எம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது
கொங்கு மண்டல வாக்குகளை அள்ள திமுக தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது
சென்னை: திமுகவும் சரி, அதிமுகவும் சரி, இந்த சில கட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தானே நேரடியாக களம் இறங்கினால் கொங்கு மண்டலத்தை தங்களிடம் தக்க வைத்து கொள்ளலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.. அத்துடன் திமுக தரப்பு அருந்ததியர் சமுதாய ஓட்டுக்களை கவரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது பாராட்டத்தக்கது என்றும் கூறுகின்றனர்.
பொதுவாக கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. அடுத்து முதலியார்கள்... அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. வழக்கமாக இதை அதிமுகவின் கோட்டை என்பார்கள்.
அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்களும்கூட... அதனால்தான் அங்கு அதிமுக வெற்றி என்பது இவ்வளவு காலமாக ரொம்ப சுலபமாக இருந்து வருகிறது. அதற்கேற்றார்போல், தற்போது எடப்பாடியார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக ஜாம்பவான்கள், அடுத்த முறை வெற்றியை தக்க வைத்து கொள்ளும் அளவுக்கு இன்னும் வலுப்படுத்தி வைத்துள்ளனர்.
ஆனால் திமுக கடந்த முறை தன்னுடைய வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டது.. இந்த நாலரை வருஷமாக கொங்கு மண்டலத்தை பலப்படுத்தாமலும் விட்டுவிட்டது.. இப்போது தேர்தல் வரும் சமயத்தில்தான், கொங்கு மண்டலத்தில் தனது கவனத்தை மொத்தமாக திருப்பி இருக்கிறது.. ஆட்சியில் 10 வருஷமாக இல்லாததற்கு மிக முக்கிய காரணமே இந்த கொங்கு மண்டலத்தை திமுக சரிக்கட்டாததுதான் என்ற ஒரு பேச்சும் உள்ளது.
அதுமட்டுமில்லை, செல்வாக்கு மிக்க வெள்ளக்கோயில் சாமிநாதன் பதவியை திருப்பி வாங்கினது சரியில்லை என்றும், கேபி ராமலிங்கத்தை கைநழுவ விட்டிருக்கவே கூடாது என்றும் ஏற்கனவே பொருமல் உள்ள நிலையில், திமுக தற்போதுதான் கொங்கு வாக்கினை கவர நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது தாமதமான களப்பணியே என்றும் சொல்லப்படுகிறது. கொங்கு பகுதியில் திமுகவின் வாக்குவங்கி 3 சதவீதம் அளவிற்கு சரிவில் உள்ளதாக பிகேவின் ரிப்போர்ட் ஒன்று தெரிவித்திருந்ததும் இங்கே நினைவுகூற தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், குறிப்பாக, கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் நிச்சயம் எடப்பாடி பக்கம் ஆதரவு தரும் சூழலில் திமுக என்ன செய்ய போகிறது என்பதுதான் பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது.. இதில் முதல் விஷயமாக, கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது.. அடுத்ததாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தன்னுடைய ஆதரவை திமுகவுக்கு தந்துவிட்டது.. அத்துடன் வாழ்த்தையும் சொல்லியது ஒரு பிடிப்பாக உள்ளது.. இதனால் அதிமுகவில் உள்ள வாக்குகள் சற்று உடைபடும் போல தெரிகிறது.
இருந்தாலும் கவுண்டர் சமுதாயத்தை தவிர, அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுக்களை எப்படி அள்ளுவது என்பதுதான் திமுகவின் அடுத்த லெவல் பிளானாக உள்ளது போல தெரிகிறது.. அந்தியுர் செல்வராஜ் நியமிக்கப்பட்டதற்கு பிறகு, அருந்ததியர் சமுதாயத்தினர் எவ்வளவு பேர் கவரப்பட்டுள்ளனர்? வாக்கு வங்கி எவ்வளவு உள்ளது என்ற நிலவரமும் கேட்கப்பட்டுள்ளது.. அருந்ததி சமுதாய ஒட்டுக்களை பெறுவதே இப்போதைய முழு கவனமாகவும் இருக்கிறது.
திமுக வேறு என்ன செய்தால், கொங்கு மண்டலத்தை சரிக்கட்டலாம் என்பது குறித்து ஒருசிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "கருணாநிதி இருந்திருந்தால், இப்படி ஒரு இடைவெளியையே விட்டிருக்க மாட்டார்.. கொங்கு மண்டலத்தில் எங்கு வீக், எங்கு ஸ்ட்டிராங் என்பதில் ஆரம்பித்து, நிர்வாகிகளை தயார் செய்து இந்நேரம் தேர்தலுக்கு ரெடியாக வைத்திருப்பார்.. கொங்கு சமூகத்துக்கு முத்துசாமி, வன்னியர் சமுதாயத்துக்கு செல்வகணபதி ரொம்ப ஸ்டிராங்காக உள்ளனர்.. இருந்தாலும், சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது.
மாறி மாறி கட்சிக்கு தாவி வரும் செந்தில் பாலாஜி மீது அங்கு பெரிய அளவிலான மதிப்பு இல்லை... அதனால், கரூரை மீட்கணும் என்றால், கரூர் சின்னசாமி, கேசி பழனிசாமி 2 பேரிடம் கரூரை ஒப்படைக்க ஏதாவது செய்யலாம்.. மூத்த தலைவரான குளித்தலை சிவராமன் போன்றோரையும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
அதிமுகவை சேர்ந்த முதன்மை அமைச்சர்கள் 4 பேர் இந்த மண்டலத்தில் வலுவாக உட்கார்ந்துள்ளனர்.. நல்ல செல்வாக்கு.. நிறைந்த பண பலம்.. வெட்டி வா என்றால் கட்டி வரும் அளவுக்கு பசை உள்ளவர்கள்.. தேர்தலில் தண்ணீராக இறைப்பவர்கள்.. இவர்களுக்கு நிகராக திமுகவில் பொருளாதார பலம் இருக்க வேண்டும்... கூட்டணி கட்சியான விசிக மீது அதிருப்தி உள்ளது.. 15 வருஷத்துக்கு முன்பு திருமாவளவன் பேசிய பேச்சை இன்னும் கொங்கு மண்டலம் மறக்கவில்லை.. விசிக கூட்டணியில் இல்லை என்றாலே பாதி ஓட்டு அசால்ட்டாக விழுந்துவிடும்.. காங்கிரசுக்கும் இப்படித்தான் செய்ய வேண்டி உள்ளது.
அதேபோல அதிமுகவில்கூட கூட்டணி கட்சியான பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தை கணிசமாக ஒதுக்கிவிட கூடாது.. ஏற்கனவே முக்கிய பொறுப்பு கிடைக்காமல் சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோர் உள்ள நிலையில், நிச்சயம் அதிமுக பெருமளவு ஓட்டுக்களை ஒதுக்காமல், தானே நேரடியாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்" என்றனர்.