உரிமைக் குழு திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த நடவடிக்கை தகுதி நீக்கம் என்று அமையுமானால் திமுக அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லும். நீதிமன்றம் அதை விசாரித்து இறுதி தீர்ப்பு வரும்வரை ஆளும்தரப்புக்கு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி தனது கடைசி பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த உள்ளார். பிரம்மாஸ்திரம் வேலை செய்தால் ஆளும்கட்சி ஆட்சியில் நீடிக்கும், அஸ்திரம் இலக்கை சரியாக அடையவில்லை என்றால் அடுத்து வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.