ஓவரா போனீங்கன்னா அரசு தலையிடும்.. தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் கடம்பூர் ராஜு எச்சரிக்கை
சென்னை: தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு தலையிடும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்க துவக்க விழா சென்னை ராமபுரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் புரவலர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பழகன், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினர்.
இதைத் தொடர்ந்து விழாவில் தமிழக அரசுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பின்னர் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையுலகில் அதிகபட்சமாக இந்த ஆண்டு பெரிய, சிறிய திரைப்படம் என 467 விருதுகள் வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும்.
மேலும், திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையான திரையரங்க உரிமம் கேளிக்கை வரி குறித்து முதல்வரிடம் பேசி வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் அவர் எதிர் தரப்புக்கும் ஏற்படும் பிரச்சினையில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தமிழக அரசு தலையிடும் என எச்சரித்துள்ளார்.