"சித்தி ரிட்டர்ன்ஸ்".. பிப்ரவரி முதல் சாட்டையடி... ரெடியாகும் அமமுக.. பாஜகவின் 2 ஆப்ஷன்!
சசிகலாவின் அரசியல் இனி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது
சென்னை: ஒருவழியாக சசிகலா விடுதலை ஆகிவிட்டார்.. இனி அதிமுகவில் என்ன நடக்கும்? சசிகலாவை வைத்து பாஜக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் 2 வருஷத்துக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள், விடுதலையான நாளில் இருந்து 6 வருஷத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது...
அதன்படி தண்டனை அனுபவிக்க தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 வருஷத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது... இதில் 4 வருஷம் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது... அப்படியானால், நாளை முதல் 6 வருஷத்துக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது...
பாஜக
அதேசமயம் கட்சி பதவிகளை வகிக்க எந்த தடையும் இல்லை... இந்த விஷயத்தைதான் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.. பாஜகவின் பிளானும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பாஜகவுக்கு ஒரே எண்ணம்தான், திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும், அதிமுகவின் பலத்தை கூட்டினால்தான், வெற்றி பெற முடியும்.. அதனால், அமமுக - அதிமுகவை இணைக்க யோசித்து வருகிறது.. அதாவது சசிகலா தலைமையில் தேர்தலை சந்தித்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது பாஜகவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தேர்தல்
அதுமட்டுமல்ல, கடந்த 2019 தேர்தலில் அமமுக கணிசமான வாக்கை கையில் வைத்துள்ளது.. இதுபோக குக்கரை முன்கூட்டியே வாங்கி வைத்துள்ளது.. சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ளவில்லையானால், அந்த எதிர்தரப்பு ஓட்டுக்களும், தென்மண்டலத்தில் சசிகலாவுக்கு உள்ள சமுதாய ஓட்டுக்களும், அப்படியே அமமுகவுக்கு வந்து சேரும்.. அதிமுகவுக்குதான் சறுக்கலை தரும்... இதையும் பாஜக நன்றாகவே கணக்கு போட்டு வைத்துள்ளது. இப்போது இந்த விஷயத்தில் ஓபிஎஸ் தயாராக இருக்கிறார்.. எடப்பாடியார் தயக்கம் காட்டுகிறார்..
சமாதானம்
ஒருவேளை எடப்பாடியாரை யாரேனும் சமாதானப்படுத்தவும் முயலலாம்.. அல்லது ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை பிரித்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கி, பாமக, அமமுக, தேமுதிக என ஓர் அணியையும் பாஜக உருவாக்கலாம்.. ஆக, எடப்பாடியார் சம்மதித்தால் ஒரு முடிவு, அவர் சம்மதிக்காவிட்டால் வேறு முடிவு என 2 ஆப்ஷன்களை கையில் வைத்துள்ளது.
உடல்நிலை
இனி சசிகலா நிலைமையை எடுத்து கொண்டால், அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை.. உடம்பில் பல பிரச்சனைகள் அவருக்கு ஏற்கனவே இருக்கிறது.. முன்பு போல அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியுமா என்பது அவர் சம்பந்தப்பட்ட விஷயம்.. ஒருவேளை, கட்சியில் தீவிரம் காட்டினாலும் சிறைவாசத்தை சொல்லி அவரால் வாக்கு கேட்க முடியாது... ஏனென்றால், உள்ளே போனது ஊழல் வழக்கில்.. அதனால், இந்த தண்டனையை காரணம் காட்டி அனுதாபமும் தேட முடியாது.. இவரால் ஜெயலலிதாவுக்கும் கெட்ட பெயர் என்பதுதான் பொதுவான அதிமுகவினரின் கருத்து..
தவ வாழ்க்கை
கோகுல இந்திரா "தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா" என்று ஒரு வார்த்தை சொன்னாரே, அதற்கே ஆளாளுக்கு சோஷியல் மீடியாவில் பொங்கிவிட்டனர்.. சசிகலா என்ன போராட்டம் செய்துவிட்டு சிறைக்கு போனாரா, மக்கள் பிரச்சனைகளுக்காக கைதாகி சென்றாரா? என்ன தவ வாழ்க்கை வாழ்ந்தார்? இறந்தவர் ஏ1 குற்றவாளி என்றால், இவர் ஏ2தானே? என்று சளைக்காமல் கேள்விகளை கேட்டனர்.. அதனால், இந்தசிறைவாசம் இனியும் சசிகலாவுக்கு கெட்ட பெயரைதான் உண்டுபண்ணும்.
அதிமுக
அதேசமயம், கட்சியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஆளுமை சசிகலாவுக்கு உள்ளது.. மாஸ்டர் பிளான் செய்பவர்.. அனைவரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்லக்கூடிய திறமை சசிகலாவுக்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.. அந்த வகையில், அதிமுகவுக்கு இவர் பலம் என்றே சொல்லலாம்.. எனவே, சசிகலா வெளியே வந்து என்ன வகையான அரசியலை கையில் எடுக்க போகிறார்? என்பது உள்பட பல கேள்விகள் தொத்தி நிற்கின்றன..!