கடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்
Recommended Video
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழக் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ராஜ கண்ணப்பனைத் தொடர்ந்து டாக்டர் மைத்ரேயனும் கிளம்பப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைத்ரேயன் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தவர். பின்னர் அதிமுகவுக்கு வந்தார். ராஜ்யசபா எம்.பி ஆனார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். ஓபிஎஸ் அணி, அதிமுகவுடன் ஐக்கியமானபோது மைத்ரேயன் பெரிய அளவில் பல விஷயங்களை எதிர்பார்த்தார் போல. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
குறிப்பாக லோக்சபாதேர்தலில் தென் சென்னை தொகுதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவருக்கு கதவை மூடி விட்டது அதிமுக தலைமை. இதனால் பெரும் அப்செட்டாகி விட்டார் மைதேர்யன். இந்த நிலையில் விரைவில் அவர் அதிமுகவை விட்டு விலகலாம் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
அவர் தனது முகநூலில் போட்டுள்ள ஒரு பதிவும் கூட சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளது. அதில், "இன்று வீட்டில் அம்பாரமாக குவிந்துள்ள புத்தகங்கள், பத்திரிகை குறிப்புகளை சரி செய்து அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய இதழில் கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதை வரிகளைப் படிக்க நேர்ந்தது.
" என் கால்களில் சற்று வலி ஏற்படும் போது நான் சிறிது இளைப்பாறுகிறேன்.நான் இளைப்பாறுவது ஓய்வெடுப்பதற்குத் தானே ஒழிய ஓய்ந்து போவதற்கு அல்ல." " காத்திருக்கும் வரை நம் பெயர் காற்று என்றே இருக்கட்டும். புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம் ". எவ்வளவு பொருள் பொதிந்த யதார்த்தமான வரிகள் ! என்று கூறியுள்ளார் மைத்ரேயன்.
தேர்தல் முடிவைப் பொறுத்து அவரது முடிவு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவும் சரிப்பட்டு வராவிட்டால் மீண்டும் அவர் பாஜகவுக்கே திரும்பக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதால் கட்சியில் பெரும் அதிருப்தி வெடித்திருப்பதாகவும் இதைக் காரணமாக வைத்து மேலும் சிலர் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.