மாஜி மணிகண்டன் கட்சி மாறுகிறாரா??.. ஷாக்கில் அதிமுக!
Recommended Video
சென்னை: பைபாஸில் ஆட்சியை பிடிப்பதில் தி.மு.க.வுக்கு விருப்பமில்லை!' என்று வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட எதிர்கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை ஆசை காட்டி இழுத்து, கட்சியை பலப்படுத்த இன்னொரு வித பைபாஸ் வேலையை ஸ்டாலின் தெளிவாகவே செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வை கூட்டணிக்குள் இழுத்தது தி.மு.க. ஆனால் பிரேமலதாவும், சுதீஷும் வேறு கணக்குப் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். அடுத்த சில நாட்களில் தே.மு.தி.க. உடைந்தது. இதன் பின்னணியில் நின்றது சாட்ஸாத் தி.மு.க.தான். கேப்டனிடமிருந்து பிரிந்த நிர்வாகிகள் பிறகு தி.மு.க.வில் இணைந்தனர்.
இதேபோல் தினகரன் கட்சியிலிருந்து கலைராஜன், செந்தில்பாலாஜி, தங்க தமிழ் செல்வன் என மூன்று முக்கிய தலைகளை இழுத்து, அக்கட்சியின் முக்கிய தூண்களை தகர்த்துவிட்டது தி.மு.க. இந்த நிலையில் அதன் அடுத்த இலக்காக இருப்பது அ.தி.மு.க.தான். அக்கட்சியினுள் தி.மு.க. எப்படி தன் தூண்டிலை போட்டு இழுக்கிறது? என்பதை பற்றி விளக்குகிறார்கள் விமர்சகர்கள்.
பதவி கிடைக்காதோர்
"அ.தி.மு.க.வின் ஆட்சி, அதிகாரத்தினால் கிடைக்கும் அதிகார மற்றும் பண பலன்களை அனுபவிப்பது சில சதவீதத்தினர் மட்டுமே. ஆனால் பெரும்பாலான சதவீத நிர்வாகிகள் இதற்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் வாரியம் உள்ளிட்ட பதவிகளை போடாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் தலைமை மீது கோபத்தில் இருக்கின்றனர்.
இழுக்கும் வேலைகளில் திமுக
இந்த கோவக்காரர்களில், மக்கள் செல்வாக்குடைய நபர்களாகப் பார்த்து பேசிவருகிறது தி.மு.க. ‘அடுத்து எங்கள் ஆட்சிதான். அ.தி.மு.க. முடிந்துவிடும். அதனால் இப்பவே இங்கே வந்துடுங்க, தேர்தல் சீட், ஜெயித்தால் மந்திரி, அதுவுமில்லேன்னா வாரிய தலைவர்!ன்னு பதவி தர்றோம்'ன்னு ஆசை காட்டி இழுத்து வருது.
மணிகண்டனுக்கு வலை
யாரும் இதுவரை அசைந்து கொடுக்காத நிலையில், சமீபத்தில் எடப்பாடியாரால் பதவி பறிக்கப்பட்ட மாஜி அமைச்சர் மணிகண்டனை எப்படியாவது தி.மு.க.வினுள் இணைக்க படாதபாடு படுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வில் சுப.தங்கவேலன் டீமை தவிர உருப்படியாக யாருமே இல்லாத நிலையில் மணிகண்டனை அந்த இடத்தில் வைப்போம்! எனும் ஆசை காட்டியுள்ளனர்.
கேம்ப் மாறினால் சிக்கல்
மணிகண்டன் இதுவரையில் ஓ.கே. சொல்லவில்லை. எடப்பாடியாரிடம் மன்னிப்பு கோரிய பின்னும் அவர் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்காவிட்டால், நிச்சயம் மணிகண்டன் ஆத்திரமடைவார். அப்போது அவர் எடுக்கும் முடிவானது தி.மு.க.வில் இணைவதாகதான் இருக்கும். ஏற்கனவே கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகரித்துக் கிடப்பதை எதித்துதான் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டியளித்து, சிக்கலில் சிக்கினார். இப்போது தி.மு.க.வுக்கு அவர் மாறிவிட்டால், கொங்கு அமைச்சர்களின் சொத்து சேர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்த தயங்கமாட்டார்.
அதிரடி மணிகண்டன்
அதிரடி பேர்வழியான மணிகண்டன் அ.தி.மு.க.வில் இருக்கும்போதே இப்படி வெளிப்படையாக போட்டுடைக்கிறார் என்றால் தி.மு.க.வில் இணைந்த பின் அ.தி.மு.க.வை எந்தளவுக்கு ஆவேசமாக பழிவாங்குவார்!? என்பதே எல்லோரின் எண்ணமும். இதை நினைத்துதான் அ.தி.மு.க.வும் அலறிக் கிடக்கிறது. உடனடியாக மீண்டும் மணிகண்டனுக்கு பதவி கொடுத்தால் எடப்பாடியார் மேல் கட்சியினருக்கு எழுந்திருக்கும் பயம் கலந்த மரியாதை பிளஸ் நம்பிக்கை கெட்டுவிடும். அதே நேரத்தில் மணியும் கட்சி தாவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! எனும் இரட்டை டாஸ்கில் தவிக்கிறது அக்கட்சி.
மணிகண்டன் முகாம் மாறினால் தி.மு.க.வுக்கு பெரும் கொண்டாட்டம்தான் என்கிறார்கள். என்ன நடக்க போகிறதோ!
- ஜி.தாமிரா