வாங்க நாமளும் ஆரம்பிக்கலாம்.. கிளம்பி வருமா "நம்மவர்" டிவி.. கமலிடம் கோரும் மய்யம்
கமல்ஹாசனும் டிவி சேனல் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
சென்னை: ரஜினியை போல கமலும் டிவி சேனல் ஆரம்பிப்பாரா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
கமலை பொருத்தவரை எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்து அந்த காலத்திலிருந்தே இருந்தது. ஆனால் விஜயகாந்த், ரஜினி போன்றோர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள் என்பதால் ஒட்டுமொத்த அரசியல் பிரமுகர்கள், பெரிய தலைகள், மீடியாக்கள் என அனைவருமே இவர்களை தாங்கி பிடித்தார்கள்.
அதனால் யாருமே இவர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை. அதேபோல ரஜினி போன்றோரை உயர்த்தி பிடிக்க கமலை மட்டம் தட்டும் வேலைகளிலும் இறங்கியதையும் தமிழகம் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது.
திரித்தே சொல்லப்பட்டன
அது மட்டும் இல்லை... கமல் எந்த நல்ல விஷயத்தை சொன்னாலும், சமூக கண்ணோட்டத்துடன் சொல்லப்படுகிற கருத்துக்கள் பெரும்பாலும் திரித்தே சொல்லப்பட்டன. கமலின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எல்லாம் விளம்பரமாக்கப்பட்டன. இப்படி தன்னுடைய கருத்துக்கள் முழுமையாக மக்களிடம் சேராத காரணத்தினாலேயே நேரிடையாக ட்விட்டரை கையில் எடுத்தார் கமல்.
ட்விட்டர் அரசியல்
தனக்கும் மக்களுக்கும் இடையே யாரையுமே உள்ளே நுழைய விடவில்லை. தன் மனதில் பட்ட கருத்துக்கள் நேரிடையாகவே மக்களிடம் செல்ல தொடங்கின. இந்த ட்விட்டரை அடுத்துதான் அரசியல் கட்சியை கமல் ஆரம்பிக்க தொடங்கினார்.
தனியாக ஒரு சேனல்
ஆனால் கமல் ட்விட்டருக்கு வருவதற்கு முன்னே, அவரது ரசிகர்களின் கோரிக்கைதான் கமல் டிவி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது. கமலின் கருத்துக்கள் திரித்து அரசியலாக்கப்பட்டதால் தனியாக ஒரு சேனலை தொடங்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. பிறகு கட்சி ஆரம்பித்தபிறகு, மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். அது மட்டும் இல்லை, இப்போது ரஜினி டிவி சேனல் ஆரம்பிப்பதாக சொல்லி உள்ளார். இதையடுத்து கமலும் ஒரு சேனல் ஆரம்பிப்பாரா என்று பொதுமக்களிடையே ஒரு சந்தேகம் தானாகவே எழுந்து வருகிறது.
சந்தேகம்
இன்னமும் கூட ஒவ்வொரு விஷயத்திலும் கமலின் கருத்து என்ன என்பது முழுமையாக மக்களுக்கு தெரியப்படுத்தப்படாமலேயே உள்ளது என்று மய்ய உறுப்பினர்கள் வருத்தப்படுகிறார்கள். தற்போது வரப்போகும் தேர்தலிலும் மய்யம் போட்டியிட போகிறது என்பதால் நிச்சயம், சேனல் ஆரம்பிப்பது அக்கட்சிக்கு பலம்தான்.
மார்க்சீயவாதிகள்
ரசிகர்களும், மய்ய உறுப்பினர்களும் கமலிடம் சேனல் ஆரம்பிக்கும்படி நீண்ட காலமாகவே வலியுறுத்திதான் வருகிறார்கள். ஆனால் இதுவரை கமல் இதுகுறித்து எந்த வித பதிலையும் சொல்லாமல் இருக்கிறார். அப்படி ஒருவேளை கமல் சேனல் ஆரம்பித்தால் நிச்சயம் மார்க்சீயவாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுதான் சேனலை முன்னெடுத்து செல்வார் என்பதில் சந்தேகமில்லை.
நிர்ப்பந்தம்
கமல் நினைத்திருந்தால் என்றைக்கோ டிவி சேனல் ஆரம்பித்திருக்க முடியும். ஆனால் தற்போது தேர்தலை மனதில் வைத்தும் சரி, ரசிகர்களின் விருப்பத்திற்காகவும் சரி, மய்ய உறுப்பினர்களின் கோரிக்கைக்காகவும் சரி, ஒரு சேனல் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் கமலுக்கு ஏற்பட்டுள்ளது. விருப்பங்களை நிறைவேற்றுவாரா கமல்??