"அண்ணி"யால் மறக்கவே முடியாத "அந்த" சம்பவம்.. என்ன ஆனாலும் சரி.. பளீர் தேமுதிக.. மகிழ்ச்சி அதிமுக!
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை
சென்னை: தேமுதிகவை உள்ளே கொண்டு வர அந்த கட்சி இப்போது வரை முயற்சித்து கொண்டிருக்கிறதாம்.. ஆனால், பிரேமலதாதான் அதற்கு பிடிகொடுக்காமல் நழுவி கொண்டிருக்கிறாராம்.. காரணம் அந்த ஒரு சம்பவம்தான்..! "எத்தனை வருஷமானாலும் சரி, எங்க அண்ணியால் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது" என்று மனம் நொந்து சொல்கின்றனர் தேமுதிகவினர்.
இப்படி ஒரு இழுபறி கூட்டணிகளில் இதுவரை இருந்ததில்லை.. இன்னும் ஒரு கூட்டணிகூட முடிவாகாமல் உள்ளது.. அதிலும் தேமுதிக நிலைமை என்னவென்றே இப்போது வரை உறுதியாக சொல்ல முடியவில்லை. முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கட்சியாகவே அது தென்பட்டு வருகிறது..
பிரேமலதா இதுவரை பேசிய ஆவேச பேச்சு எதுவுமே அதிமுக தலைமையிடம் எடுபடவில்லை... அதையும் மீறி, விஜயகாந்த்துக்காக அக்கட்சியுடன் கூட்டணியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுக தலைமை இறங்கியது..
முரண்பிடிக்கும் தேமுதிக-' ராஜ்யசபா சீட்' மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு
ராஜ்ய சபா சீட்
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேசியும் பிரயோஜனம் இல்லாத நிலையில், நேற்றெல்லாம் தேமுதிகவுக்கு கெடுவும் தரப்பட்டது. பாமகவுக்கு ஒதுக்கும் அளவுக்கு சீட் தங்களுக்கும் ஒதுக்க வேண்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும், என்பது தேமுதிகவின் ஒரே பிடிவாதமாக இருக்கிறது.. பாமக கேட்ட அந்த 23 தொகுதிகள் லிஸ்ட்டில் தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகளும் கிட்டத்தட்ட 10-க்கு மேல் இருப்பதால், அந்த தொகுதிகளிலும் முரண்டு பிடித்து வருகிறது.
ஆலோசனை
இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த் வீட்டில் திடீரென ஒரு ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. பிரேமலதா, சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு பேசினர்.. ஒன்று திமுக அணியில் சேருவது, அல்லது தனித்து போட்டியிடுவது என்று பேசி உள்ளனர்.. இறுதியில், "முதல்வர் விஜயகாந்த்" என்று பூடகமான ட்வீட்டை சுதீஷ் பதிவிட, அது மேலும் பற்றிக் கொண்டு எரிந்தது.
கூட்டணி
இந்த சமயத்தில்தான், திமுக தரப்பின் முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர் தேமுதிக தலைமையிடம் பேசி உள்ளார். கூட்டணிக்கு வருமாறும் அழைத்துள்ளார்.. அதற்கு பிரேமலதாவோ, ஏற்கனவே திமுக கூட்டணி நிரம்பி வழிகிறது.. ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கே சீட் பிரச்சனை இருக்கிறது.. இழுபறியும் நீடிக்கிறது.. நாங்க அங்கே வந்தால் மட்டும் எங்களுக்கு என்ன தந்துவிட போகிறீர்கள்? எந்த அளவுக்கு எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
இதற்கு அந்த மூத்த தலைவரோ, "அந்த கவலை ஏன் உங்களுக்கு? அதை நாங்க பார்த்துக்கறோம்.. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்து அந்த சீட்டை உங்களுக்கு ஷேர் செய்கிறோம்.. பேசாமல் கூட்டணியில் வந்து சேருங்க.. இது ஒன்னுதான் உங்க வேலை" என்று சமாதான பதிலளித்துள்ளதாகவும் தெரிகிறது... இந்த பேச்சு அப்படியே நிற்கிறதாம்.. மேற்கொண்டு தேமுதிக என்ன முடிவு எடுக்குமோ தெரியாது.
திமுக
ஆனால், திமுக கூட்டணிக்கு ஓரளவுதான் வாய்ப்பு இருக்கும் என்று தெரிகிறது.. அதிமுக கூட்டணியில் இருந்தால்தான், கடந்த முறை கொடுக்காமல் போன அந்த ராஜ்ய சபா சீட்டை இந்த முறையாவது கேட்டு பெற முடியும் என்று பிரேமலதா நினைக்கிறார்.. அதுபோக, திமுகவில் கடந்த எம்பி தேர்தலின் போது, அளவுக்கு அதிகமாக அவமானப்படுத்திவிட்டார்கள் என்ற கோபமும் இன்னும் பிரேமலதாவுக்கு இருக்கிறதாம்.
துரைமுருகன்
துரைமுருகனை நம்பி கூட்டணி பேசபோனால், இரு பக்கமும் பேச்சுவார்த்தை என்பதை மீடியாவில் சொல்லி தேமுதிகவை அசிங்கப்படுத்திவிட்டாரே என்ற வருத்தம் பிரேமலதாவுக்கு உள்ளதால், அவ்வளவு சீக்கிரம் அந்த சம்பவத்தை மறக்கவும் முடியாது என்கிறார்கள்.. இந்த முறையும் பேச்சுவார்த்தைக்கு போய், மறுபடியும் அசிங்கப்படுத்திவிட்டால் என்னாவது? என்ற குழப்பமும் உள்ளதாம். இதுக்கு பேசாமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, இருக்கிற மரியாதையை காப்பாற்றி கொள்வதே சிறந்தது என்ற முடிவையும் தேமுதிக யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக கோட்டை
திமுக மீது நம்பிக்கை இல்லாததுபோலவேதான், அதிமுக மீதும் தேமுதிகவுக்கு நம்பிக்கை இல்லை.. கடந்த தேர்தலைவிட இந்த முறை அதிமுக மீது நிறைய அதிருப்தி உள்ளது.. பிரச்சனைகள் உள்ளது.. உட்கட்சி பூசல் உள்ளது.. சசிகலாவுடனான மோதல் உள்ளது.. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விஷயங்களில் மக்களின் கோபத்தையும் சம்பாதித்துள்ளது.. இப்படி இருக்கும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், மக்களின் அதிருப்தி தங்கள் மீதும் திரும்பி விடக்கூடும் என்பதையும் தேமுதிக யோசித்து வருகிறது. இன்னும் ஒருமுடிவும் எட்டப்படாததால், பெருங்குழப்பத்தில் உள்ளது விஜயகாந்தின் தேமுதிக..!