ராகவேந்திரா கல்யாண மண்டபம் தற்காலிக மருத்துவமனையாகுமா.. ரஜினி முன் வருவாரா?
சென்னை: நடிகர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் கொரோனாவைரஸ் நிவாரணத்திற்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற முன்வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அதேபோல நடிகர் விஜய் உள்ளிட்ட பலருக்கும் கூட இதுபோன்ற கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவை உள்ளன. அவர்களும் கூட இதேபோல செய்ய முன்வந்தால் அவசர காலத்திற்கு அது பெரிதும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சிலர் தங்களது இருப்பிடங்களை, வசிப்பிடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக அல்லது தனிமைப்படுத்தலுக்குத் தேவையான இருப்பிடங்களாக மாற்றிக் கொள்ள முன்வந்துள்ளனர்.
கொரோனா உக்கிரம்
உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் கொரோனாவைரஸுக்கு எதிராக மக்களும், அரசுகளும், மருத்துவர்களும் கடுமையாக போராடிக் கொண்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சேவை இதில் மகத்தானது.. அவர்களுக்காக அரசுகள் தேவையான உதவிகளை தொடர்ந்து கொடுத்தபடி உள்ளன. அதேபோல வசதி படைத்தோரும் தாராளமாக உதவிகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
குவியும் தாராள நிதியுதவி
இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் எல்லாம் வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர். ரத்தன் டாடா தாராள மனதின் உச்சத்துக்கே போய் விட்டார். ரூ. 1500 கோடி நிதியுதவியை அவர் அறிவித்துள்ளார். முகேஷ் அம்பானி ரூ. 500 கோடியை அறிவித்துள்ளார். இப்படி இந்தியாவின் பெரும் பெரும் பணக்காரர்கள் உதவிகளை அளித்து வருகின்றனர். அதேபோல திரையுலகினரும் உதவிகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
கமல், பார்த்திபன் தாராளம்
தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டையே தற்காலிக முகாமாக மாற்றிக் கொள்ள முன்வந்துள்ளார். தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் டாக்டர்கள் தயாராக இருப்பாகவும், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்குத் தேவையென்றால் வீட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளார். அதேபோல நடிகர் பார்த்திபனும் கூட இதேபோல தனது வீடுகளை தற்காலிகமாக எடுத்துக் கொள்ள முன்வந்துள்ளார்.
கட்டடங்கள் நிறைய தேவைப்படும்
பல நடிகர்கள், இயக்குநர்கள், உள்ளிட்டோர் நிதியுதவிகளை அளித்துள்ளனர். ஆனால் இனி வரும் நாட்களில் நிதிக்கு நிகராக இருப்பிடங்கள் தேவைப்படும். அதாவது மக்களை ஆங்காங்கே தங்க வைத்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நிறைய இடங்கள் தேவைப்படும். இதைக் கருத்தில் கொண்டுதான் ரயில்களை எல்லாம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். எனவே நிறைய இருப்பிடங்கள், கட்டடங்கள் தேவைப்படும்.
ரஜினியும் முன்வருவாரா
கமல்ஹாசன், பார்த்திபன் போல நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் போன்றோரும் தங்களது இருப்பிடங்களைக் கொடுக்க முன்வரலாம். அவர்களுக்குச் சொந்தமாக கல்யாண மண்டபங்கள் உள்ளன. அதேபோல தேமுதிக இளைஞர் அணித் தலைவர் சுதீஷுக்கும் சொந்தமாக பிரமாண்ட கல்யாண மண்டபம் உள்ளது. விஜயகாந்த்துக்கே சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இதுபோன்ற இடங்களையெல்லாம் தற்காலிகமாக இவர்கள் கொடுத்தால் நிச்சயம் பல ஆயிரம் பேருக்கு அது பலன் அளிக்கும்.
எம்எல்ஏ ஹாஸ்டலும் தேவை
இதேபோல சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலையும் கூட தற்காலிக மருத்துவமனை அல்லது முகாமாக மாற்றலாம். அங்குள்ள அறைகள் அனைத்தையும் இப்போதே தயார் செய்து வைத்து விட்டால் இன்னும் நல்லது. ஒரு வேளை அங்கு யாரேனும் எம்எல்ஏக்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு வேறு இடம் கொடுத்து விட்டு ஹாஸ்டலை முழுமையாக மருத்துவமனையாக மாற்றி விடலாம். காரணம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருப்பதால் இது சிறந்த இடமாக இருக்கும்.
ரெஸ்ட் ஹவுஸும் தேவை
இது மட்டுமல்லாமல் கெஸ்ட் ஹவுஸ்ட், ரெஸ்ட் ஹவுஸ், பண்ணை வீடு என ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரும் கூட அதை தற்காலிக மருத்துவமனை அல்லது முகாமாக மாற்ற முன்வரலாம். இது இப்போதைய அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. இனி வரும் நாட்கள் மிகவும் சவாலானவை என்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போரில் வெல்ல அனைத்து வகையான தியாகங்களுக்கும் தயாராக வேண்டும்.