கர்நாடகாவிற்காக போராடும் நிர்மலா சீதாராமன்.. தமிழகத்திற்காக பொன் ராதாகிருஷ்ணனும் போராடுவாரா?
மேகதாது பிரச்சனையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு ஆதரவாக போராடுவாரா என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
சென்னை: பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுவது போல தமிழகத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு ஆதரவாக போராடுவாரா என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
மேகதாது அணை விவகாரம் தற்போது பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை காவிரி விவகாரத்தில் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
இந்த முறையும் மேகதாது அணை திட்டத்தின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து தமிழர்களை வஞ்சித்துள்ளது. அதோடு இல்லாமல் பாஜகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அமைச்சர்கள் ஆதரவு
கர்நாடகாவை சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர்கள் சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், அனந்த குமார் ஹெக்டே, ரமேஷ் ஜிகாஜினாகி ஆகியோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ் என்ற வேறுபாடு இல்லாமல் கர்நாடக எம்.பிக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இதில் குரல் கொடுக்கிறார்கள்.
நிர்மலா சீதாராமன்
முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவிற்கு ஆதரவாக மேகதாது திட்டத்திற்கு ஆதரவு அளித்து போராட்டம் செய்ய உள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபாவிற்கு உறுப்பினர் ஆனவர். அதனால் கர்நாடகாவிற்கு ஆதரவாக இவர் போராட்டம் செய்ய உள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் என்ன செய்வார்
அதே சமயம் மக்களால் லோக் சபாவிற்கு தேர்வு செய்யப்பட தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதுவரை மேகதாது விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என்ற கருத்தை மட்டும்தான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால் இதுவரை அவர் மத்திய அரசை நேரடியாக சந்தித்து அழுத்தம் அளித்ததாக தெரியவில்லை.
நேரடியாக செய்யலாம்
தமிழகத்தில் இருந்து பாஜக சார்பாக தேர்வான ஒரே எம்.பி பொன் ராதாகிருஷ்ணன் மட்டும்தான். கர்நாடக எம்.பிக்களின் போராட்டத்தில் ஈடுபட போகும் பல முக்கிய எம்.பிக்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்தான். அதனால், பொன் ராதாகிருஷ்ணன் நேரடியாக இவர்களிடம் பேசி, இவர்களின் போராட்டத்தை வாபஸ் வாங்க வைக்கலாம். குறைந்தபட்சம் தமிழக மக்களின் பிரச்சனைகளையாவது புரிய வைக்கலாம். அதற்கான முன்னெடுப்புகளை அவர் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
போராட்டம் செய்வாரா
நிர்மலா சீதாராமன் கர்நாடகாவிற்கு ஆதரவாக போராட்டம் செய்யும் போது, தமிழக மக்களின் ஆதரவில் வெற்றிபெற்று அமைச்சர் ஆகியிருக்கும் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக மக்களுக்காக போராட்டம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.