அதிமுக எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்.. தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்!
Recommended Video
சென்னை: சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலின்போது 18 சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது. இதன் பிறகு, மே 19ஆம் தேதி மேலும் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆக மொத்தம், ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. 22 தொகுதிகளுக்கும் ரிசல்ட் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.
தினகரன் ஆதரவு
தற்போது சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவின் பலம் 114 எம்எல்ஏக்களாக உள்ளது. ஆனால் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பக்கம் சாய்ந்து விட்டார். இதே போல அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் வெளிப்படையாக தாங்கள் தினகரன் ஆதரவாளர்கள் என்று அறிவித்து வருகின்றனர்.
ஆசிட் டெஸ்ட்
இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும், ஆபத்திலிருந்து தப்பவும், அதிமுகவுக்கு குறைந்தபட்சம் 9 முதல் 10 எம்எல்ஏக்களாவது கண்டிப்பாக தேவை. எனவே இந்த இடைத்தேர்தல் அதிமுகவுக்கு ஆசிட் டெஸ்ட் என்று அழைக்கபடுகிறது.
கூட்டணி கட்சி தலைவர்கள் படை சூழ...பிரதமர் மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல்
திடீர் ஆலோசனை
இந்த நிலையில், சபாநாயகர் தனபாலை, அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர். ரத்தினசபாபதி, நாகை உள்ளிட்ட, தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய, கடந்த ஆண்டே, ராஜேந்திரன், சிபாரிசு செய்துள்ளார். இப்போது அந்த புகாரை ராஜேந்திரன் தூசி தட்டி எடுத்துள்ளதாக தெரிகிறது.
சட்டசபை பலம்
இடைத் தேர்தல்களில் எதிர்பார்த்த ரிசல்ட் வராவிட்டால், அதிமுக ஆட்சி பறிபோகும். எனவே, இந்த 4 சட்டசபை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால், சட்டசபையின் மொத்த இடங்கள் 230ஆக குறையும். அப்போது 116 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளலாம். எனவேதான், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரை, ராஜேந்திரன் மற்றும் சி.வி.சண்முகம் இன்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
நோட்டீஸ்
இந்த சந்திப்பு நிகழ்ந்த பிறகு, விருதாச்சலம்-கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி-பிரபு, அறந்தாங்கி-ரத்தினசபாபதி ஆகிய 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் கொடுத்ததாக ராஜேந்திரனும் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில், 3 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு காத்திருக்கிறது. 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அவர்கள் மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். அதில் ஒரு முடிவு வரும்வரை ஆட்சிக்கு பிரச்சினை இருக்காது. தொடர்ந்து கத்தி மீது நடக்கும். இடைத் தேர்தல் முடிவை பொறுத்தே, 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.