ஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்!
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு ஒரே தலைமைதான் வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறிய நிலையில் அவரது பேச்சு குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் கருத்து கூறியுள்ளார்.
மதுரையில் இன்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்றும் அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை என்றும் ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார். மேலும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறியிருந்தார்.
அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை.. ராஜன் செல்லப்பா சொல்வது இவரைத்தானா!?
ஓபிஎஸ் பதில்
அவரது கருத்து கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ராஜன் செல்லப்பாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை. பேட்டியை முழுமையாக பார்த்த பின்னர் கருத்து கூறுகிறேன் என தெரிவித்தார்.
சொந்தக்கருத்து
இதனிடையே ராஜன் செல்லப்பா கருத்து அவருடைய சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் விமர்சனத்தை அதிமுகவினரின் கருத்தாக எடுக்க முடியாது.
பதவிகாலத்தை நிறைவு செய்யும்
அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டு பதவிக்காலத்தை அதிமுக ஆட்சி நிறைவு செய்யும் என நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு கூறினார்.
கேபி முனுசாமி கருத்து
இதேபோல் ராஜன் செல்லப்பா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் கருத்து அதிமுக கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.