எகிறும் டென்ஷன்.. ஸ்டாலின் மட்டுமில்லை.. "அவரும்" கமலை அழைக்கிறாராம்.. பரபரப்பாகும் களம்
கமலுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: கமலுக்கு திமுகதான் அழைப்பு விடுத்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால், அந்த கட்சியும் கூப்பிட்டு கொண்டிருப்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.. இதில் கமல் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வருகிறது.. கூட்டணிகள் எதுவும் முடிவாகவில்லை.. திமுகவில் காங்கிரசும், அதிமுகவில் தேமுதிகவும் இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் அந்தந்த கட்சிகளில் தேர்தல் வேலைகள் தங்குதடையின்றி நடந்து வருகின்றன. இதனிடையே கூட்டணி கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகளையும் இழுக்கும் முயற்சிகளும் அதிமுக, திமுகவில் நடந்து வருகின்றன. அதில் பிரதான பெயர் கமல்ஹாசன்..!
தேர்தல்
கமலுக்கு முந்தின தேர்தலில் இவ்வளவு மவுசு இல்லை.. புது கட்சியை ஆரம்பித்திருந்ததால், அவருக்கான மக்கள் ஆதரவு வெளியே தெரியவில்லை.. எம்பி தேர்தலில் துணிந்து களமிறங்கி 3-லிருந்து 4 வரை வாக்கு வங்கியை பெற்ற பிறகுதான் அந்த கட்சியின் அங்கீகாரம் கூடியது.. இப்போது பிரச்சாரத்தில் அதன் வீரியமும் கூடியுள்ளது. கமல் தனித்து களமிறங்கினால், அது கணிசமான ஓட்டுக்களை பிரிக்க கூடும் என்று திமுக பலமாக நம்புகிறது.. அதிமுக மறைமுகமாக கலங்குகிறது.
பேச்சுவார்த்தை
திமுக கமலுடன் பேச்சுவார்த்தையை 2 மாதமாகவே நடத்தி வருவதாக தெரிகிறது.. முதலில் உதயநிதி ஆரம்பித்துள்ளார்.. இப்போது சபரீசன் அந்த அசைன்மென்ட்டை கையில் எடுத்துள்ளார்.. இதை கமலே போட்டு உடைத்துவிட்டார்.. திமுகவில் இருந்துகூட எங்களோடு தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசினார்கள்... ஆனால் என்னிடம் நேரடியாக பேசவில்லை. தூதுவர்களாக சிலர் பேசினார்கள். அக்கட்சியின் தலைமையிடமிருந்து என்னிடம் பேசினாலோ, கேள்வி கேட்டாலோதான் கணக்கு... அதனால் நான் அதையெல்லாம் எடுத்துக் கொள்வதில்லை என்றார்.
சபரீசன்
கமல் சொன்ன இந்த வார்த்தைகள் 2 விதமான விஷயங்களை வெளிப்படுத்துகிறது.. ஒன்று, திமுக இன்னும் கமலை விடவே இல்லை.. மற்றொன்று கமல் திமுகவை விரும்பவே இல்லை.. அதுமட்டுமல்ல, கட்சி தலைமை தன்னிடம் நேரடியாகவே பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்னவோ? ஒருவேளை ஸ்டாலின் கமலுடன் பேசினால் எல்லாம் சுமூகமாக நடக்கும் என்று தெரிகிறது.
கமல்
காங்கிரசுக்கு ஒதுக்கிய 41 சீட்களில் 21 சீட்களை கமல் கட்சிக்கு ஒதுக்கும் ஐடியாவில் இன்னமும் திமுக உள்ளதாக தெரிகிறது.. கமல் எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும், தொடர் முயற்சியை திமுக கைவிடவே இல்லை.. கமல் திமுக கூட்டணிக்கு ஆர்வம் காட்டவில்லை என்ற விஷயம், எடப்பாடியாருக்கும் சென்றதாம்.. உளவுத்துறை இப்படி ஒரு விஷயத்தை சொன்னதுமே, அவரும் ஒரு தூதுவரை அனுப்பி கமலிடம் பேசியதாக தெரிகிறது.
வாக்குகள்
ஆளுக்கு ஒரு பக்கம் கமலை இழுக்கும் முயற்சி நடக்கிறது என்பது பரவலான தகவலாக இருந்தாலும், ஊழக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கொள்கையை முன்வைத்து கட்சியை ஆரம்பித்த கமல், என்ன முடிவெடுப்பார்? கமல் மூலம் சிதற போகும் வாக்கு வங்கிகளை சிந்தாமல், சிதறாமல் அள்ள போவது யார்? பார்க்கலாம்..