இன்னொரு பிளவை சந்திக்கிறதா மனிதநேய மக்கள் கட்சி ?
சென்னை: மனித நேய மக்கள் கட்சி மீண்டும் உடையும் அபாயத்தில் உள்ளது. மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் இரண்டிற்கும் தலைவராக இருப்பவர் ஜவாஹிருல்லா. இவருக்கும் தமுமுகவின் பொது செயலாளர் ஹைதர் அலிக்கும் நீண்ட காலமாகவே ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இந்த நிலையில் ஹைதர் அலி தலைமையில் நாகர்கோயிலில் சதி ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் அதில் கலந்து கொண்டோரை தற்காலிகமாக நீக்குவதாக கூறி ஜவாஹிருல்லா நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து ஜவாஹிருல்லா அனுப்பியுள்ள கடிதத்தில் தமமுக பொது செயலாளர் ஹைதர் அலி, மமக அமைப்பு செயலாளர் உஸ்மான் கான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஒ.யு.ரஹ்மதுல்லா, கோவை செய்து உட்பட்டோர் பங்கு கொண்ட சதியாலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சிலர் அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரியாமல் கலந்து கொண்டுள்ளனர். இப்படியாக அந்த கடிதம் நீள்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள 20 பேரை தற்காலிகமாக நீக்குவதாக ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். இதற்கு தமுமுகவின் பொது செயலாளர் ஹைதர் அலியும் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தனக்கு தெரியாமல் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்.
திமுக சீட் தராதது வருத்தமாக இருக்கிறது.. அமமுக குறித்து 9ம் தேதி முடிவு - ஜவாஹிருல்லா
இவர்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சனையால் இப்போது மனித நேய மக்கள் கட்சி இரண்டாக பிளவு படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அறிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லாவை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை அதே வேளையில் அந்த கட்சியின் பெயர் சொல்ல விரும்பாத மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஹைதர் அலி எப்போதுமே தேர்தல் மற்றும் பொதுக்குழு காலங்களில் இது போன்ற பிரச்சனைகளை எழுப்புவது வழக்கம். இதன் மூலம் பல ஆதாயங்களை அவர் எதிர்நோக்குகிறார் என்று கூறினார் அவர். அதாவது திமுகவில் இப்போது கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் என்பதை முடிவு செய்து விட்டார்கள்.
மமகவுககு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை ஆகவே இதை தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறார் ஹைதர் அலி. இப்போது திமுகவிடம் சென்று எங்கள் ஆதரவு உங்களுக்கு என்று கூறிவிட்டு எங்களுக்கு நீங்கள் தொகுதிகள் எதுவும் தரவேண்டாம். அதே வேளையில் ஏதாவது வாரிய பதவி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொள்வார்கள் இதுதான் அவர்களது திட்டம் என்று போட்டு உடைத்தார்.
இது குறித்து மமக அமைப்பு செயலாளர் உஸ்மான் கானிடம் பேசியபோது பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் பொது செயலளார் ஹைதர் அலிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இயக்கத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வந்தது. ஆகவேதான் அவர்களின் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும்பொருட்டு ஹைதர் அலி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது ஒரு கூட்டத்தை நடத்தி அதன் பின்னர் பேராசிரியரிடம் பேசலாம் என்று இருந்தோம். கூட்டம் நடந்த மாலையே ஜவாஹிருல்லா இது சதி கூட்டம் என்று கூறினார். பின்னர் நாங்கள் கொடுத்த விளக்கத்தை கேட்டுக் கொண்டார். ஆனால் நேற்று இரவு திடீர் என்று நான் உட்பட 22 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக வாட்சப் மூலமாக தெரிவித்துள்ளார்.
ஜவாஹிருல்லாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் அரசியல் உள்ளது. அதாவது இறுதிவரை திமுக கூட்டணியில் எப்படியும் இடம் கிடைத்து விடும் என்று கூறி வந்தார். இப்போது இடம் இல்லை என்று தெரிந்ததும் இதை கட்சியினர் கேள்வி கேட்பார்கள் என்பதால் இப்படி ஒரு பிரச்னையை ஜவாஹிருல்லா கிளப்புகிறார் என்கிறார் உஸ்மான்.
ஆனால் இந்த நீக்கம் செல்லவே செல்லாது என்று கூறுகிறார் தமுமுகவின் பொது செயலாளர் ஹைதர் அலி. பொது செயலாளருக்குத்தான் நிர்வாகக் குழு கூட்டத்தை அதிகாரம் உள்ளது என்றும் தான் இல்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் செல்லாது என்றும் யாரையும் பொறுப்புகளில் இருந்து நீக்கவும் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது உகாண்டாவில் இருக்கும் ஹைதர் அலி வரும் 8-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறாராம். அதன் பிறகு மமமுகவில் இந்த சர்ச்சை பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது.
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 22 பேர் நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒருமுறை மனித நேய மக்கள் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது உடைந்து விடக் கூடாது என்பதே எங்கள் எண்ணம் என இருதரப்பில் உள்ளவர்களும் கூறுகிறார்கள். தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ?