அமைச்சர் மணிகண்டன் நீக்கம்.. அதிமுகவில் பிரச்சினை வெடிக்குமா.. அடங்கிப் போய்ருமா?
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக பதவி பறிப்பு அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளதை அதிமுகவினர் யாருமே எதிர்பார்க்கவில்லை. எனவே இது பிரச்சினையாக மாறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், முதல்வர் எடப்பாடியார், அனைத்தையும் யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருப்பார் என்பதால் நிச்சயம் அப்படி ஏதாவது ஏற்பட்டால் சமாளித்து விடுவார் என்று அவரது ஆதரவு தரப்பு தெம்பாக கூறுகிறது.
தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சரவையில் முக்கிய துறையான தகவல் தொழில் நுட்பத்துறையை கவனித்து வந்தார் மணிகண்டன். அந்த துறையின் கீழ் வரும் கேபிள் டிவி தொடர்பான விவகாரங்களில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலையிட்டு வந்தது மணிகண்டனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையுடன் மோதல்
இது தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு, மணிகண்டனுக்கும் கடந்த ஓராண்டாக பனிப்போர் நிலவிவந்தது. இதனிடையே அரசு கேபிள் டிவி வாரியத் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்தார் முதல்வர் எடப்பாடி. இது மணிகண்டனை மேலும் உஷ்ணமாக்கியதால், என்ன நினைக்கிறார் எடப்பாடி என கோபத்தில் கொந்தளித்துள்ளார். அது தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்துவந்தார்.
தொலைக்காட்சி பேட்டி
இந்நிலையில் தொலைக்காட்சிகளுக்கு மணிகண்டன் அளித்த பேட்டியில்,அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பற்றி ஏகத்துக்கும் புகார் கூறினார். ஒரே அமைச்சரவையில் இருந்துகொண்டு ஒரு மந்திரி இன்னொரு மந்திரியை பற்றி விமர்சனம் செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேபிள் தொழில் நடத்தி வருபவர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவர் அட்சயா என்ற பெயரில் 2 லட்சம் இணைப்புகளை வைத்து கேபிள் தொழில் நடத்திவருகிறார்.
தனியார் இணைப்புகள்
முதலில் அவர் தனது நிறுவனத்தில் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு கேபிளில் இணைத்தாலே அரசுக்கு வருவாய் வரும். தனியார் இணைப்பை விடுத்து அசு கேபிளுக்கு மாறுமாறு கூறுகிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். ஊருக்கு உபதேசம் செய்வதை விடுத்து தனது அட்சயா நிறுவனத்தை உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு கேபிளுடன் இணைக்க வேண்டும் என பேசினார்.
ஜெயலலிதாவால் அமைச்சராகியவன்
மேலும், மருத்துவராகிய தனக்கு ஜெயலலிதா தான் அமைச்சரவையில் இடம் கொடுத்தார் என்றும், அம்மாவால் பதவி கொடுக்கப்பட்டவன் நான் என்றும் தெரிவித்தார். இந்தப் பேச்சு எடப்பாடியால் என்னை என்ன செய்து விட முடியும் என்கிற தொனியில் இருந்தது. எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட முதல்வர் எடப்பாடி சீனியர் நிர்வாகிகளிடமும், மூத்த அமைச்சர்களிடமும் ஆலோசித்து தில்லான முடிவை எடுத்துள்ளார்.
முதல்வர் சமாளிப்பாரா
இந்த முடிவால் அதிமுகவில் பிரளயம் வெடிக்கும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. அதேசமயம், இதை எடப்பாடி பழனிச்சாமி சமாளித்து விடுவார் என்கிறார்கள்.. என்ன நடக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.