இருவர் நடத்துவதும் உரிமை போராட்டம்.. எதிரிக்கு எதிரி நண்பன்.. சசியுடன் இணைவாரா தீபா?
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலாவுடன் இணைந்து செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகளாக உற்ற தோழியாக இருந்தவர் சசிகலா. உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட போதும் அவருடன் இருந்து கவனித்து கொண்டவர் சசிகலா.
அவருக்கு அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருந்த போதிலும் ஜெயலலிதாவுக்கான இறுதி சடங்குகளை செய்தவர் சசிகலா. இப்படிப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் கழித்து இன்று தமிழகம் வருகிறார்.
மாறலாம்
அரசியலில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். யார் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம். எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அந்த வகையில் சசிகலா வருகையால் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிகிறது.
அனுமதி அளிக்கவில்லை
சசிகலாவுடன் தீபா ஏன் இணைந்து செயல்படக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு ஒரு முறை பார்ப்பதற்காக தீபா சென்ற போது அங்கிருந்த போலீஸார் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் வெளியில் நின்றபடியே செய்தியாளர்களை சந்தித்துவிட்டு திரும்பிவிட்டார்.
தீபா
மேலும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை அவரது அண்ணன் மகள் தீபா கடுமையாக எதிர்த்து வருகிறார். தான் ஓடியாடி வளர்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது அதே போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலாவாலும் கூட நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் அதிமுக அரசை எதிர்க்க சசிகலாவின் உதவியை தீபா நாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இணைய வாய்ப்பில்லை
சசிகலா, தீபா ஆகிய இருவருமே தற்போது நடத்தி வருவது உரிமை போராட்டம். சசிகலா அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். தீபா போயஸ் தோட்ட இல்லத்திற்கு உரிமை கோருகிறார். எனவே சசிகலாவை தீபா நாடலாம் என தெரிகிறது. அதேசமயம், தனது அத்தையை பார்க்கவிடாமல் செய்தது சசிகலா குடும்பத்தினர்தான் என்ற கோபம் இன்னும் கூட தீபாவுக்கு இருப்பதால் அவர் சசிகலாவுடன் இணைந்து செயல்படுவது சந்தேகம்தான். அதேபோல தீபாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்பதால் சசிகலாவும் தீபாவை கண்டு கொள்ளமாட்டார் என்றும் கூறப்படுகிறது.