சசிகலாவை சுற்றிச்சுழலும் நவகிரகங்கள்... இந்தாண்டு விடுதலையாக வாய்ப்பில்லை ராஜா
சசிகலா இந்த மாதம் இறுதியில் விடுதலையாகிவிடுவார். அக்டோபரில் ரிலீஸ் ஆவார், தீபாவளிக்கு வந்து விடுவார் என்று வக்கீல் சொன்னாலும் அவரைச் சுற்றிச்சுழலும் நவகிரகங்களும் இப்போதைக்கு அவர் விடுதலையாக வாய்ப்பு
சென்னை: சசிகலாவின் தண்டனை காலம் அடுத்த ஆண்டுதான் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் இந்த மாத இறுதி அல்லது, அக்டோபர் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்படுவார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் நம்பிக்கையோடு கூறியிருந்தாலும் அவர் இந்த ஆண்டு இறுதி வரை விடுதலையாக வாய்ப்பில்லை என்றுதான் நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியே சசிகலா வெளியிடப்படுவார் எனக் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது அவர் விரைவில் வெளியாகவுள்ளார் என்ற தகவலை அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சசிகலா நன்னடத்தை காரணமாக மார்ச் மாதத்திலே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனா லாக்டவுன் காரணத்தால் நாட்கள் தள்ளிப் போனது. சசிகலா செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் விடுதலை ஆவார். அதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.
சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் எங்களுக்கு வந்து சேரவில்லை. நேட்டீஸ் வந்தவுடன் நாங்கள் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் ராஜா செந்தூர் பாண்டியன்.
நெருங்குது அரசியல் ஆட்டங்கள்...சட்டப்படி செப். இறுதியில் சசிகலா விடுதலை- அடித்து சொல்லும் வக்கீல்
போயஸ் கார்டனில் புது வீடு
சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
நோட்டீஸ் ஒட்டிய வருமான வரித்துறை
அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் புதன்கிழமையன்று வருமான வரித்துறை சார்பில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த இடத்தை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது அதே நேரம் கட்டுமான துறையை நிறுத்துவது பற்றி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை 90 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சசிகலாவின் வக்கீல் விளக்கம்
போயஸ் கார்டன் இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ள ராஜா செந்தூர் பாண்டியன் இது தவறான செயல் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இது சசிகலாவின் வீடே அல்ல
இந்த இடம் 2013-2014ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்? இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள். அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?
விளக்கம் தருவோம்
ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி' என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கு சட்டம் இடம் கொடுக்காது.
நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை
எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம். எங்களுக்கோ சசிகலாவிற்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நன்னடத்தை விதிப்படி விடுதலை
சசிகலா கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.
சசிகலா ரிலீஸ்
ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம் இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறியுள்ளார் ராஜா செந்தூர் பாண்டியன்.
லஞ்ச குற்றச்சாட்டு
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் 2021, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் அந்த நாட்கள் மட்டும் கழிக்கப்பட்டு 2021 ஜனவரி 26ஆம் இல் அவர் விடுதலை ஆகலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் மீதுள்ள லஞ்ச குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நன்னடத்தை மீறியதற்காக சில மாதங்கள் அவருக்கு தண்டனை கூடுதலாக்கப்படும் என்றே தகவல்கள் கசிகின்றன.
சசிகலா ரூ. 2 கோடி லஞ்சம்
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசாக இருப்பதற்காகவும், தேவைப்படும் நேரத்தில் ரகசியமாக ஷாப்பிங் சென்று வருவதற்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறையின் டிஐஜியாக இருந்த ரூபா ஐபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டுகளைக் கிளப்பியிருந்தார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இது பற்றிய விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாய்ப்பில்லை ராஜா
சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வராக ஆசைப்பட்டார் ஆனால் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிந்து ஒத்தி வைக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு உடனடியாக சொல்லப்பட்டு சிறைக்கு போனார் சசிகலா. ஒரே நாளில் எல்லாம் தலைகீழாகிப் போனது. அதே போல சசிகலா சிறையில் லஞ்சம் கொடுத்த விவகாரம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றி இப்போதைக்கு இது பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தாலும் விரைவில் இதனை தூசு தட்டுவார்கள் என்றே எதிர்பார்க்கலாம். அதுவரைக்கும் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பில்லை ராஜா என்றே கூறி வருகின்றனர்.
எதுவும் நடக்கலாம்
இந்த ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என நவ கிரகங்களும் சசிகலாவிற்கு சாதகமாக இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. முதல்வராக ஆசைப்பட்டவர் ஒரே நாளில் சிறைக்கு அனுப்பட்டார். இப்போது அவர் விடுதலையாவார் என்று நம்பிக்கையோடு கூறப்படும் நிலையில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறார். அரசியலில் எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் பரபரப்பை சந்திக்க தமிழகம் தயாராகவே இருக்கிறது.