"லீக்" ஆன பிளான்.. பாஜக வேட்பாளரை.. ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா.. ஒரே கல்லில் 2 மாங்காய்
எடப்பாடி பழனிசாமி, இன்று திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுவாரா
சென்னை: பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, இன்று சென்னை வருகிறார்.. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து, முர்மு ஆதரவு திரட்டுகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க போகிறது.. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார்... இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
திமுக அரசை கண்டித்து.. ஜூலை 5இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்! தமிழக பாஜக அறிவிப்பு
தனி விமானம்
பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் திரௌபதி முர்மு.. இவரும் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி கொண்டு வருகிறார்... அந்த வகையில், திரௌபதி முர்மு இன்று பகல் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் மதியம் 2:00 மணிக்கு சென்னை வருகிறார்... அவருக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது... நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 4:00 மணிக்கு பாஜக - அதிமுக - பாமக - தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
திரௌபதி முர்மு
தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுகதான் பிரதான ஆதரவு தரும் கட்சியாக பாஜகவுக்கு உள்ளது.. ஆனால் அதிமுகவில் இப்போதைய நிலைமை சரியில்லை.. ஓபிஎஸ், எடப்பாடி இவர்கள் இருவருமே தற்போது பிளவுபட்டு நிற்கிறார்கள்.. எனவே, திரௌபதி முர்முவை, இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திப்பார்களா? அல்லது தனித்தனியாக சந்திப்பார்களா? என்ற ஆர்வம் நேற்றில் இருந்தே எழுந்தது.. ஆனால், இதுகுறித்து 2 விதமான தகவல்கள் வெளியாகின. எடப்பாடி - ஓபிஎஸ் இருவரையும், திரௌபதி முர்மு தனித்தனியே சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டபோது, அனைவருடனும் சேர்ந்து சந்திக்க தயாராகவே உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் இணைந்து சந்திப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்கள்.. பொதுக்குழுவுக்கு பிறகு இவர்கள் இருவருமே நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை.. தனித்தனியாகத்தான் அவரவர் வீட்டில் அல்லது அலுவலகங்களில் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்களே தவிர, நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.
வார்த்தைப்போர்
இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. ஏற்கனவே இருவருக்கும் இடையே கடுமையான அதிருப்திகளும், வார்த்தை போர்களும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அதிமுகவினர்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் துணைவியார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசகர்களுடன் நேரடியான சந்திப்பை கடந்த 2, 3 நாட்களாகவே தவிர்த்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
தம்பிதுரை
எனவே, இன்று திரௌபதி முர்முவை சந்திக்க எடப்பாடி நேரில் வருவாரா என்பதும் சந்தேகம்தானாம்... அப்படி எடப்பாடி பழனிசாமியால் நேரில் வரமுடியாத பட்சத்தில், டெல்லிக்கு தம்பிதுரையை அனுப்பியதை போல தன்னுடைய பிரதிநிதியை, முர்முவை சந்திக்க அனுப்பவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.. இப்படி செய்தால், தன் சார்பாக ஒருவர் கலந்து கொண்டது போலவும் ஆகிவிடும், ஓபிஎஸ்ஸை சந்திப்பது தவிர்ப்பது போலவும் ஆகிவிடுமாம்.. எதுவானாலும் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்..!