ஸ்டாலின்தான் வாராரு.. அதெல்லாம் இருக்கட்டும்.. கடைக்கோடி தொண்டனுக்கு.. "இதைத்" தருவாரா!
சென்னை: ஸ்டாலின்தான் வாராரு , விடியல் தரப் போறாருனு அண்மைக்காலமாக மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் எங்கோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு குடிசையில் வாழும் தொண்டனுக்கு விடியல் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்ட போதே ஸ்டாலினை முதல்வராக்கி பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுகவே ஆட்சியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது என்றெல்லாம் ஏளனம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு அவர் சொல்லி அடித்தார். ஆம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்தது.
ஜெயலலிதா கூட்டணி
அதாவது 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை போன்ற ஒரு சாதனை இது. என்னா ஜெயலலிதா கூட்டணி அமைக்கவில்லை, ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். அதுதான் வித்தியாசம். மக்கள் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ஸ்டாலின் மெல்ல மெல்ல அரியணை ஏற காய் நகர்த்தி வருகிறார்.
தொண்டர்கள்
தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுக்க அவர் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளார். அவர்கள் வகுத்து கொடுக்கும் வியூகத்தின்படி ஸ்டாலின் உள்ளிட்டோர் செயல்பட்டு வருகிறார்கள். மக்களும் செல்லும் இடங்களிலெல்லாம் ஸ்டாலினுக்கு வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். மக்களை தன் பக்கம் கொண்டு வந்துவிட்டார். அடுத்து தொண்டர்களையும் ஸ்டாலின் தன் பக்கம் கொண்டு வர வேண்டும்.
ஸ்டாலின்தான் வாராரு
ஆம், கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்கெனவே பல முறை எம்எல்ஏக்களாக இருந்த வயதானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு சீட் கொடுத்ததால் களத்தில் இறங்கி பணியாற்றிய தொண்டர்கள் அதிருப்தி அடைந்து அதிமுகவுக்கு ஓட்டு போட்டதாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு நிகழ்ச்சியிலும் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலை ஸ்டாலின் சுட்டிக் காட்டி பேசினார்.
தொண்டர்கள்
வேட்பாளர் யார் என்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார் என நினைத்து கொண்டு களப்பணியில் இறங்குங்கள். 200 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி கூட குறையக் கூடாது என்றும் வேட்பாளர்கள் தனக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாட்டை விட்டு விட்டு பணியாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வேறுபாடுகள்
மேலும் "சட்டசபையின் படிக்கட்டை மிதிக்காமல் அண்ணா அறிவாலயத்துக்கே வராமல் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ஏதோ ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டு கழகத்தை அவரது கிளையில் வளர்த்து வைத்திருக்கிறானே ஒரு தொண்டனை அவனை நீங்கள் மதிக்க வேண்டும் வேறுபாடுகளையும் களைய வேண்டும்" என புத்திமதி கூறியிருந்தார்.
லட்சக்கணக்கானோர்
அது போல் இந்த முறையும் கொடுத்தவர்களே சீட் கொடுக்காமலும் வயதானவர்களுக்கே வாய்ப்புக் கொடுக்காமலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துரைமுருகனுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என வேலூர் மாவட்ட திமுக, தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது. 117 தொகுதிகளுக்காக கட்சி நடத்தவில்லை என கூறும் ஸ்டாலின் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு லட்சக்கணக்கானோரை அதிருப்திக்குள்ளாகக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
குடிசை வீடு
மாடி வீட்டில் வாழும் மூத்த தலைவர்களை விட்டுவிட்டு ஒரு குடிசையில் வாழும் ஏழை தொண்டர்களுக்கு ஸ்டாலின் மரியாதை கொடுத்து வாய்ப்பையும் கொடுப்பாரா என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் தமிழர் கட்சியை போல் போட்டியிடும் தொகுதிகளில் பாதி தொண்டர்களுக்கும் மீதி பாதியை மூத்தவர்களுக்கும் கொடுத்து ஸ்டாலின் அப்லாஸ்களை அள்ளுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.