சென்னை மருத்துவமனைகளில் பெட் காலி இல்லை என்ற நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை.. விஜயபாஸ்கர் அதிரடி
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சென்னை மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதி இல்லை என்பதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுவதாக, நடிகரும், செய்தி வாசிப்பாளரான வரதராஜன் தகவல் வெளியிட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Recommended Video
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 70 சதவீதத்துக்கும் மேலான, கொரோனா நோயாளிகள் சென்னையில்தான் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியதுதான் என்றாலும், ஒரே நேரத்தில் பெருமளவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு இட வசதி கிடைக்காது என்பதுதான் உலக அளவில் அனைத்து நாடுகளும் சந்தித்துவரும் பிரச்சனை.
சென்னையில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல்... கட்டுப்பாடுகளை கடுமையாக்கக் கோரும் நிபுணர்கள்
பல நாடுகளிலும் படுக்கை வசதிதான் பிரச்சினை
இத்தாலியில் கூட இப்படித்தான் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால், பெரும்பாலானோர் மரணமடைந்தனர். எனவேதான் ஊரடங்கு உத்தரவு மூலமாக வைரஸ் பரவல் வேகம் என்பது குறைக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு தளர்வு பிறகு இந்த பிரச்சனை மிக மிக அதிகரித்து காணப்படுகிறது.
அனுபவம்
செய்திவாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் இதுதொடர்பாக ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், எனக்கும் எனது தம்பிக்கும் இன்று காலை ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ வெளியிடுகிறேன். இதுவும் கொரோனா பற்றியதுதான்.
திடீர் காய்ச்சல்
எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர். அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. திடீரென காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மூச்சுத் திணறல் பிரச்சனையும் இன்று காலை முதல் திடீரென ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டோம். ஆனால் சென்னையில் எந்த ஒரு பெரிய மருத்துவமனையிலும், கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு படுக்கை வசதி இல்லை.
படுக்கை வசதி
அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஒரு படுக்கை கூட இல்லை.மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறி மேலும் சில கருத்துக்களை வரதராஜன் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வந்தது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் அப்செட் ஆகியுள்ளார்.
படுக்கை வசதி உள்ளது
இன்று மதியம் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான படுக்கை வசதி உள்ளது. இங்கேயுள்ள நிருபர்கள் இப்போதே கூறுங்கள். பத்திரிக்கையாளர்களில் எத்தனையோ பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதே. யாருக்காவது படுக்கை வசதி இல்லாமல் துன்பத்தை அனுபவித்தீர்களா? இங்கேயே சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
வரதராஜன் மீது நடவடிக்கை
வரதராஜன் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை. வரதராஜன் மீது தொற்று நோய் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற மோசமான ஒரு காலகட்டத்தில் வதந்தி பரப்புவோரை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. பெருந்தொற்று நோய் சட்டத்தின்கீழ் அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.