மீண்டும் தகிக்கும் நீட்.. மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?
சென்னை: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நீட் தேர்வு விவகாரம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.
நீட் தேர்வு தமிழகத்தில் மாணவர்களை உயிர்பலி வாங்கிய தேர்வு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களின் பெற்றோரையும் உயிர் பலி வாங்கிய தேர்வு என்றால் அதற்கு இரண்டு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் அனிதா, மற்றும் பிரதீபா என்ற இரு மாணவிகள் இந்த தேர்வினால் தங்களது இன்னுயிரை இழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பேரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி பிரதீபா. அரியலூர் மாவட்டம் குளுமூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு புறப்பட்ட இவர்களின் கனவுகளை முகிழ்த்து வந்தபோதே முறித்து போட்டது நீட் என்னும் தேர்வு. காங்கிரஸ் நீட் தேர்வை அமல்படுத்த எண்ணியது அதை செயல்படுத்தியது பாஜக. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை.
சு.சுவாமியின் செம மூவ்.. தினகரன் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் சவால்!
கண் துடைப்பு
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதன் பிறகு அவர் வழியில் நடக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி தலைமையிலான அரசு நீட் தேர்வை தலை வணங்கி வரவேற்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக அதை ரத்து செய்யவேண்டும் என்று வீராப்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினார்கள். ஆனால் அதன் பின்னர் அந்த தீர்மானம் என்ன ஆனது என்று மக்களுக்கு தெரிவிக்கவும் இல்லை, அதற்கான முயற்சிகளும் நடைபெற்றதாக அறிகுறிகளும் இல்லை.
தமிழக அரசின் முடிவு
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய பயிற்சி மையங்களை ஆங்காங்கே துவங்கியும் விட்டது தமிழக அரசு. ஆளும் கட்சியின் நிலை இதுவென்றால் பிரதான எதிர்கட்சியான திமுக ஆரம்ப நிலையில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. கடந்த வருடம் திருச்சியில் மிகபெரிய கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தியது அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உட்பட இப்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கலந்து கொண்டன.
இந்த நிலையில்தான் மக்களவை தேர்தல் வந்தது. தேர்தலில் சம்பிரதாயமோ அல்லது மனசாட்சி படி கொடுத்த வாக்குறுதிகளோ திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றது. அதையே திமுகவின் இப்போதைய எண்ணப்படி வாய்ப்பிருந்தால் மத்தியில் பிரதமராக உள்ள ராகுலும் தமிழகம் வந்து அறிவித்து விட்டார் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் இன்னொரு அனிதாவை நாங்கள் இழக்கமாட்டோம் என்றும்.
காங்கிரஸும் ஏமாற்றுதுங்க
இதில் நுட்பமாக கவனிக்கப் படவேண்டிய ஒன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கூறவில்லை. தமிழகமோ அல்லது பிற மாநிலங்களோ விரும்பினால் நீட் தேர்வு நடைபெறாது மாறாக அதற்கு ஈடாக மாநில அரசு நடத்தும் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வராதவரை உயர்கல்வியை பொறுத்த மட்டில் எப்படி மாநில அரசு முழு உரிமையோடு ஒரு தேர்வை நடத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதே வேளையில் திமுக அதற்கு அழுத்தம் கொடுக்கும் என்றே தெரிகிறது. அதாவது திமுக தேர்தலுக்கு பிந்தைய சூழலிலும் காங்கிரசோடு இணைந்தே இருந்தால் அழுத்தம் கொடுக்கும்.
திமுக நினைத்தால்
ஏனெனில் தேர்தலுக்கு பிந்தைய சூழலில் பாஜக ஆட்சி அமைக்க திமுகவின் ஆதரவு தேவை என்றால் நிச்சயமாக திமுக பாஜகவுக்கு ஆதரவு கொடுக்காது என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய முடியாது. அப்போது மீண்டும் ஒரு தேர்தலை மக்களிடம் திணிக்க திமுக நினைக்கவில்லை என்று காரணம் கூறக் கூடும். அப்போதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும். அந்த குரல் எப்படியாகும் என்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற மக்களவையில் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன. அப்போது காவிரி குறித்த உணர்வு திடீரென்று எழும்ப அதிமுக நாடாளுமன்றத்தை முடக்குகிறது. அதாவது பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த முடக்கம் அதி தீவிரமாக நடைபெற்றது. அதுபோல திமுகவும் குரல் கொடுக்கும் என்று நம்பலாம்.
அதிமுக என்ன செய்யும்
அடுத்தது அதிமுகவின் நிலையை பார்த்தோம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று தங்களது கூட்டணி கட்சிக்கு வலிக்காமல் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். அதுவும் இப்போது அதிமுக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தவில்லை மாறாக நீட் தேர்வை தமிழில் நடத்தத்தான் அதிமுக கோரிக்கை விடுத்தது என்று பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியுஸ் கோயல் கூறியுள்ளார் ஆகவே அதிமுகவின் நிலை என்னவென்று இப்போதே தெரிந்து விட்டது. பாஜக தங்களது நிலையில் தெள்ளத் தெளிவாக இருக்கின்றனர்.
தெளிவாக இருக்கும் பாஜக
நீட் தேர்வு ஒன்றுதான் சரியான மருத்துவர்களை உருவாக்கும். இதற்கு முன்னர் இருந்த தேர்வு முறையில் வந்த மருத்துவர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப் படவில்லை என்பது பாஜகவின் தீர்மானமான அபிப்பிராயம். இந்தியாவிலேயே மருத்துவ சுற்றுலாவுக்காக அதிக நோயாளிகள் வருவது தமிழகத்திற்குத்தான். மருத்துவ செலவு பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிக குறைவு என்பதுவும் சிறந்த சிகிச்சை இங்குதான் கிடைக்கிறது என்பதுவும் உள்ளங்கை நெல்லிக்கனி என அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான். ஆக மிகக்குறைந்த (பிற மாநிலங்களை ஒப்பிடுகையில்) கட்டணத்தில், சிறந்த சிகிச்சையை நீட் தேர்வை எழுதாமல் வந்த மருத்துவர்களே கொடுத்து வருகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்ட சங்கதி. அப்படி இருக்கையில் தான் பாஜக, தனது நேர் எதிரியான காங்கிரஸ் கொண்டு வர நினைத்த நீட் தேர்வை விடவே மாட்டோம் என்று தொங்கி கொண்டு இருக்கிறது.
என்ன நடக்கப் போகிறதோ
ஆக இந்த தேர்தலில் தமிழகத்தின் இரு பெரும் அணிகளான அதிமுக, திமுக என இரு அணிகளும் நீட் தேர்வை பற்றி பேசினாலும் அதில் திமுக அணி சற்று வலுவாக இப்போது குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதே வாக்காளர்களின் மன நிலை. அதிமுகவின் நிலை அப்பட்டமாக தெரிந்து விட்டது. சரி இது தேர்தலில் எதிரொலிக்குமா என்றால் நிச்சயம் எதிரொலிக்கும். காரணம் இந்த தேர்தலில் புதிய தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் கடந்த வருடம் நீட் தேர்வை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள் அல்லது நீட் தேர்வே வேண்டாம் என்று வேறு படிப்புகளை தேர்வு செய்தவர்களாக இருப்பார்கள். நீட் தேர்வு குறித்து கடந்த வருடமோ அல்லது இந்த வருடமோ அவர்களது குடும்பத்தில் பேச்சு வந்திருக்கும் என்றால் அவர்களது குடும்பத்தினரும் நீட் தேர்வை மையப்படுத்தியே வாக்களிக்கும் முடிவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி அவர்களின் முடிவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவோ எதிராகவோ திரும்பும் பட்சத்தில் அது வாக்குகளின் எண்ணிக்கையிலும் தாக்கத்தை உருவாக்கும் என்பதுதான் எதார்த்தம்.