அமமுகவில் என்ன நடக்கிறது.. செந்தில் பாலாஜியால் திடீர் குழப்பம்.. அதிர்ச்சியில் தினகரன்
திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இணைவதாக கூறப்படுகிறது.
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியால் அமமுகவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவரை சமாதானப்படுத்த தினகரன் தரப்பு களம் இறங்கியுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் சொந்த தொகுதி மக்கள் முன்னிலையில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்களுக்கு பதவியும், வருமானமும் இன்றி, எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர்.
சசிகலாவை நேரில் சந்தித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதாலும், இனி வருங்காலத்தில் தங்கள் தொகுதியில் நின்று.. வென்று... விட்டதை பிடிக்க வேண்டும் என்றும் தீவிரமாக முடிவெடுத்துள்ளனர். அதில் ஒன்றுதான், செந்தில்பாலாஜி அணி மாறுவதாக கூறப்படுவதும்.
ஆஹா.. அதிமுக, அமமுக ஒன்னா சேரப் போகுதோ.. புதிய பரபரப்பு
ஒதுங்க ஆரம்பித்தார்
டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டவர் செந்தில் பாலாஜி. அதனால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் செந்தில் பாலாஜியும் ஒருவராவார். தற்போது அரவக்குறிச்சியில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேலைகளில் ஒரு பக்கம் அதிமுகவும், மற்றொரு பக்கம் அமமுகவும் தீவிரமாக இறங்கி உள்ளன. ஆனால் அமமுகவுக்கு சாதகமாவே செயல்பட்டு வந்த செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களாகவே ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெ. நினைவு நாள்
அமமுகவுக்குள் ஏதோ உள்கட்சி பூசல் என்றும், விரைவில் சரியாகி விடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், கரூரில் தினகரன் அணி சார்பாகநடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்திலும் செந்தில் பாலாஜி பங்கேற்காமல் போகவும் பலருக்கு சந்தேகம் அதிகமானது.
நமது எம்ஜிஆர்
அதேபோல, ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் போகவும்தான் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்க ஆரம்பித்தது. இந்த நினைவு நாள் சம்பந்தமாக "நமது எம்ஜிஆர்" பத்திரிகையிலும் செந்தில் பாலாஜியின் விளம்பரம் இல்லை என கூறப்படுகிறது.
எதற்காக சந்தித்தார்?
இதையடுத்து, மறுதினமே செந்தில்பாலாஜி, திமுகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் கசிய தொடங்கின. அதேபோல முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன் செந்தில்பாலாஜியை சந்தித்து பேசிவிட்டு போயிருக்கிறார். இவர் எதற்காக வந்து செந்தில்பாலாஜியை சந்தித்தார் என தெரியவில்லை. ஆனால் இந்த தகவலை கேட்டுவிட்டு தினகரன் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனை
இந்நிலையில், செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமமுக பொறுப்பாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து செந்தில் பாலாஜியுடன் இது சம்பந்தமான ஆலோசனையும் நடத்தி வருகிறார்கள்.
மறுப்பு இல்லை
செந்தில் பாலாஜி இந்த சமாதான பேச்சில் உடன்படுவாரா? அல்லது திமுகவில் இணைவது உறுதியா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும். ஆனால் இதுவரை கட்சி மாறப் போவதாக வந்த செய்திக்கு செந்தில் பாலாஜி மறுப்பு சொல்லாமல் இருப்பது தீயாக பரவி வரும் புரளியை ஊர்ஜிதப்படுத்துவதாகவே உள்ளது.