ஓபிஎஸ் இந்த முறையும் வெல்லுவது ஏன் கடினம்?
-ஆர்.மணி
சென்னை: சில வாரங்கள் ஓய்ந்து கிடந்த முதலமைச்சர் பதவி சண்டை அஇஅதிமுக வுக்குள் மீண்டும் துவங்கி விட்டது.
திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை பூதாரமாக வெடித்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் (ஈபிஎஸ்) துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் (ஓபிஎஸ்) இடையே வார்த்தை போர் வெடித்தது. பெரியளவில் காரசாரமாக எதுவும் நடக்காது என்றே பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டது.
வரும் 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரம்தான் பூதாகரமாக கிளம்பியது. “முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாம் தீர்மானத்தாக வேண்டும். இது உடனடியாக நாம் செய்ய வேண்டியது” என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
அவரது கருத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி , மாநிலங்களவை உறுப்பினர் எம்.தம்பிதுரை போன்றோர் ஆதரித்தனர் என்று ”தி ஹிந்து” ஆங்கில நாளிதழ் தன்னுடைய நீண்ட செய்தி தொகுப்பில் தெரிவிக்கின்றது. செயற்குழுவில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் – கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் – ஈபிஎஸ் ஸை ஆதரித்த்ததாக வே பெரும்பாலான அச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஓபிஎஸ் ஸூக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி. மஜோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் மட்டுமே பேசியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
திடீரென்று முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சனை ஏன் கிளம்பியிருக்கிறது என்பது சற்று ஆச்சர்யமானதாக பார்க்கப் படுகின்றது. கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரதின கொடியை ஈபிஎஸ் கோட்டை கொத்தளத்தில் ஏற்றிய பின்னர் இதே விவகாரம் வெடித்தது. அமைச்சர்கள் ஈபிஎஸ் வீட்டுக்கும் ஓபிஎஸ் வீட்டுக்கும் மாறி மாறி சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். விவகாரம் சற்றே அடங்கியது. இப்போது மீண்டும் கிளம்பியிருக்கிறது.
குடைச்சல் கொடுப்பதுன்னு கோதாவில் குதிச்சாச்சு கோவிந்தா... ஓபிஎஸ் தேனி பயணம் திடீர் ரத்து!
ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்கள் கழித்து 2017, பிப்ரவரி 7 ம் தேதி திடீரென்று சசிகலா வுக்கு எதிராக தன்னுடைய போர் கொடியை தூக்கினார் அப்போதய முதலமைச்சர் ஓபிஎஸ். ஆனால் ஒரு வாரகாலத்தில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு போவதற்கு முன்பு ஈபிஎஸ் ஸை முதலமைச்சராக்கி விட்டுப் போனார். பின்னர் ஆறு மாத காலம் தன்னுடைய 'தர்மயுத்தத்தை’ நடத்திய ஓபிஎஸ் 2017 ஆகஸ்டில் மீண்டும் தமிழக அமைச்சரவையில் சேர்ந்து துணை முதலமைச்சரானார்.
பிப்ரவரி 7 ல் ’தர்ம யுத்தத்தை’ துவங்கிய போது, ஓபிஎஸ் சொன்னது இதுதான்; “ஆர்எஸ்எஸ் பிரமுகர் எஸ்.குருமூர்த்தி சொல்லித்தான் நான் 'தர்மயுத்தத்தை’ துவங்கினேன்” என்பதுதான். ஆகஸ்டில் மீண்டும் அமைச்சரானவுடன் சொன்னது. “பிரதமர் மோடி சொல்லித்தான் நான் மீண்டும் ஈபிஎஸ் அமைச்சரவையில் சேர்ந்தேன்”. வெளிப்படையாகவே யாருடைய ஆலோசனை, உத்திரவின் பேரில் தான் செயற்படுவதாக ஓபிஎஸ் கூறிய பதில்கள்தான் இவை.
இவையெல்லாம் சரி. ஏன் இப்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது? இவ்வளவு நாட்கள் அடக்கி வாசித்த ஓபிஎஸ் ஏன் இப்போது கலக குரல் எழுப்ப துவங்கியிருக்கிறார் என்பதுதான் கேள்வி. இதற்கு அஇஅதிமுக வுக்குள் இருக்கும் முக்கியஸ்தர்கள் சொன்ன பதில் இதுதான்; “எந்த சக்திகள் ஓபிஎஸ் 'தர்மயுத்தம் 1.0” துவங்கவும், பின்னர் அது அடங்கவும் காரணமாக இருந்தனவோ அதே சக்திகள்தான் இப்போதும் அவரை இயக்கத் துவங்கி கொண்டிருக்கின்றன. கட்சியும், ஆட்சியும் கிட்டத்தட்ட ஈபிஎஸ் ஸின் முழு கட்டுப் பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில் ஓபிஎஸ் கலக குரல் எழுப்புகிறார் என்றால் அது நிச்சயமாக மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவரை இயக்கிய சக்திகள் ஆதரவு இல்லாமல் இப்போது அவருக்கு சாத்தியப் படாது.
குறைந்த பட்ச அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு கூட இது நன்கு தெரியும்.” என்று இந்த கட்டுரையாளரிடம் கூறினார், ஓபிஎஸ் ஸின் முதல் தர்மயுத்த த்தின் போது அவருடன் இருந்த, முன்னாள் அமைச்சர் ஒருவர். இந்த முறையும் ஓபிஎஸ் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்கிறார் அவர். “முதல் தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ் ஸூடன் இருந்தவர்களில் ஓரிருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் இன்று ஈபிஎஸ் ஸூடன் இருக்கின்றனர்.
ஈபிஎஸ் இன்று தன்னுடைய அதிகாரத்தை ஆட்சியிலும், கட்சியிலும் நன்கு ஸ்திரப்படுத்திக் கொண்டு விட்டார். இந்த ஈபிஎஸ் ஸை வெல்லுவது ஓபிஎஸ் உட்பட எவருக்கும் அவ்வளவு சுலபமானதல்ல” என்று மேலும் கூறுகிறார் அவர். எப்படி பார்த்தாலும் ஓபிஎஸ் ஸின் தர்மயுத்தம் 2.0 வெற்றி பெறுவது மிக, மிக கடினமானது என்றே தற்போதைக்குத் தெரிகின்றது.