சூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்?
சென்னை: கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின் பாணியில் கிராம சபைக் கூட்டங்களைக் கூட்டி தமிழகம் முழுக்க பயணிக்க நடிகர் சூர்யா யோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கல்விகொள்கையை குறித்து நடிகர் சூரியா கூறிய கருத்துக்கள் பல தளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. உதய சூரியனை சின்னமாக கொண்டவர்கள்தான் புதிய கல்விக் கொள்கையை விமர்சிக்கிறார்கள் என்றால் சூரியாவும் விமரிசிக்கிறார் என்று தமிழிசை கூறுகிறார். அரை வேக்காட்டு தனம் என்று தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகிறார்.
புதிய கல்விகொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டபோது மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்ற அம்சம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்யலாம் என்றதும் நமது போராட்டங்கள் பிசுபிசுத்து போயின. அதோடு கல்விக் கொள்கை பற்றி பேசுவதையும் நம்மில் பலரும் மறந்தே போய்விட்டோம்.
பாருங்கய்யா செம்ம பிளான்.. வேலூரில் போட்டியில்லை... ஆனால்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி முடிவு
கல்விக்கொள்கை
இந்த நிலையில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியதும் அது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. இதைத்தான் சூரியாவும் எதிர்பார்த்தார். இதற்கிடையே அவருக்கு படங்கள் தொடர் தோல்வி என்பதால் அவருக்கு அரசியல் ஆசை வந்து விட்டது அதனால்தான் இது போன்று எல்லாம் பேசுகிறார் என்று ஆளும் வர்க்கம் ஒரு பக்கம் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் ஆதரவு
ஒரு பக்கம் அவர் மட்டும் அவரது குழந்தைகளை அரசுப் பள்ளியிலா படிக்க வைக்கிறார் இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்றெல்லாம் கூட வாத விவாதங்கள் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. ஆளும் அதிமுகவும், பாஜகவும் ஒரு பக்கம் சூரியாவுக்கு எதிராக கம்பு சுற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், இயக்குனர் பா.ரஞ்சித், நாம் தமிழர் சீமான் ஆகியோர் சூரியாவுக்கு ஆதரவாக முட்டு கொடுத்து வருகின்றனர்.
மிரட்டினார்களா
இந்த நிலையில் ஆளும் கட்சி சூரியாவை மிரட்டியது, என்ற தகவலும் காற்றில் வேகமாக பரவி வருகிறது. அகரம் பவுண்டேசன் தொடர்பாக இந்த மிரட்டல் இருந்ததாலேயே சூரியா மவுனமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தொடர்ந்து மவுனமாக இருக்க மாட்டார் என்றும் அடுத்த மாதம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்போது அவர் விஸ்வரூபம் எடுக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் பாணியில்
திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதிமைய்ய தலைவர் கமல் ஆகியோர் பாணியில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் பேசக்கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். காரணம், கமல்ஹாசன் கிராம சபைக் கூட்டங்கள் மூலமாகத்தான் அடித்தட்டு மக்களிடையே வேகமாக விஸ்வரூபம் எடுத்தார்.
சுதந்திர தினத்தன்று
ஆகஸ்ட் 15 ம் தேதி கிராமங்கள் தோறும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு பள்ளிகள் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்மானமாக நிறைவேற்றி அதன் மூலம் அந்த தீர்மானங்களை உள்ளாட்சித் துறை மூலமாக செயல்படுத்த அழுத்தம் கொடுப்பது, அதைவிட முக்கியமாக ஒரு பள்ளிக்கு எப்படி சில அடிப்படைத் தேவைகளோ அது போன்றே புதியக் கல்விக் கொள்கை குறித்து பேசுவது என்றும் கல்வியாளர்கள் சிலர் சூரியாவுக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர்.
களம் குதிக்கிறார்
அதன்படி வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி நடிகர் சூரியா கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இது ஒருபுறம் என்றால் புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டும் பட்சத்தில் சூரியாவும் சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறுகிறார்கள், சூரியாவுக்கு நெருக்கத்தில் உள்ள சில நட்சத்திரங்கள்.