3 சீட் தானாம்.. சூரியனில் நின்றால் கூட கிடைக்குமாம்.. நாம ஒன்னு நினைத்தால் தெய்வம் ஒன்னு நினைக்கும்!
திமுக கூட்டணியில் மதிமுக, விசிக நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாம ஒன்னு நினைத்தால் தெய்வம் ஒன்னு நினைக்கும் என்பார்களே.. அது மாதிரி திமுக கூட்டணி கட்சிகளின் நிலைமை ஆகிவிடுமோ என்ற கவலை அந்த கட்சி தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
திமுகவுக்கு இப்போது ஒரே குறி, 10 வருடம் இல்லாத ஆட்சியை எட்டிப்பிடிப்பதுதான்.. அந்த மாஸ் வெற்றியுடன் பாஜகவுக்கு ஒரு செக் வைக்க வேண்டும் என்பதுதான்.
அதனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் மிக மிக முக்கியமானது... ஆனால், அதிமுக மெகா கூட்டணி தொடர்வது, பாஜக தொடர்ந்து நெருக்கடி தருவது, சீமான் ஒரு பக்கம், கமல் ஒரு பக்கம் களம் இறங்குவது, புகையும் உட்கட்சி பூசல், நெருக்கும் கூட்டணி கட்சிகள் என பல்வேறு பிரச்சனைகளில் திமுக சிக்கி விழித்து வருகிறது.
இதையெல்லாம் சமாளித்துதான் திமுக வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது... அதனால்தான் 200 தொகுதிகளிலாவது போட்டியிட்டு, மெஜாரிட்டியை கையில் வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. கூட்டணி கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு தந்தால், அனைத்துமே சுமூகமாக முடியும் என்பது திமுக தலைமையின் கணக்கு.. ஆனால் கூட்டணி கட்சிகளின் கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது.
அவர்களுக்கு எல்லாம் சின்னம் பிரச்சனையும், தனித்தன்மையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே மேலெழுந்து உள்ளது.. வைகோ, 20 சீட்டுகள் கேட்டு கொண்டிருக்கிறார் .. ஆனால், இன்னும் திமுக சாதகமான பதிலை சொல்லவில்லை.. அதேசமயம் வேறு கணக்கு போட்டு வருகிறதாம். மதிமுக தனிச் சின்னத்தில் நிற்க விரும்பினால் நிற்கட்டும்..
ஆனால் 3 சீட் மட்டுமே ஒதுக்கப்படும்.. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அந்த தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.. இதுதான் வைகோ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, இறுதியில் வெங்கய்ய நாயுடுவை சந்திக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக காரணம் கூறுகிறார்கள்..
இதே ஒற்றை இலக்க சீட்டுதான் விசிகவுக்குமாம்.. 3 சீட்டுகளிலேயே திமுக நிற்கிறது.. இதை வைகோ ஏற்க முன்வருவாரா? அல்லது வழக்கம்போல உணர்ச்சிவயப்பட்டு ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.