எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு!
சென்னை: ஒரு வழியாக நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குகிறேன் என அறிவித்து விட்டார். அவரை எம்ஜிஆர் அளவுக்கு சிலர் பில்டப் கொடுக்கின்றனர். ஆனால் அவரால் விஜயகாந்த் அளவுக்காவது ஒரு முத்திரை பதிக்க முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
அரசியலில் ஏறுமுகம் கண்டு தற்போது சரிவை சந்தித்துள்ள விஜயகாந்த்தான், ஒரு நடிகராக எம்ஜிஆருக்குப் பிறகு தமிழக மக்களால் அதிகம் வரவேற்கப்பட்டவர். அவர் அளவுக்கு ரஜினியால் முத்திரை பதிக்க முடியுமா என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
விஜகாந்த்துக்குக் கொடுத்தது போல ரஜினிக்கும் மக்கள் ஆதரவு கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக, அதிமுகவை விடுங்க.. ரஜினிகாந்த் சந்திக்க போகும் சவால்கள் என்ன.. எப்படி சமாளிப்பார்?
ஒருவழியா தொடங்கிட்டார்
தமிழக மக்களுக்கே இன்று ஒரு அதிசயம் நடந்து விட்டது. நீண்ட காலமாக அரசியல் வருகிறேன் என காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்து விட்டார். சினிமாவில் இருந்து வந்த ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. சினிமாவில் இருந்து வந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மாபெரும் வெற்றி கண்டனர். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி சினிமாவை போல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
கேப்டன் செல்வாக்கு
நாம் தமிழர் கட்சி சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் அரசியலில் வெற்றி பெற எதிர் நீச்சல் போட்டு கொண்டு இருக்கின்றனர். இதே சினிமாவில் பிரபலமாக இருந்து, அரசியலுக்கு வந்து ஏறுமுகத்துக்கு சென்று தற்போது சரிவில் இருக்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த.
இருவருக்கும் போட்டி
அரசியலில் சீமான், கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் ரஜினிக்கு போட்டி இருந்தாலும் விஜயகாந்துடன் ரஜினிக்கு இருக்கும் போட்டி முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஜினியும், விஜயகாந்தும் ஒரே காலத்தில் சினிமாவில் புகழ்பெற்றவர்கள்.
அமோக ஆதரவு
ரஜினியைபோல் காலம் தாழ்த்தாமல், மக்களை நம்பி தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்னும் கட்சியை 2005-ல் ஆரம்பித்தார் விஜயகாந்த். அவர் நம்பியபடியே மக்கள் அவரை கைவிடவில்லை. 2006 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலில் களம் கண்டபோது விஜயகாந்த் தவிர அனைவரும் தோல்வி அடைந்தாலும், எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளை பெற்றது தேமுதிக.
கைவிட்டாரே
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இவர் வர வேண்டும் என மக்கள் அந்த கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கை 2011 தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது. அந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 23 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் கிடைத்த பொன்னான வாய்ப்பை விஜயகாந்த் தக்க வைக்க தவறி விட்டார்.
கட்சி இருக்கா
சட்டசபையில் ஜெயலலிதாவுடன் மோதலுக்கு பிறகு அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது. மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து 2016 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த தேமுதிக படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. நாடாளுமன்ற தேர்தலிலும் இதே நிலைதான். அதன்பின்பு விஜயகாந்தின் சர்ச்சை பேச்சு, அவரது உடல் நலம் பாதிப்பு ஆகியவற்றால் தேமுதிக என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்ற அளவுக்கு கொண்டு போய் விட்டது.
வரவேற்பு இருக்குமா
மக்கள் அளித்த நல்ல நம்பிக்கையை விஜயகாந்த தக்க வைக்க தவறி விட்டார். அவரது மனைவி, மைத்துனரின் தவறான நடவடிக்கையும் அந்த கட்சி சரிய காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த விஜயகாந்துக்கு மக்கள் தொடக்கத்தில் அளித்த நல்ல வரவேற்பு ரஜினிக்கு கிடைக்குமா?
மக்கள் நம்பவில்லை
தற்போதும் மக்களின் மனநிலை மாற்று அரசியலை தேடுவதுபோல்தான் உள்ளது. தேமுதிக எந்த குறிப்பிட்ட மதமும், ஜாதியையும் சேர்ந்தது அல்ல என மக்கள் நம்பியதால் அக்கட்சிக்கு நல்ல ஆதரவு கொடுத்தனர். ஆனால் ரஜினி பாஜக பி டீம், அவர் இந்துத்வாவை சேர்ந்தவர் என ஒரு சில மக்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
அவர்கள் கருத்து என்ன
அதனால் அவருக்கு விஜயகாந்த்போல் மக்கள் வரவேற்பு அளிப்பார்களா என்பது தேர்தலில்தான் தெரிய வரும். இருந்தாலும் அவருக்கு விஜயகாந்த்போல் மக்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என ஒரு அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எதுவாக இருந்தாலும் 2021ல் தெரிந்து விடும்.