"சூப்பர் யூடர்ன்".. திமுகவுக்கு கல்தாவா? சகலமும் சசிகலாதான்.. செம பல்டி!
அமமுகவில் விரைவில் நாஞ்சில் சம்பத் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "சசிகலாதான் அந்த கட்சியை வழிநடத்த போகிறார்.. அது தான் நடக்கப்போகிறது.. ஓபிஎஸ் அதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியினுடைய அரசியல் அஸ்தமனமாக போகிறது... பொறுத்திருந்து பாருங்கள்" என்று பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ள கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பி வருகிறது.
கடந்த சில தினங்களாகவே சசிகலா பெயர் மீடியாவில் பலமாக அடிபட்டு வருகிறது.. அதிலும், முதல்வர் எடப்பாடியார் டெல்லிக்கு சென்றுவிட்டு திரும்பியது முதல், சசிகலா சம்பந்தமான பேச்சுதான் விவாதங்களாக உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத், ஒரு இணைய தளத்திற்கு, பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் எடப்பாடியாரின் டெல்லி பயணம் மற்றும் சசிகலா அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி இருந்தார்.. அதன் சுருக்கம் இதுதான்:
எடப்பாடி பழனிசாமி
"அரசியல் ரீதியாக எதையும் விவாதிக்கவில்லை, பேசவில்லை என்று முதல்வர் சொல்லி இருப்பது அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. ஆட்சியில் அந்திசாயும் நேரத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி இனிமேல் தமிழ்நாட்டில் திட்டங்களை தொடங்கவும், அதனை நிறைவேற்றவும் காலம் வாய்ப்பு தராது.. பாஜகவும் அதை இவரிடத்தில் எதிர்பார்க்காது. அதனால், இவர் என்ன நினைத்து அங்கு போனாரோ, அது நடக்கவில்லை..
அஸ்தமனம்
சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்று சொல்வது, இவர் தப்பிப்பதற்காக சொல்லக்கூடிய வார்த்தைதான்.. சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு மிகப்பெரிய அரசியல் சரிவில் எடப்பாடி பழனிசாமி விழப்போகிறார்... சசிகலாதான் அந்த கட்சியை வழிநடத்த போகிறார்.. அது தான் நடக்கப்போகிறது.. ஓபிஎஸ் அதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியினுடைய அரசியல் அஸ்தமனமாக போகிறது... பொறுத்திருந்து பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக
இப்போது நம் சந்தேகம் என்னவென்றால், நாஞ்சில் சம்பத் திமுகவில் இருப்பதாக ஒருமுறை கூறியிருந்தார்.. "இன்று திராவிட இயக்கத்தின் தேவை மிக அதிகமாக இருக்கிறது... திமுகவில் அதிகாரபூர்வமாகவே இணையும் முடிவில்தான் இருந்தேன்... அதற்குள் கொரோனா வந்துவிட்டது... ஆனால், திமுகவில் அதிகாரபூர்வமாகவே இணைந்து மேடைகளில் பேசுவேன்" என்று ஒருமுறை சொல்லி இருந்தார் நாஞ்சில் சம்பத்.
கரைவேஷ்டி
அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலினின் ஒரு நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தும் கலந்து கொண்டிருந்தார்.. அப்போது திமுகவின் கரை வேஷ்டியை சம்பத்திடம், உதயநிதி தந்தார்.. பிறகு, "என் முடிவை சொல்லிவிட்டேன், இந்த வேஷ்டியை அணிவதும், அணியாததும் சம்பத் அண்ணனின் விருப்பம்" என்றார்.. சம்பத்தும், அந்த வேஷ்டியை புன்முறுவலுடன் பெற்றுக்கொண்டார். ஆனால், உரிய பதில் எதுவும் சொல்லவில்லை.. எனினும், இவர் எப்படியும் திமுகவில் தான் இணைய போகிறார் என்று ஒரு யூகம் தமிழக அரசியலில் உள்ளது.
மதிமுக
ஆனால், இன்று சசிகலாவை தூக்கி உச்சாணிக்கொம்பில் வைத்திருப்பதை பார்த்தால், மறுபடியும் அமமுகவுக்கே யூடர்ன் அடித்து வர போகிறாரோ என்ற டவுட் எழுகிறது.. நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பாதையை நாம் சற்றே திரும்பி பார்த்தால், அங்கே பல தமிழக கட்சிகள் நம் கண்ணுக்கு தெரிகின்றன.. ஆரம்பத்தில் திமுகவில் இயங்கிவந்த சம்பத், பிறகு மதிமுகவில் இருந்தார்.. அங்குதான் நீண்ட காலம் இருந்தார்.. வைகோவுடன் பணியாற்றினார்... பிறகு 2011-ல் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்கு ஜம்ப் ஆனார்.. அங்கே அவருக்கு துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் தரப்பட்டது.
சஸ்பென்ஸ்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா - தினகரன் அணியில் இணைந்தார். பிறகு அங்கிருந்தும் விலகிதான் தொடங்கிய இடமான திமுகவுக்கே வரப்போகிறார் என்றார்கள்.. கடைசியில் அதுவும் இல்லை போல தெரிகிறது.. எதற்காக இவர் சசிகலாவை மானாவரியாக புகழ்ந்துள்ளார்? என தெரியவில்லை.. 27-ம் தேதிவரை இதுவும் சஸ்பென்ஸ்தான்!