டக்குன்னு சொல்லுங்க.. சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? மாட்டாரா?.. அதிரடி ரிசல்ட்!
சீமான், அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது
சென்னை: யாருமே சொல்லாமல், மக்கள் பிரச்சனைகளை தாமாக முன்வந்து எடுத்து செய்து வருபவர்கள் நாம் தமிழர் உறவுகள்.. அதனால்தான் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருந்து வருகிறார்.. தனித்து களம் கண்டு வருகிறார்.. ஆனால் திடீரென ஒரு சந்தேகமும், யூகமும், கணிப்பும், கேள்வியும் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகிறது.. அதிமுகவுடன் சீமான் கூட்டணி வைப்பாரா? வைக்க மாட்டாரா.. இதுதான் அது!
10 வருட கால அரசியலில் நாம் தமிழர் கட்சி விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.. ஒவ்வொரு தேர்தலின்போதும் தோல்வியை தழுவினாலும் ஒரு தேர்தலையும் தவிர்த்துவிடாமல் துணிந்து வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார் சீமான்.
எந்த தேர்தலாக இருந்தாலும் சரி.. அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதிக்கும் தில் கட்சிதான் நாம் தமிழர் கட்சி. "என் மக்களை நம்பி என் கருத்தியலை நான் விதைக்கிறேன்.. முளைத்தால் மரம்.. இல்லையேல் மண்ணுக்கு உரம்" என்பதுதான் சீமானின் ஆரம்பம் முதல் இப்போது வரை உள்ள பிடிமானம்!
பிரச்சாரம்
ஒவ்வொரு கேள்விகளையும், ஒவ்வொரு பிரச்சினையையும் ஆழமாக வேரூன்றியே யோசிக்கும் சீமான்.. தன்னுடைய பிரச்சாரங்களிலும் இதனை காட்டமாகவே எடுத்து வைத்து வருகிறார். பொதுவாக, சீமானின் பிரச்சாரம் எப்போதுமே மிகப் பெரிய வீச்சை கொண்டிருக்கும். ஆளும்தரப்பு, எதிர் தரப்பு, என யாரையுமே விட்டு வைப்பதில்லை இவர்!
அரண்டு போகும் கட்சிகள்
மக்களை கவர்ந்தது மட்டுமல்ல, யோசிக்க வைக்க கூடியதும் சீமானின் பேச்சுக்கள்தான். திராவிட கட்சிகளே பலமுறை அரண்டு போயின சீமானின் பேச்சில்! பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டதுதான், சீமானை கடந்த எம்பி தேர்தலின் போது மட்டுமல்ல.. இந்த பஞ்சாயத்து தேர்தலிலும் 3-வது இடத்துக்கு அரசியலில் கொண்டு வந்து உயர்த்தியது.
நிஜ காரணம் என்ன?
இப்போது என்னவென்று தெரியவில்லை.. திடீரென சீமான் - அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற விதத்தில் கேள்வி எழ தொடங்கியது.. தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை கோரி சீமான் எடப்பாடியாரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார்.. ஆனால் இந்த சந்திப்பின் பின்னணியில் ஒரு முக்கிய தொழிலதிபர் இருந்ததாகவும் ஒரு பேச்சு எழுந்தது. வருடா வருடம் தைப்பூசம் வந்துபோனாலும், இந்த முறை மட்டும் சீமான், முதல்வரை சந்தித்ததன் நிஜ காரணம் என்னவென்று நமக்கு தெரியவில்லை.
திமுக
அதே சமயம், திமுகவையும், முக ஸ்டாலினையும் ஏகத்துக்கும் சரமாரி விமர்சிக்கும் சீமான், அதிமுக தரப்பை மட்டுமே கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகவும் ஒரு கருத்து பரவலாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோதே சீமான் அவ்வளவாக தன்னுடைய காட்டத்தை வெளிப்படுத்தவில்லை.. அது இப்போதும் தொடர்வதாகவே உள்ளது. இந்நிலையில்தான், முதல்வரை சீமான் சந்தித்துவிட்டு வந்ததுமே ஒருவித அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.. ஒருவேளை திமுகவை வீழ்த்த, சீமானை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயலுகிறதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நம் வாசர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.. "அதிமுகவுடன் சீமான் கூட்டணி வைப்பாரா" இதுதான் கேள்வி.
கமலுடன் வைக்கலாமே
"நிச்சயம் வைக்க மாட்டார்" என்று 38 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "கண்டிப்பாக வைப்பார்" என்று 18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "தனியாக இருந்தால் நல்லது" என்று 26 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். "கமலுடன் வைக்கலாமே" என்று 8 சதவீதம் பேரும், "அது அவரது விருப்பம்" என்று 10 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
நம்பிக்கை
இந்த கணிப்பை பொறுத்தவரை சீமான் மீது மக்களின் நம்பிக்கை சற்று அதிகமாகவே உள்ளது.. எக்காரணத்தை கொண்டும் சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று 38 சதவீதம் பேர் சொல்லியுள்ளதும், தனியாகவே இருந்தால் நல்லது என்று 26 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவே எடுத்து கொள்ளலாம்.. அதிமுகவுடனே கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடனும் சீமான் கூட்டணி வைக்க மாட்டார் என்பதுதான் இதன் அர்த்தமாக வெளிப்படுகிறது.
வாழ்க்கைக்கானவர்கள்
இது ஒரு கருத்து கணிப்புதான்.. நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் மாறும் அரசியல் சூழலில் எதுவும் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.. . எனினும், தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தியது இல்லை சீமான்.. "நாங்கள் உங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைக்கானவர்கள்" என்பதை சீமான் தன்னுடைய கடைசி நேர பிரச்சாரங்களிலும் பதித்தார் சீமான்.. இதே உறுதிப்பாடு சீமானுக்கு கடைசிவரை இருக்குமா? அல்லது அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என்ற எழுதப்படாத விதிக்குள் சீமானும் சிக்கி கொள்வாரா என்பதை காலமும், சூழலும்தான் முடிவு செய்யும்!