"ஐயா, ஏன் இப்படி திடீர்னு".. அதிர்ந்து போய் கேட்ட அன்புமணி.. அடுத்த லெவலுக்கு போகும் பாமக போராட்டம்!
பாமக தனித்து போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: ஒருவழியாக திமுக - பாமக இடையேயான மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையின் கதவு இறுக்கமாக மூடப்பட்டுவிட்டது.
உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை கேட்டு வருவதால், அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.. அதேசமயம், திமுகவுடன் ஒரு மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்பட்டது.
சென்ற தேர்தலை போலவே, இந்த முறையும் மூத்த தலைவர் துரைமுருகன் இதற்காக முயற்சி எடுத்து வருவதாகவும், அன்புமணி ராமதாசுக்கும் இதில் விருப்பம் இருப்பதாகவும் அதனாலேயே திமுகவுடன் கூட்டணி வைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.
ஆனால், கொஞ்சம் நஞ்சம் இருந்த எதிர்பார்ப்பை திமுக நேற்று முன்தினம் முரசொலியில் கட்டுரை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.. "பகல் கனவு காணும் ராமதாஸ்" என்ற தலைப்பில் வந்திருந்த கட்டுரையை பார்த்து ராமதாஸ் அதிர்ந்தே போய்விட்டாராம். இதற்கு பிறகுதான் நேற்று ஒரு காரசாரமான அறிக்கையை வெளியிட்டார்.
அதில், "இட ஒதுக்கீடு என்ற கனியை கொடுத்திருக்கிறேன்... அதை சுவைத்துப் பாருங்கள் என்று கலைஞர் கூறினார். அதுபற்றி உடனடியாக கருத்து தெரிவித்த நான் அதை அழுகிய கனி என்று விமர்சித்தேன். அப்போது அழுகிய கனி என்று விமர்சிக்கப்பட்ட இட ஒதுக்கீடு இப்போது மட்டும் இனிக்குமா?" என்று ராமதாஸ் இடித்துரைந்தார். மேலும், "பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் யாருடைய உரிமையையும் தட்டிப் பறிக்க நினைக்க வில்லை. அப்படி செய்வது அறமல்ல... நாங்கள் கேட்பது எங்களுக்கான உரிமையைத் தான்" என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை பார்த்ததும் அன்புமணி சற்று அதிர்ந்துதான் போனாராம்... "கூட்டணி பேசிட்டிருக்கேனே.. ஏன் இப்படி திடீர்னு அறிக்கை விட்டுட்டீங்க?" என்று கேட்கவும், அதற்கு பிறகுதான் முரசொலியில் வந்த கட்டுரையை டாக்டர் ராமதாஸ் சுட்டி காட்டினாராம்.
"அன்புமணியின் அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டதுடன், திமுகவுடன் கூட்டணி கதவும் மொத்தமாக அடைக்கப்பட்டுவிட்டது.. அதேபோல, மறுபடியும் வன்னியர் போராட்டத்தை அறிவித்து அதிமுகவுடனும் சிக்கலை இழுத்து கொண்ட வருகிறது பாமக" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.