குழந்தையை கொஞ்சுறது.. ஆய் கழுவறது.. டீ குடிக்கிறது.. என்னமா நடிக்கறாங்க முருகேஷா.. ஆனால் எடுபடுமா?
சென்னை: ஏழை குழந்தையை கொஞ்சுவது, டீக்கடையில் டீ குடிப்பது உள்ளிட்ட செயல்களால் மட்டுமே அந்த தலைவருக்கு பொதுமக்கள் வாக்களித்துவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல்னு வந்துட்டாலே இந்த அரசியல்வாதிகள் மக்கள் முன் எப்படி வேண்டுமானாலும் குட்டிக்கரணம் போடுவார்கள். திடீர் சாம்பார், திடீர் ரசம் போல் ஏழைகள் மீது திடீர் கரிசனம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
இவையெல்லாம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் என தெரிந்த போதிலும் மக்கள் ஏமார்ந்து கொண்டு இருக்கிறார்கள். தெலுங்கானாவில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது சில அரசியல்வாதிகள் கூச்ச நாச்சமே இல்லாமல் சில செயல்களை செய்தார்கள்.
இவங்க ஒருத்தரும் ஜெயிக்கக் கூடாது.. தோற்கடிங்க.. மா.செ.க்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.. !
ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளர்
தெலுங்கானாவில் ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளர் ஒருவர் அவரது தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது சலூன் கடைக்கு சென்று அங்கு உட்கார்ந்திருந்தவருக்கு கட்டிங், சேவிங் செய்திருந்தார். அது போல் டிஆர்எஸ் கட்சியின் சதுப்பள்ளி வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற போது ஒரு குழந்தை திறந்தவெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் கால் கழுவ தயாரான தாயிடம் ஓடி சென்றார் சதுப்பள்ளி வேட்பாளர். பின்னர் தண்ணீரை வாங்கி தானே அந்த குழந்தைக்கு ஆய் கழுவிவிட்டார்.
ஸ்டென்ட்
இப்படியாக பல பல ஸ்டென்ட்டுகள் நடைபெற்றுதான் வருகின்றன. இது போன்ற திடீர் கரிசன அரசியல் தமிழகத்திலும் நடைபெற்றுதான் வருகிறது. ஏழை எளிய மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ள இடம் டீக்கடை. இந்த டீ கடைக்கு செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு டீக்குடித்துவிட்டு புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
நட்சத்திர ஹோட்டல்
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் டீயை ஆற்றியும் வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என தங்கள் பங்கிற்கு டீ குடித்துவிட்டு ஏழை பங்காளனாகிறார்கள். தமிழகத்திலேயே முருகேசன் கடை டீதான் பெஸ்ட் என ராகுலே பாராட்டியிருந்தார். அது மட்டுமா பழுத்த பழமாக உள்ள பாட்டி, தாத்தாவை கட்டி பிடித்து போட்டோ எடுப்பது இவையெல்லாம் அரங்கேறுகிறது. இதை பார்க்கும் மக்களும் ஆஹா என வாயை பிளந்து கொண்டு பார்க்கிறார்கள். தேர்தல் தேதி முடிந்த பிறகு ஜெயித்தாலும் சரி தோற்றாலும் சரி, நட்சத்திர ஹோட்டல் டீதான் இந்த அரசியல்வாதிகளுக்கு இனிக்கிறது.
உத்தரவாதத்தை கொடுக்கணும்
இது போன்ற திடீர் அரசியல் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயம் எடுபடாது, ஏழை பாமர மக்களை வேண்டுமானால் இப்படி நடித்து ஏமாற்றலாம், ஆனால் விவரம் அறிந்தவர்களிடம் இவர்களின் பருப்பு வேகாது. ஒரு வோட்டுக்காக இப்படி குட்டிக்கரணம் அடிப்பதை விட நாட்டில் நடக்கும் அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என்ற உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல் மக்களாக இது போன்ற திடீர் கரிசனக்காரர்களை புறக்கணித்தால் ஒழிய இது போன்ற நாடகங்கள் ஓயாமல் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.