சசிகலா 2.0... அரசியலில் புதுக்கணக்கு... டிடிவி தினகரன் போடும் மனக்கணக்கு.. அனல் பறக்கும் அக்டோபர்..?
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பிறகு அரசியலில் புதுக்கணக்கை தொடங்க இருக்கிறார் சசிகலா.
சசிகலாவின் விடுதலை அதிமுகவிலும், அரசியலிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர்களில் ஒரு தரப்பினர் கூறிவந்தாலும், மற்றொரு தரப்பினர் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவது கவனிக்கத்தக்கது.
இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ சசிகலா விடுதலை செய்யப்பட்டால் அக்டோபரில் அனல் பறக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.
கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.!
தண்டனைக்காலம்
கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஆட்சி ஆட்டம் கண்டது. அப்போது தனக்கே உரிய அரசியல் சாணக்யதனத்தால் ஆட்சிக்கு எந்த சேதாரமும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து, தாம் சிறைக்கு செல்லவிருந்த இக்கட்டான சூழலிலும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்து ஆட்சியை ஒப்படைத்தவர் சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா தனது தண்டனை காலத்தை நிறைவு செய்யவிருக்கிறார்.
சசிகலா வழக்கறிஞர்
சசிகலா ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள் மற்றும் நன்னடத்தை விதிகளின் படி தண்டனை காலத்தில் மாதம் 3 நாட்கள் கழிப்பு உள்ளிட்ட சிறை விதிகள் பிரகாரம், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ அவர் விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார். இதனிடையே சசிகலா விடுதலையான பிறகு அரசியல் ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதா என்பது தான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
2-வது இன்னிங்ஸ்
கட்சியில் நடக்கும் நிகழ்வுகளால் மனச்சோர்வடைந்த சசிகலாவை அவரது குடும்ப உறுப்பினர்களும், டிடிவி தினகரனும் அவ்வப்போது சந்தித்து தேற்றி வைத்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் சலசலப்பு ஏற்பட்டு தற்போது பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் டிடிவி தினகரன் ஒரு கணக்கு போட்டு வருகிறார். அந்தக் கணக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகியது என்றால் சசிகலா அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவது உறுதி என்கிறார்கள் அவரது அபிமானிகள்.
அனல் பறக்கும்
இன்னும் 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பரபரப்பு படிப்படியாக மறைந்து அரசியல் பரபரப்பு பற்றி வருகிறது. இதனிடையே அக்டோபரில் சசிகலா விடுதலையானார் என்றால் அனல் பறக்கும் அரசியல் ஸ்டண்ட்களுக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.