சசிகலா ரிலீஸ் எப்போ?.. நன்னடத்தை கைகொடுக்குமா.. நட்டாற்றில் விடுமா?.. பரபரக்கும் அதிமுக!
சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக துவங்கிவிட்டன தமிழக கட்சிகள் அத்தனையும். வெளிப்படையாக தெரியவில்லை ஆனால் உள்ளூர மிக முழுமையாக எல்லா ஆயத்தங்களும் அரங்கேற துவங்கிவிட்டன.
எதிர்கட்சிகளை விட மாநில ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், தேசிய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும்தான் மிக முழுமையாக இந்த தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளன. பா.ஜ.க.வை சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க.வுக்கு எந்த விருப்பமுமில்லை. ஆனால் கழட்டி விட வழியே இல்லை. கழுத்தில் ரெய்டு கத்தி வைக்கப்படலாம்! என்பதுதான் அச்சம்.
இந்த நேரத்தில் இப்போது இருக்கும் அதே அமைப்புடன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. தலைமைக்கு விருப்பமில்லை. காரணம்? நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடை ஆகிய தேர்தல்களில் சொந்த கட்சியின் வாக்கு வங்கியே விழவில்லை. இதே நிலை எதிர்வரும் தேர்தலிலும் வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறது அத்தலைமை.
எல்லாவற்றுக்கும் ரெடிதான்
அதற்காக எதிர்பாராத மாற்றங்களை கூட செய்திட இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இணைந்த தலைமை தயார் என்கிறார்கள். அந்த வகையில் சசிகலாவை கூட கட்சியில் இணைத்து, அவரது தலைமையில் இயங்கவோ அல்லது அவருக்கு மிக மதிப்பான பொசிஸன் ஒன்றைக் கொடுத்து, தொண்டர்களை ஒருங்கிணைத்து கெத்தாக தேர்தலை சந்திக்கவோ அது தயங்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதை பா.ஜ.க.விடமும் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டார்கள். சசியை மன்னிக்க தயாராகிவிட்ட பா.ஜ.க., தினகரனை மட்டும் இணைத்துக் கொள்ள கூடாது என்பதை ஸ்டாண்டிங் ஆர்டராகவே வழங்கியுள்ளது.
பாஜகவால் சாத்தியமே
சரி சசிகலாவை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைக்க தயார்! என்றால், அவர் சிறையில் இருக்கிறாரே! என்று நீங்கள் நினைக்கலாம். தண்டனைக் காலம்படி பார்த்தால் வரும் 2021 பிப்ரவரியில்தான் அவர் விடுதலையாக முடியும். ஆனால் அதற்கு கணிசமான மாதங்கள் முன்பாகவே 'நன்னடத்தை' அடிப்படையில் அவரை ரிலீஸ் செய்திடும் திட்டமும் யோசனையில் இருக்கிறதாம். கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்துவிட்டதால் இது சாத்தியமே! என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஆனால் நன்னடத்தை
ஆனால் அதே வேளையில் இன்னொரு தரப்போ ‘பரப்பன அக்ரஹாரா சிறையின் விதிகளை கோடிகளை கொடுத்து விலைக்கு வாங்கினார் சசி. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் போலீஸ் அதிகாரி ரூபா. இந்த விஷயத்தின் மூலம் சிறைக்கைதியான சசியின் பெயர் மேலும் டேமேஜ் ஆகியிருக்கிறது. எனவே அவரை ‘நன்னடத்தை' எனும் தலைப்பின் கீழ் எடியூரப்பா அரசு விடுவித்தால், கர்நாடக மக்களும், தமிழக மக்களும் 'ச்சீ' என்று சொல்லிவிடுவார்கள். இது இரு மாநிலத்திலும் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வின் பெயரை கெடுக்கும் செயல்.
பரிதாப அரசியல்
எனவே சசி நன்னடத்தையில் வெளியே வர வாய்ப்பே இல்லை. முழு தண்டனையை அனுபவித்து வெளியே வந்தால்தான் அவராலும் நாளைக்கு அதை சொல்லி பரிதாப அரசியல் பண்ண முடியும்." என்கிறார்கள். ஆக சின்னம்மா நன்னடத்தையில் வருவாரா? அல்லது விமர்சனங்கள் அவரை நட்டாற்றில் விடுமா? வெளியே வந்தால் அவரை நம் தலைமை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமா? தினகரனை விட்டுக் கொடுத்துவிட்டு அவர் மட்டும் அ.தி.மு.க.வில் இணைய தயாராவாரா? என்றெல்லாம் பட்டிமன்றம் பரபரக்கிறது.
தீர்ப்பு எப்படி அமையுமோ?
- ஜி.தாமிரா