துரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி "சொல்லி" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி?!
திமுகவுடன் கூட்டணி வைக்குமா பாமக என்ற சந்தேகம் வலுவாக ஏற்பட்டுள்ளது
சென்னை: துரைமுருகனுடன் மீண்டும் பாமக மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் கசிந்தபடியே இருந்தன. இந்த நிலையில்தான் "இலவு காத்த கிளி" என்று கூறி பாமக முகத்தில் அடித்து விட்டது முரசொலி.
கடந்த எம்பி தேர்தலில் திமுகவை முந்திக் கொண்டு வந்து, பாமகவை உள்ளே இழுத்து போட்டுக் கொண்டது அதிமுக.. அத்துடன் அவர்கள் கேட்ட சீட்டையும் தாராளமாக வாரி வாரி வழங்கியது..
இதற்கு காரணம், அப்போது அதிமுகவுக்கு பாமகவின் தேவை இருந்தது.. ஆட்சி அமைக்க, பாமகவின் தயவும் தேவைப்பட்டது. அதேபோல, அன்புமணிக்கும் பொறுப்பு தந்து அதிமுக உயர்த்தியது.
கூட்டணி
ஆனால், இந்த முறை அதற்கான அறிகுறியே காணோம்.. கூட்டணியை உறுதி செய்து கொள்ள அதிமுக தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது.. ஆனால், இடஒதுக்கீடு என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து, டாக்டர் ராமதாஸ் அதிரடியை கிளப்பி உள்ளார்.. எதற்காக இந்த உள் ஒதுக்கீடு விஷயத்தை கையில் எடுத்தார் ராமதாஸ் என்று தெரியவில்லை.. ஆனால், ஏதோ பெரிதான காரணம் இருக்கிறது என்று மட்டும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.
கோரிக்கை
அதேசமயம், தேர்தல் நெருங்கும் சூழலில், இடஒதுக்கீடு என்பது அவ்வளவு சுலபம் இல்லை.. அதிமுக அரசால் இதற்கு உடனடி ஆணை பிறப்பிக்கவும் முடியாது.. அப்படி ஒரு கோரிக்கையை நிறைவேற்றவும் எடப்பாடியார் தயாராக இல்லை. பாமகவுக்கு தந்தால், மற்றவர்களும் ஒதுக்கீடு கேட்டு வந்து நிற்பார்கள் என்பதாலும், ஒரு தரப்புக்கு மட்டுமே ஆணை பிறப்பித்துவிட்டால், மற்ற இனத்தவரின் அதிருப்தி ஓட்டுக்களை சம்பாதிக்க வேண்டி வருமே என்ற தயக்கத்திலும் இருக்கிறார்.. இப்போதே கருணாஸ் தங்களுக்கும் ஒதுக்கீடு செய்யுங்கள் என்று குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்.
திமுக
இப்படிப்பட்ட சூழலில்தான் திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை என்ற செய்திகள் கடந்த 2 நாட்களாகவே கசிந்து வருகிறது.. 2 மாதத்துக்கு முன்பும் இப்படித்தான் ஒரு பேச்சு எழுந்தது.. ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று தயாநிதி மாறன் தருமபுரியில் தந்த பேட்டியில் தெரிந்துவிட்டது.. அத்துடன் முரசொலியும் கட்டுரை பதிவிட்டு தெளிவுபடுத்தி இருந்தது. இப்போது மறுபடியும் அதே பேச்சு எழுந்துள்ளது.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டடதே ஜிகே மணிதான்.. கடந்த 21-ம் தேதி தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது.. அன்புமணியும் ஜிகே மணியும் இதில் கலந்து கொண்டனர்..
ஜிகே மணி
அப்போது பேசிய ஜிகே மணி, "வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால், கூட்டணி குறித்துராமதாஸ் முடிவு செய்வார்" என்றார்.. இதன்மூலம்தான் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியது.. ஆனால், இந்த பேட்டி அதிமுக தரப்புக்கு மட்டுமல்லாமல் மொத்த தரப்புக்குமே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
முரசொலி
இதே திமுகவைதான் கடந்த காலங்களில் பாமக தாறுமாறாக விமர்சித்து கொண்டிருந்தது.. முரசொலியிலும், 6 கேள்விகள் கேட்டு, "ஐயா பதில் சொல்லுங்க" என்று கட்டுரை வெளியானது.. அதனால், திமுக - பாமக கூட்டணி என்பது சாத்தியமில்லை என்றும் யூகிக்கப்பட்டது.. ஆனால், ஜிகே மணியின் பேட்டிக்கு பிறகு, பாமக தரப்பில் வேறு யாரும் அதை பற்றி கருத்து சொல்லவில்லை. அதேசமயம், டாக்டர் ராமதாஸிடம் பேசாமல், இப்படி ஒரு கருத்தை பொதுவெளியில் அக்கட்சி தலைவர் பேச வாய்ப்பும் இல்லை.
கூட்டணி
அதுமட்டுமல்ல, அன்புமணிக்கும் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் உள்ளது போல தெரிகிறது.. அதிமுகவோடு கூட்டணி வைப்பதைவிட, திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவது எளிது என்றும், பாமக சார்பாக சில எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என்றும், அதன்மூலம் கட்சியை சிரமமின்றி நடத்தி கொண்டு போகலாம் என்றும் அன்புமணிக்கு யோசனையாக இருக்கிறது. மேலும் கூட்டணிக்காக, துரைமுருகனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.
ஐபேக்
அதனால், ஜிகே மணிக்கும், அன்புமணிக்கும் இப்படி ஒரு விருப்பம் இருப்பதால், சட்டென என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் டாக்டர் ராமதாஸ் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிலையில்தான் முரசொலி கட்டுரையில் இலவு காத்த கிளி, மருத்துவர் அய்யாவின் பகல் கனவு என்று பகிரங்கமாகவே போட்டு கதவை மூடியுள்ளனர். ஆனால் கதவு அடைக்கப்பட்டுள்ளது போல தென்பட்டாலும், ஐபேக் நிறுவனமும், பாமக கூட்டணிக்கு வந்தால் ஆட்சியை எளிதாக பிடிக்கலாம், சிக்கல் பெரிதாக இருக்காது என்றும் கருத்து சொல்லி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
கூட்டணி
எனவே, பாமக எந்த கூட்டணியில் சேர போகிறது? திமுகவா? அதிமுக? அல்லது தனித்து களமிறங்குவதா? என்பதெல்லாம் அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் தெரிந்துவிடும்.. அநேகமாக, திமுக கூட்டணிக்கே பாமக செல்லும் என்கிறார்கள்.. பார்ப்போம்..!