எல்லாத்துக்கும் அன்புமணிதானா? வேற தலைவர்களே பாமகவில் இல்லையா?.. எதிர்ப்புக் குரல்கள்
Recommended Video
சென்னை: அன்புமணியை விட்டால் கட்சியில் வேறு யாருமே இல்லையா? டெல்லின்னாலே அன்புமணி என்று ஆகிவிட்டதே எதனால்? என்று பாமகவிலேயே புகைச்சல் ஆரம்பமாகி உள்ளதாம்!
அதிமுகவிடம் பாமக ஒப்பந்தம் போட்டபோதே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கும் சேர்த்துதான் கையெழுத்திட்டது. இப்போது அந்த ஒரு சீட் கொடுக்கப்படவுள்ளது. ஆனால் அதை அன்புமணிக்கு கொடுக்க பாமக திட்டமிடுவதாக தெரிகிறது.
இங்குதான் பாமகவினர் அப்செட்டாகியுள்ளனராம். ஏன் எப்போதும் அன்புமணியே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தப்படுகிறார். வேறு தலைவர்களே கட்சி தலைமைக்கு கண்ணில்படவில்லையா? இப்படியே ஒவ்வொரு முறையும் அன்புமணியையே தேர்ந்தெடுத்து கொண்டிருந்தால், மக்கள் என்னதான் நினைப்பார்கள்? என்பதுதான் பாமக தரப்பினரின் கேள்வி.
இருக்கிற ஒரு சீட் யாருக்குதான் போக போகுது?.. திரும்பவும் எடப்பாடிக்கு சிக்கல்!
மத்திய அமைச்சர்
அன்புமணியை பொறுத்தவரை திறமைசாலி. படித்த அறிவாளி. ஏற்கனவே ராஜ்யசபாவுக்கு போய் விட்டார். லோக்சபாவிலும் இருந்து விட்டார். அமைச்சர் பதவியும் வகித்து விட்டார். பதவியில் இருந்த போது, இவர் செய்த சேவையையும் நாட்டு மக்கள் மறந்துவிட முடியாதுதான். ஆனால் இனி அடுத்தடுத்த தலைவர்களை உருவொக்கி வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பாமகவுக்கு இருக்கிறதே.. இதை பற்றி அந்த கட்சி தலைமை எப்போதும் சிந்திப்பது இல்லை என்றே தெரிகிறது.
வாரிசு அடையாளம்
எப்படி ராமதாஸின் வாரிசாக அன்புமணி வார்த்தெடுக்கப்பட்டாரோ அதுபோலவே அன்புமணியின் வாரிசும் அடையாளம் காட்டப்பட வேண்டி உள்ளது. அந்த வாரிசையும் அவர்களது குடும்பத்துக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படாமல் கட்சியில் இருந்து தேர்ந்தெடுத்தால் கட்சியும் பலப்படும், வாக்கு வங்கியும் சரியாது, ராமதாஸ் அன்புமணிக்கும் நல்ல பெயர் நிச்சயம் கிடைக்கும்.
இளைய தலைமுறை
தருமபுரியில் அன்புமணி தோற்றுவிட்டார் என்பதற்காக இந்த எண்ணம் பாமகவினருக்கோ, பொதுமக்களுக்கோ தோன்றவில்லை. அன்புமணி தோற்றாலும், தொகுதி மக்களிடம் நல்ல பெயரைதான் சம்பாதித்து வைத்துள்ளார். ஆனால், இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உள்ளது.
பாமகவின் தேவை
அதை விட முக்கியமாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பில் அன்புமணி உள்ளார். எனவே அவரது தேவை பாமகவின் தமிழக வளர்ச்சிக்குத்தான் அதிகமாக தேவை. இந்நேரம் வேல்முருகன் கட்சிக்குள் இருந்திருந்தால் நிலைமை வேறு, அல்லது குரு உயிரோடு இருந்திருந்தாலும் இந்த நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
ஜிகே மணி
இப்போது பாமக என்றாலே ராமதாஸ், அன்புமணி என்று ஆகிவிட்டது. ஏதாவது முக்கிய அறிவிப்பு என்றால் கட்சி தலைவர் ஜிகே மணி அறிக்கை மூலம் தலைகாட்டுகிறார். அவ்வளவுதான்.. இந்த நிலைமையை மாற்ற வேண்டியது உடனடி அவசியமாகிறது. அன்புமணியையும் தாண்டி வேறு தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அனுபவம்
இந்த முறையும் ராஜ்ய சபா சீட்டுக்காக அன்புமணியே முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அனுபவம், திறமை வாய்ந்த மற்ற தலைவர்களை உயரத்தில் வைத்து பார்க்க வேண்டிய பெருந்தன்மையும் பாமக தலைமையிடம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரி
ராஜ்யசபா சீட் தருவதாக இருந்தால் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவுக்கு கொடுக்கலாம். திறமையானவர், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்காக அமைச்சர் பதவியைக் கூட பாஜகவிடம் கேட்டுப் பெறலாம். தமிழகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். வேலு, அனைவராலும் ஏற்கபடக் கூடியவரும் கூட.
கேலி பேச்சு
இவரைப்போல மேலும் சிலரும் பாமகவில் வெளிச்சம் படாமல் உள்ளனர். அவர்களில் யாருக்காவது தரலாம். இதன் மூலம் பாமகவின் இமேஜும் உயரும், வாரிசு அரசியலை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள் என்ற அவப்பெயரும் போகும். அன்புமணியை விட்டா பாமகவில் ஆளே இல்லை என்ற கேலிப் பேச்சையும் தவிர்க்கலாம்.
யோசிக்குமா பாமக!