கமல்ஹாசன் கேட்டால்.. டக்குன்னு கொடுத்துருவாரா ரஜினி.. என்ன நடக்கப் போகுதோ!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் தெரிவித்து உள்ளார். ரஜினி, கமலுக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துளளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் பணியில் தயாராக உள்ளன.
ஆளும் கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி என ஏற்கனவே அறிவித்து விட்டது. மறுபக்கம் ரஜினியை இழுக்க முயன்ற கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.
கூட்டணி மும்முரம்
அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெரும் என தெரிகிறது. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி விட்டது. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவனின் வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறலாம். இது ஒரு புறம் இருக்க சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்தே களம் காணும்.
கூட்டணி தேவையில்லை
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் எந்த கூட்டணியுடன் மையம் கொள்ளும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் எந்த கூட்டணியுடன் ஜோடி சென்ற விரும்பவில்லை. தனித்து போட்டியிட விரும்புகிறது. கூட்டணியில் சிக்கி கொண்டால், அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் அடிமைபோல் ஆகிவிடுவோம் என்று பலரின் எதிர்பார்ப்புக்கு விடையளித்தார்.
எதிர்பார்ப்பு எகிறியுள்ளது
இது ஒருபுறமிருக்க அவர் கூறிய மற்றோரு வார்த்தைதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன? ''நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலைதான் மிகவும் முக்கியம். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது கூட அடுத்ததுதான். தேவைப்பட்டால் நண்பர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்'' என்று அவர் கூறிய ஒற்ற வார்த்தைதான் தற்போது அனைத்து தரப்பிலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் விவாத பொருளாகி உள்ளது. தான் கூறியபடி கமல், ரஜினியிடம் ஆதரவு கேட்பாரா, ரஜினி ஆதரவு கொடுப்பாரா என்பதை அலசுவோம்.
இனிதான உதயம்
''இதோ அரசியலுக்கு வருகிறேன்'' ''விரைவில் முடிவை அறிவிக்கிறேன்'' என ரஜினி ஆண்டாண்டு காலமாக ரசிகர்களை ஏமாற்றி வரும் நிலையில், ''வந்தா மலை போனா மொட்டை'' என்று கடந்த 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கமல்ஹாசன் ஆரம்பித்தார். ரஜினிதான் ஏமாற்றுகிறார், இவராவது வந்து விட்டாரே என அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு விழுந்தது. பிரபலங்களான பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, கமிலா நாசர் ஆகியோர் கட்சியில் இருந்ததால் எதிர்பார்ப்பு கூடியது.
செல்வாக்கு எப்படி?
அடுத்த ஒரு ஆண்டில் அதாவது 2019-ல் முதல் முறையாக தேர்தலை நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டது மக்கள் நீதி மையம். போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி கண்டாலும் 0.26%சதவீதத்துடன், 16,13,708 வாக்குகளை அறுவடை செய்தது. இது அந்த கட்சிக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தது. மேலும் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களிலும் அந்த கட்சி ஓரளவு வாக்கு வாங்கியுள்ளது.
ரஜினி ஆதரவு ஏன் அவசியம்?
மக்கள் நம்பிக்கை ஓரளவு இருந்த பிறகும் ஏன் கமல் ரஜினியின் ஆதரவை எதிர்பார்க்கிறார்? தமிழக அரசியலை பொறுத்தவரை ரஜினி ஒரு செல்வாக்கு உள்ள குதிரை. இந்த குதிரை தேர்தல் களத்தில் ஓடினாலும், அந்த குதிரையின் மீது பணம் கட்டினாலும் (ஆதரவு) ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் சில அரசியல் கட்சிகள் ரஜினி அரசியல் வருகையை எதிர்நோக்கி உள்ளது. 1996-ல் ரஜினி அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தில்தான் திமுக வெற்றி பெற்றது என கூறுகிறார்கள்.
கமலின் முடிவு
மேலும், நாட்டை ஆளும் பாஜக,, திமுக ஓட்டுக்களை பிரிக்க எப்படியாவது ரஜினியை வளைத்து போட வேண்டும் என நினைக்கிறது. சின்ன, சின்ன அரசியல் கட்சிகள் ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி அமைக்க வேண்டும் என காத்திருக்கிறது. ஆகவே ரஜினிக்கு மக்கள் மத்தியில், அரசியல் கட்சிகளிடம் உள்ள செல்வாக்கு கமலுக்கு நன்கு புரிகிறது. அதனால்தான் அவர் ரஜினியிடம் ஆதரவு கேட்பதில் தெளிவாக உள்ளார். ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், அவரது ஆதரவு நமக்கு நல்ல பலன்களை வாங்கி தரும் என கமல்ஹாசன் உறுதியாக நினைக்கிறார்.
தீர்வு கிடைக்குமா?
அப்படி கமல் ரஜினியிடம் ஆதரவு கேட்டால் ரஜினி அவருக்கு ஆதரவு அளிப்பாரா ? ரஜினியை பொறுத்த அளவில் அவர் கட்சியை தொடங்குவதில் மிகவும் குழப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி அவர் கட்சி ஆரம்பித்தாலும், ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பதில் சந்தேகம் உள்ளது. கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும்போது , மக்களை நான் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும். ஆனால் அதற்கு எனது உடல்நிலை ஒத்துழைக்குமா என்பதை அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அது என்ன?
இந்த முறை தமிழக அரசியலில் காலை ஊன்றியே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் பாஜக, ரஜினியின் ஆதரவை பெற்று விட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. இதற்காக அவருக்கு பல விதங்களில் அழுத்தம் கொடுத்தும், மூத்த தலைவர்கள் மூலமாகவும் அந்த கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கும், ரஜினி ஆதரவு கொடுக்க கூடாது என்பதிலும் பாஜக ஒரு முடிவோடு உள்ளது.
கமலின் தெளிவு
நிலைமை இப்படி இருக்க கமலுக்கு ஆதரவு கொடுப்பதில் ரஜினி சிறிது தயக்கம் காட்டக் கூடும். ஏனெனில் பாஜகவும், கமல்ஹாசனும் கீரியும், பாம்பும் என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். நண்பனுக்கு உதவி செய்தால் பாஜக மூலம் தனக்கு ஏதும் பிரச்சினை வந்து விடும் என்பதிலும் அவர் நன்கு முடிவெடுத்தே செயல்படுவார். எத்தனை பிரச்னை வந்தாலும் சரி என ரஜினி, கமலுக்கு ஆதரவு கொடுத்தாலும் ரஜினி ரசிகர்கள் அதை ஏற்றுகொள்வார்களா என்பது கேள்விக்குறிதான்.
ரசிகர்கள் பிடிவாதம்
ஏனெனில் தொழில் போட்டியில் ரஜினி, கமல் ரசிகர்கள் எதிரும் புதிருமானவர்கள். போட்டிக்கு, போட்டியாக போஸ்டர் ஓட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தவர்கள். அரசியல் என்று வரும்போது இதே நிலையைத்தான் அவர்கள் தொடர விரும்புவார்கள். சினிமாவைபோல் அரசியலிலும் கமலை விட, நமது தலைவர்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் மனநிலையாக உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வராக வர வேண்டும் என்பதையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சளைத்தவர்கள் அல்ல...
அப்படி ரஜினி கட்சி ஆரம்பிக்கவிட்டாலும் பரவாயில்லை. பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் பரவாயில்லை. கமலுக்கு மட்டும் ஆதரவு கொடுக்காதீர்கள் என சில ரஜினி ரசிகர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் எதிரும் புதிருமாக உள்ளனர். கமல் ரசிகர்கள் மனதிலும் இதே மனநிலைதான் உள்ளது.
வாய்ப்பே இல்ல
இவையெல்லாம் சரியாகி ரஜினியும், கமலும் ஓன்று சேர்ந்து அரசியலில் களம் கண்டாலும் அவர்களுக்கு வெற்றி சாத்தியப்படுமா? இல்லை என்றுதான் பதில் கூற வேண்டும். ஏனெனில் அரசியல் கூட்டணிக்கு மிக, மிக முக்கியம் கொள்கைதான். அந்த கொள்கையை வைத்தே திராவிட கட்சிகள் பல ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்து இருக்கின்றன. ரஜினியின் கொள்கை பொதுவாக இந்துத்வா வகையை சார்ந்தது. அனால் கமல் கடவுள் மறுப்பாளர். ரஜினி கொள்கைக்கு நேர் எதிரானவர். எனவே தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாகவே இருவருக்கும் ஒத்து போகாது.
சீமான் குடைச்சல்
இதில் தேர்தலை சந்தித்து அவர்கள் வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம். மேலும், ஏற்கெனவே ரஜினி அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், ரஜினியும், கமலும் ஓன்று சேர்ந்தால் கடும் குடைச்சல் கொடுப்பார். இவர்களுக்கு எதிராக வாலிபர்களிடமும், மக்களிடமும் அவர் விமர்சனம் வைப்பார். இது மட்டுமல்லாது மத்திய பாஜக,, திராவிட கடசிகளின் பணபலம், செல்வாக்கு ஆகியவற்றை மீறி ரஜினி-கமல் கூட்டணி ஜெயிப்பது மிக மிக கடினம்தான். இருந்த போதிலும் அரசியல் களத்தில் எதையும் உறுதியாக கூற முடியாது. ரஜினி கூறியபடி தமிழக அரசியலில் அதிசயம் நடக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.