"மாற்றம்.. முன்னேற்றம்.. எடப்பாடியார்".. சிஏஏ விவகாரத்தில்.. விரைவில் அதிரடி.. பரபரக்கும் கோட்டை!
சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் யோசித்து வருவதாக தெரிகிறது
சென்னை: மாற்றம்.. முன்னேற்றம்.. எடப்பாடியார்.. இப்படிதான் சொல்ல வேண்டும்.. ஆவேசமாக சட்டமன்றத்தில் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பிய இதே முதல்வர்தான் விரைவில் சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.. அதே சமயம் சிஏஏ விஷயத்தில் அவசரப்பட்டுட்டோமோ, ஒப்புதல் தந்திருக்க கூடாதோ என்ற யோசனையிலும் எடப்பாடியார் மூழ்கி உள்ளாராம் !
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் வெடித்து வருகிறது.. அது தமிழகத்தையும் பீடித்து கொண்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவின் அனல் பறக்கும் அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, சிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? யாராவது ஒருத்தரை காட்டுங்க.. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் தேவையில்லாமல் குழப்பம் செய்ய வேண்டாம்.. என்று எதிர்க்கட்சியினரை காட்டமாகவும், ஆவேசமாகவும் கேள்வி கேட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
மோடி செய்த ஒரே டிவிட்.. எல்லோரின் 'போகஸும்' பாபா ராமதேவ் மீதுதான்.. ஏன்? முக்கிய அறிவிப்பு வருகிறதா?
சந்திப்பு
இந்த சமயத்தில்தான் போராட்டக் குழுவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சில தினங்களுக்கு முன்பு திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு யாரும் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டம் விரைவில் முடிவுக்குவருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புதியதகவல் ஒன்று உலா வருகிறது. வருகிற 9-ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. அப்போது என்ஆர்சி, என்பிஆருக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரலாமா என்ற யோசனையில் உள்ளாராம் முதல்வர்.
கோரிக்கை
இதற்கு காரணம், போராட்டக்குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்து பேசியபோது, என்பிஆர் சட்டத்தில் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதற்கு முதல்வர் செவிசாய்க்க தயாராகினாலும், மத்திய அரசை பொறுத்தவரை இந்த 6 கேள்விகளையும் நீக்க முடியாது என்ற பிடிவாதத்தில் உள்ளது.. அதனால் இந்த விஷயத்தில் இன்னும் தெளிவான முடிவினை முதல்வரால் எடுக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
சாதகங்கள்
ஒருவேளை இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால், அதிமுகவுக்கு ஏராளமான சாதகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.. ஏனென்றால், இந்த தீர்மானத்தை மாநிலங்களவையில் முன்மொழிந்ததில் அதிமுகதான் முக்கிய கட்சி.. அதனால்தான் இதை பிடித்து கொண்டு எதிர்க்கட்சிகள் ஓயாமல் மென்று தின்று கொண்டிருக்கின்றன.. எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் இது மைனஸ்தான்.. எடப்பாடியாருக்கு பிளஸ்தான்.!
சர்ச்சைகள்
இன்னொரு நன்மை என்னவென்றால், சிறுபான்மையினரின் ஆதரவை மொத்தமாக அள்ளி கொள்ள முடியும்.. தேவையில்லாத எதிர்ப்புகள், சர்ச்சைகளுக்கு தீனி போடாமல், அவர்களை தங்கள் பக்கம் வாக்காளர்களாக மாற்ற இந்த தீர்மானம் நிச்சயம் உதவும்.. அது மட்டுமல்ல, சிறுபான்மையினர் ஓட்டுக்கள் திமுகவுக்குதான் அதிகம் என்பதே தமிழக அரசியல் நிலவரம்.. ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ ராஜ்ய சபா எம்பிக்களில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்கள் கூட அறிவிக்கப்படவில்லை.. இந்த சமயத்தில் எடப்பாடியார் இயற்றும் தீர்மானம் பெரும்பாலான இஸ்லாமியர்களின் கவனத்தை ஈர்க்கவே செய்யும். இதை வைத்தே சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் களை கட்டிவிடலாம் என்று கணக்கு போடப்படுகிறது.