தேர்தலுக்குப் பிறகும்.. இதே "காதலோடு" இருப்பாங்களா.. மோடியும், ராகுலும்?!
சென்னை: பனை மரத்துக்குக் கீழே நின்று நீங்க பால் குடித்தாலும்.. கள்ளு குடிக்கறீங்களான்னுதான் எல்லோருமே கேட்பாங்க. அப்படித்தான் இருக்கிறது.. இன்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழ் மீது திடீரென காட்டும் ஆர்வம்.
இது தேர்தல் காலம் இல்லையா.. எனவே இதெல்லாம் தேர்தல் நாடகம் என்றுதான் பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி மொத்தமாக அதைக் கூறி விட முடியாது. மோடிக்கு தமிழ்நாட்டின் மீது தனிப் பாசம் உண்டு என்பதை அனைவருமே அறிவார்கள்.
அதிமுகவில் நாளை மறுநாள் விருப்ப மனு செலுத்தியவர்களிட்டம் நேர்காணல்
உண்மையில், தமிழை வட இந்தியாவில் அதிக அளவில் கொண்டு போனதே மோடிதான் என்பதை மறுக்கக் கூடாது. சமீப காலத்தில் அதிக அளவில் தமிழ் குறித்துப் பேசிய முதல் வட இந்தியத் தலைவரும் மோடிதான்.
மோடியின் தமிழ்க் காதல்
டெல்லியில் மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குப் போயும் கூட தமிழ் பற்றிப் பேசியவர் மோடி. அவ்வையார் குறித்துப் பேசுகிறார். திருக்குறள் சொல்கிறார். தமிழ் இலக்கியத்தின் பெருமையை சிலாகிக்கிறார். தமிழின் தொன்மையைப் புகழ்கிறார். தமிழ் கற்றுக்க முடியாமல் போய் விட்டதே என்று வருத்தமும் படுகிறார்.
அமித் ஷாவின் தமிழ்
பிரதமர் மட்டுமா.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூட தமிழ் பேச முடியாமல் போய் விட்டதே என்று வருத்தப்படுகிறார். தமிழ் கற்க விரும்புகிறேன் என்று சொல்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் பல வட இந்திய பாஜக தலைவர்களும் கூட தமிழ் பற்றிப் பேசுகிறார்கள். தமிழ் பேச முடியாததற்காக வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
ராகுலின் தமிழ்
மறுபக்கம் ராகுல் காந்தியும் கூட தமிழ் மீது தன் காதலைக் காட்டுகிறார். ராகுலுக்கு முன்னோடியாக இருந்தவர் அவரது தந்தை ராஜீவ் காந்திதான். ராஜீவ் காந்தியைப் போல தமிழகத்தின் மீது பாசம் காட்டிய தலைவர் இருந்ததில்லை. தனது தாயார் இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ் காந்தி தமிழகத்தின் மீது தனிப் பாசம் காட்டினார். தேர்தல் சமயங்களில் அதிக அளவில் அவர் தமிழ்நாட்டுக்கு வந்து போனவர். இதையெல்லாம் தமிழ்நாடு மறக்கவில்லை.
கல்லுப்பு - தயிரு!
இன்று இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிக மிக சுதந்திரமாக, சந்தோஷமாக, குழந்தைத்தனத்துடன் கூடிய மகிழ்ச்சியை தமிழக பயணங்களின்போது காட்டுகிறார் ராகுல் காந்தி. தமிழில் பேசுகிறார். சமையல் செய்கிறார், கராத்தே போடுகிறார், தண்டால் எடுக்கிறார்.. தமிழனாக மாறி வருகிறார் கிட்டத்தட்ட.
தேசிய தமிழ்க் காதல்
இப்படி தேசிய தலைவர்கள் எல்லோரும் தமிழ் மீதும் , தமிழ்நாட்டின் மீதும் காட்டும் பாசத்தைப் பார்க்கவே சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகும் கூட நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுகிறது. தேர்தலுக்கான ஸ்டண்ட்டா இவையெல்லாம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. தேர்தலுக்குப் பிறகும் இவர்களின் இந்த தமிழ்க் காதல் தொடருமா.. தொடர்ந்து நீடிக்குமா.. தமிழகத்தை வளம் மிக்க மாநிலமாக தொடர்ந்து இவர்கள் வார்த்தெடுப்பார்களா என்ற ஏக்கமும் எழுகிறது.
நடிப்பா.. நிஜமா
"தமிழுக்கு அமுதென்று பெயர்".. அதை அருந்த அருந்த அமுதமாக இனிக்கும்.. ஒரு போதும் விஷமாகாது.. அதேபோலத்தான் .. தமிழுக்கும் விஷம் கொடுக்க முடியாது.. அது அழியவும் செய்யாது.. எந்த ரூட்டில் போனாலும்... எப்படி ஏமாற்றினாலும் அது ஏமாறாது... மாறாது... அப்படித்தான் தமிழ்நாட்டு மக்களையும் கூட.. அத்தனை சீக்கிரம் ஏமாற்ற முடியாது... உண்மையான தமிழ் அன்பையும், தமிழ்க் காதலையும் தமிழ்நாட்டு மக்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.. எனவே தேசியத் தலைவர்களின் இந்த தமிழ்க் காதலை தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஜட்ஜ் செய்துள்ளார்கள் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்.!