பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே.. மறுக்கும் பவார்.. மீண்டும் ராகுலையே விரும்பும் காங்!
சரத்பவார் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்பாரா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது
சென்னை: புதிய தலைவர் பொறுப்பை சரத்பவார் ஏற்க மறுத்துள்ள நிலையில், காங்கிரசுக்கு தொடர் சிக்கல் எழுந்து வருகிறது..!
காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தற்போது சோனியா காந்தி உள்ளார்.
சோனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் உள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கால தலைவராக மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார்... அதனால் முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி உள்ளது.
காங்கிரஸ்
புதிய தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக இறங்கி உள்ளது.. புதிய தலைவர், அரசியல் அனுபவம் வாய்ந்தவராகவும், கட்சியினரை அனுசரித்து போகக்கூடியவராகவும், பாஜகவுக்கு மாற்றாக அதிரடி அரசியல் செய்ய தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதே சோனியாவின் பெருத்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
வாரிசு அரசியல்
ஏற்கனவே புதிய தலைவராக ராகுல் காந்தியைதான் பரிசீலித்தனர்.. ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்காத பட்சத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அதனால் பிரியங்காவுக்கு தரலாம் என்றால், அது மறுபடியும் வாரிசு அரசியல் பிரச்சனையில் கொண்டுவந்து விட்டுவிடும் என்பதால், குடும்பத்தை சேராத ஒருவருக்கு பதவி தர யோசனை உள்ளது.. எனவேதான் பழுத்த அரசியல்வாதியான சரத்பவாரின் பெயர் வலுவாக உச்சரிக்கப்பட்டு வருகிறது.
முயற்சிகள்
சரத் பவார் தலைமை வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துவிட்டு, புதிய காங்கிரஸ் தலைவராக அவரை பொறுப்பேற்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், இதனை சரத்பவார் அப்போதே மறுத்தார்.. இப்போதும் மறுத்து வருகிறார்.. "ஐமு கூட்டணி தலைவர் பொறுப்பை நான் ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை... எனக்கு அதில் சுத்தமா ஆர்வமும் இல்லை.. நேரமும் இல்லை... டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை இன்று (28-ம்தேதி) சந்திக்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
சாம்னா
அப்படியானால் வேறு யார்தான் தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியபடியே உள்ளது.. இதற்கு நடுவில் சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் காங்கிரஸை தாறுமாறாக விமர்சித்து ஒரு தலையங்கம் வெளியானது மறுபடியும் கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கி வருகிறது.. "பாஜகவுக்கு மோடி, அமித்ஷா என்று வலுவான தலைவர்கள் இருக்கிறார்கள்... ஆனால் காங்கிரசில் அப்படி யாரும் தலைவர்கள் இல்லாததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை... நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
போராட்டம்
வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் தான் விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்து வருகிறது... இதற்கு மத்திய அரசு பொறுப்பு அல்ல... எதிர்க்கட்சிகள் தான் காரணம். தற்போதைய சூழல்களை காங்கிரஸ் தீவிரமாக எடுத்து கொள்ளாவிட்டால், எதிர்காலம் அனைவருக்கும் கடினமாகி விடும்"... என்று சிவசேனா எச்சரித்திருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
ராகுல்காந்தி
ஆனால், காங்கிரஸின் மனநிலைமையோ இப்போதைக்கு வேறு மாதிரியாக உள்ளது.. உட்கட்சி தேர்தல் நடத்தி, அதன்பிறகு தலைவரை தேர்வு செய்ய, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது... அடுத்த மாதம் கட்சியில் அமைப்பு தேர்தலை நடத்த திட்டமிட்டு அதற்கான தேதிகளை, இந்த மாத இறுதியில் அறிவிக்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது... மறுபடியும் ராகுலையே தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சோனியா விரும்புகிறாராம். இதனால், தலைவர் வேட்பாளர் பற்றி, கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது..
புதிய தலைவர்
ஆனால், மூத்த தலைவர்களில் தங்களின் கருத்தில் ஒன்றுபடுவார்களா? என்று தெரியவில்லை.. ராகுலையே மறுபடியும் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், எதற்கு அவர் ராஜினாமா செய்ய வேண்டும்? அதை ஏன் தலைமை ஏற்க வேண்டும்? ராகுல் மீது இவ்வளவு குறைகளை சொன்ன சரத்பவார் ஏன் பதவியை ஏற்க தயங்குகிறார்?.. இதுக்கு ராகுலே அதே பொறுப்பில் இருந்திருந்தால், பாஜகவின் ஆட்டம் ஓரளவு குறைந்திருந்திருக்குமே.. தலைவரை தேர்ந்தெடுத்து முடிப்பதற்குள் பாஜக இன்னும் பலமாகிகொண்டேதான் இருக்கும்" என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..!