"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி!!
சென்னை: நான் தூத்துக்குடிக்கு போனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்.. இது 2018ம் ஆண்டு பேசிய பேச்சு.. நான் தூத்துக்குடிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. இது இப்போது பேசிய பேச்சு.. இரண்டையும் பேசியவர் ஒருவரேதான்.. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Recommended Video
ரஜினிகாந்த் எப்பவுமே ஒரு கேள்விக்குறிதான். தெளிவில்லாத தனது செயல்பாடுகளால் எப்போதுமே எல்லோரையும் ஒரு வித குழப்பத்திலேயே வைத்துள்ளார்.
இப்போது ஒரு புதுக் குழப்பம். அதாவது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக இவர் பேசிய பேச்சுக்காக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டத்தை மதிப்பவர்
சட்டத்தை மதிப்பவர், சட்டப்படியே நடப்பவர், சட்டம் ஒழுங்கு குறித்து அக்கரை கொண்டவர் என்பதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி பக்காவாக விளக்கம் கொடுப்பார் என்றுதான் அனைவருமே கருதினர். இதனால் தூத்துக்குடியிலும் ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மேலும் தூத்துக்குடி தொடர்பாக ரஜினி கடந்த 2018ம் ஆண்டு அளித்த கோபாவேச பேட்டியும் கூட வைரலாகி வந்தது. மறுபடியும் அதை மக்கள் நினைவுபடுத்தி பார்த்து வந்தனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கெடும்
இந்த நிலையில் நான் அங்கு வர முடியாது. வந்தால் ரசிகர்கள் கூடி விடுவார்கள். கூடினால் சட்டம் ஒழுங்கு ஏற்படும். எனவே நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு நான் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி ஆணையத்தில் திடீரென ஒரு மனு செய்துள்ளார் ரஜினிகாந்த். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரித்தால் விளக்கம் தருவேன்
சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் தனது வீட்டுக்கு வெளியே தெருவில் வைத்து அளித்த ஒரு பேட்டியின்போது கூட , ஆணையம் என்னை விசாரித்தால் நான் அங்கு முறைப்படி விளக்கம் தருவேன் என்று சிரித்தபடி கூறியிருந்தார் ரஜினி. அப்படிப்பட்டவர் ஏன் தூத்துக்குடிக்குச் சென்று விளக்கம் தர யோசிக்கிறார் என்று புரியவில்லை. தான் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று அவர் கூறுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2018ல் ஒரு பேச்சு
2018ம் ஆண்டு மே 30ம் தேதி காலை எட்டரை மணி இருக்கும். தூத்துக்குடிக்குக் கிளம்பினார் ரஜினிகாந்த். அப்போது போயஸ் தோட்டத்தில் தனது வீட்டுக்கு வெளியே வழக்கம் போல தெருவில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்கிறேன். நான் வந்து பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவர்கள் என்று சந்தோஷமாக கூறி விட்டுக் கிளம்பினார் ரஜினிகாந்த்.
டோட்டல் முரண்பாடு
ஆனால் இப்போது அவர் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ள விஷயம் அப்படியே முரண்பாடாக உள்ளது. அதாவது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப் பார்த்தால் அமைதி அடைவார்கள், ஆறுதல் பெறுவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறிய ரஜினி, இப்போது தான் வந்தால் ரசிகர்கள் திரள்வார்கள், திரண்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று கூறியிருப்பது அந்த ரசிகர்களை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
ரசிகர்கள் நல்லவர்களாச்சே
ரஜினி ரசிகர்கள் என்ன வன்முறையாளர்களா.. அல்லது ரஜினிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் கலவரம் செய்யக் கூடியவர்களா என்று தெரியவில்லை. ரஜினி வந்தால் அவர்கள் மகிழ்ச்சி தானே அடைவார்கள்.. தலைவா என்று குரல் கொடுத்து உற்சாகம்தானே அடைவார்கள்.. அப்படிப்பட்டவர்கள் ஏன் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று புரியவில்லை. தெரிந்தோ தெரியாமலே தனது ரசிகர்களை ரஜினிகாந்த்தே தவறாக சித்தரித்து விட்டதாகவே தெரிகிறது.
ஜாலி டிரிப்!
2018ம் ஆண்டு கூட ரசிகர்கள் அதிகளவில்தான் கூடினார்கள். உண்மையிலேயே கட்டுக்கடங்காத கூட்டம்தான் அது. ரஜினி கூட கார் மேலே முகத்தைக் காட்டி கை அசைத்து, சிரித்தபடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர்களும் தலைவா என்று அடிக்குரலில் கத்தி செல்பியும் எடுத்துக் கொண்டனர். துயர சம்பவத்தில் பங்கெடுக்க சோகத்துடன் வந்தது போலவே தெரியவில்லை. அப்படி ஒரு உற்சாக மனநிலையில்தான் ரசிகர்கள் இருந்தனர்.
அப்ப நல்லா இருந்துச்சே
ரஜினியும் கூட கூட்டத்தைப் பார்த்துப் பூரித்துப் போகவே செய்தார். அவ்வளவு பரபரப்பான பதட்டமான நிலையிலும் கூட ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால், இப்போது தான் வந்தால் ரசிகர்கள்கூடுவார்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினி கூறியிருப்பது முற்றிலும் ஆச்சரியமாக உள்ளது.
பிரச்சாரம் என்னாகும்
இப்படி ஒரே ஒரு இடத்திற்கு தான் போனாலே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றால் இவர் கட்சி ஆரம்பித்த பிறகு எப்படி ஊர் ஊராகப் போவார்.. மக்களை எப்படி சந்திப்பார்.. இவர் போகும் இடமெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் தமிழகம் என்னாவது என்ற கவலையும் அயர்ச்சியும் மக்களுக்கு வருகிறது! ரஜினி பாஷையில் சொல்வதானால் நமக்கு இப்பவே தலையெல்லாம் சுத்துதே!