பாமக போட்ட "அந்த" 2 கண்டிஷன்கள்.. கிறுகிறுத்து போன அதிமுக.. கூட்டணியில் விரிசலா.. என்னாகும்?
அதிமுக கூட்டணியுடன் பாமக நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அதிமுக - பாமக கூட்டணி தொடர்ந்து இழுபறியில் உள்ளது.. மொத்தம் 2 கண்டிஷன்களை பாமக தரப்பில் கோருவதாகவும், அது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், பாமக தன்னுடைய தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.. மற்றொருபுறம், கூட்டணி மும்முரத்தையும் காட்டி வருகிறது.
சென்ற முறை எம்பி தேர்தலில், அதிமுக முதல் கட்சியாக பாமகவை உள்ளே இழுத்து போட்டது.. மற்ற கூட்டணி கட்சிகள் பொறாமைப்படும் அளவுக்கு லட்டு போல சீட்டுக்களை வாரி வழங்கியது.. ஆனால், இந்த முறை அதற்கான அறிகுறியே இவ்வளவு நாள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போதுதான் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி உள்ளது.
அமைச்சர்கள்
கூட்டணியை உறுதி செய்ய, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசினர்.. அப்போதுதான் 2 கண்டிஷன்களை ராமதாஸ் தரப்பு முன்வைத்துள்ளது.. ஒன்று, தங்களுக்கு துணை முதல்வர் பதவி, மற்றொன்று அதிக இடங்கள், அதிலும் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் செய்ய வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.. இதைதவிர, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
கோரிக்கைகள்
இதையெல்லாம் கேட்டு என்ன பதில் சொல்வதென்றே தரியாமல் அமைச்சர்கள் சற்று திணறியதாக தெரிகிறது.. ஆனால், உறுதியான பதிலையும் சொல்லவில்லை போல தெரிகிறது. பிறகு, வரும் 27ம் தேதி அதிமுக பிரசார பொதுக்கூட்டத்திற்கு, டாக்டர் ராமதாஸை அழைத்து விட்டு வந்துள்ளனர். ஆனால், பாமகவுக்கு எத்தனை தொகுதி, எந்நெந்த தொகுதி என எந்த முடிவும் எடுக்காத நிலையில் பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ராமதாஸ் அமைச்சர்களிடம் சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
பாஜக
இது ஒருபுறம் இருக்க, பாஜகவுக்கு 60 சீட் தந்தால், தங்களுக்கும் அதே அளவு சீட் தர வேண்டும் என்று பாமக கேட்டு வருவதாக தெரிகிறது.. சென்ற முறை பாமகவுக்கு கொடுத்ததை தங்களுக்கும் தர வேண்டும் என்று தேமுதிக பிடிவாதம் காட்டியதைபோல, இந்த முறை பாமக, சீட்களை கேட்டு வருவதாக கூறுகிறார்கள். கூட்டணிகளுக்கே இந்த அளவுக்கு சீட்டுகளை அதிமுக ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லை.. அதேபோல, தேர்தலுக்கு முன்பாகவே இடஒதுக்கீடு சாத்தியமா என்றும் தெரியவில்லை.
சாத்தியமா?
ஏற்கனவே, முதல்வர், துணை முதல்வர் என்று இருக்கும்போது, இன்னொரு துணை முதல்வர் பதவியை அதிமுக மேலிடம் வழங்குமா என்றும் தெரியவில்லை.. ஆக மொத்தம் பாமக கேட்ட கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேறுமா என்பது சந்தேகம்தான் என்பதால், அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது பெருத்த கேள்விக்குறியாகி வருகிறது!