துரைமுருகன் சொல்றதை பார்த்தா.. அப்ப "அந்த" கட்சிதான் வர போகுதா.. அதிமுகவுக்கு காத்திருக்கும் வெடி!
திமுகவில் சில கூட்டணி இணையலாம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்
சென்னை: ''திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது'' என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சொல்லி உள்ளதுதான் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வருகிறது.
வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிந்து விட்டது... இதனால் அரசின் கோப்புகளை இனி அதிகாரிகள் கிடப்பில் போட்டு விடுவர்... அனைவரையும் இது பாதிக்கும்.
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எம்எல்ஏ தேர்தலில் சீட்கள் போதவில்லை என வெளியேறுவர்... அங்கே இருக்கும் சிலரும் திமுக கூட்டணிக்கு வருவர்... இது சகஜம் தான்... இதனால் திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது" என்றார்.
துரைமுருகன் சொல்றதை பார்த்தா.. அப்ப "அந்த" கட்சிதான் வர போகுதா.. அதிமுகவுக்கு காத்திருக்கும் வெடி!
யூகங்கள்
கூட்டணியை பற்றி துரைமுருகன் பேசிய பேச்சு பலவித யூகங்களை கிளப்பி விட்டுள்ளது.. துரைமுருகன் யாரை சொல்கிறார்? யார் வெளியேறுவர்? யார் கூட்டணிக்குள் வருவர்? என்கிறார் என்று ஒரு தரப்பு மண்டை குழம்பி கொண்டிருக்கிறது.. என்றாலும், பெரும்பாலானோர், பாமகவைதான் துரைமுருகன் சொல்லி இருப்பார் என்று அனுமானமாக சொல்கிறார்கள். ஏனென்றால், திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்த கையுடன் பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே இவதுரைமுருகன் முயற்சிப்பதாக ஒரு செய்தி கசிந்தது.
துரைமுருகன்
இப்போது மட்டுமில்லை.. கடந்த எம்பி தேர்தலின்போதும், பாமக தரப்பு திமுகவுடன் இணைய காத்திருந்தது.. ஆனால் துரைமுருகனை பேச்சுவார்த்தையில் இறக்காமல், கட்சி மேலிடம் சொந்த தரப்பை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மேலும் வேறு சில காரணங்களுக்காக கூட்டணியில் இருந்து பின்வாங்கியதாகவும் முணுமுணுக்கப்பட்டது.. ஒருவேளை துரைமுருகன் அப்போதே களத்தில் நேரடியாக இறங்கியிருந்தால், இந்நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும். அதனால், இந்த முறையேனும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக துரைமுருகனே பாமக தரப்பை இழுக்கும் முயற்சியை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.
தேமுதிக
வழக்கமாக தேர்தல் என்றாலே புதிய கூட்டணிக்கான முயற்சிகளை இவர் மேற்கொள்வார்.. அப்படித்தான் கடந்த தேர்தலில் தேமுதிகவையும் கொண்டு வர முயற்சித்தார்.. ஆனால், அவர்கள் அதிமுகவுடனும் பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்துகிறார்கள் என்று தெரிந்ததுமே மீடியாவில் படார் என விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார்... இந்த கோபம் தேமுதிகவுக்கு இன்னும் துரைமுருகன் மீது உள்ளது.. இப்போது பாமகவை திமுக பக்கம் இழுக்கவும், துரைமுருகன் மீது இன்னும் செம கடுப்பில் இருக்கிறதாம் தேமுதிக.
மூத்த தலைவர்
அதுமட்டுமல்ல, பாமகவின் மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் துரைமுருகனை சந்தித்தும் பேசினாராம்.. அப்போது ஒரு சில கண்டிஷன்களை பாமக தரப்பில் போட்டதாகவும், அதெல்லாம் ஒருபிரச்சனையே இல்லை என்று துரைமுருகன் நம்பிக்கை சொன்னதாகவும் கூறப்படுகிறது.
வடமாநிலம்
வன்னிய சமுதாய வாக்குகளை துரைமுருகன் ஓரளவு பெற்றுவிடுவார் என்றாலும், வடமாநில பெல்ட்டை மொத்தமாக வளைக்க பாமக தங்களுடன் இருப்பதுதான் சரியென்றும், மெஜாரிட்டியை நிரூபிக்க அது வசதியாக இருக்கும் என்றும் ஸ்கெட்ச் போடப்பட்டு வருகிறது.. திமுக தரப்பு மீது ஒருசில அதிருப்தி பாமக தலைமைக்கு இருந்தாலும், ஒரே சமுதாய உணர்வின் அடிப்படையில் துரைமுருகனை எப்போதுமே பாமகவுக்கு ரொம்ப பிடிக்கும்.
கண்டிஷன்கள்
இப்போதைய அரசியல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.. இருக்கும் கூட்டணி கட்சிகளை வைத்தே திமுக தனி மெஜாரிட்டியுடன் உறுதியாக வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டாலுட்ம, பாமக கூட்டணியில் இணைந்தால் 20 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க திமுக முன்வருமா? என்று தெரியவில்லை.. பாமகவும், எத்தகைய கண்டிஷன்களை போட்டு கொண்டு கூட்டணியில் இணைய போகிறது என்றும் தெரியவில்லை.. அன்புமணியை முதல்வர் ஆக்குவது என்று பல காலம் கனவில் இருக்கும் பாமக, குறைந்தபட்சம் துணை முதல்வர் பதவியை அவருக்காக கேட்கும் என்றும் தெரிகிறது.
சாதகம் - பாதகம்
ஆனால், இதை பற்றி ஒருசில அரசியல் நோக்கர்கள் சொல்லும்போது, "ஒருவேளை திமுகவில் பாமகவில் இணைவது ஓரளவு சாதகம்தான்.. ஆனால், பாமகவின் அரசியல் கூட்டணி கொள்கை முறையற்றது... கூட்டணியில் தொகுதி பங்கீடு, ராஜ்ய சபா எம்பி போன்றவைகளை அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள சூழலில், அவர்கள் மாற்றுக் கூட்டணியை அவர்கள் எப்படி விரும்பலாம்? அப்படி விரும்பினால் அது அவர்களின் நிலையற்ற அரசியல் தன்மைதானே? பாமகவை சேர்த்து கொண்டால், அவர்களுக்காகவே சில விஷயங்களை திமுகவும் விட்டுக்கொடுக்க வேண்டி வரும்... இது திமுகவிற்கு நடுநிலையாளர்களின் ஆதரவை நிச்சயம் பாதிக்கும்" என்கிறார்கள்.