தம்பிதுரையை தூக்கி துண்டாக ஒதுக்கி வைத்த அதிமுக.. ஏன், என்ன காரணம்
அதிமுகவுக்குள் தம்பிதுரைக்கு கருத்து வேறுபாடு அதிகமாகி வருகிறது.
சென்னை: கரெக்டாக காய் நகர்த்தி, தம்பிதுரைக்கு ஒரு கட்டத்தையும் கட்டி அதில் நிறுத்தி வைத்து விட்டது அதிமுக தலைமை.
அதிமுகவில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யாரை எடுத்து கொண்டாலும் அதில் தெளிவாகவும் உறுதியாகவும் பேசி வருபவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதான்! ஆனால் அவருடைய இந்த கறார்தனமான பேச்சுதான் கிட்டத்தட்ட கட்சியிலிருந்து ஒதுக்கி விடும் நிலைக்கு வந்துவிட்டது.
ஜெயலலிதா இறந்தவுடன் முதல்வராக படாதபாடுபட்டார் தம்பிதுரை. இதற்காக டெல்லியிலேயே முட்டி மோதியும் பார்த்தார். ஒன்றும் வேலைக்காகவில்லை.
பகை வளர்ந்தது
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதை ஆணித்தரமாக சொல்லி வருவதுடன், தனது எதிர்ப்புகளை அவ்வப்போது நாடாளுமன்ற அவையிலேயே வெளிப்படுத்தினார் தம்பிதுரை. வெளிப்படையாகவே பாஜகவை பகைத்து கொள்ளவும் ஆரம்பித்தார்.
செல்வாக்கு
கட்சியின் மூத்த உறுப்பினர், துணை சபாநாயகரான தம்பிதுரையின் பேச்சையும், கருத்தையும் அதிமுகவின் கருத்தாகதான் அனைவரும் பார்த்தார்கள். ஆனால் இன்று ஒரேநாளில் கட்சியில் தம்பிதுரைக்கு இருக்கும் செல்வாக்கு வெளிப்பட்டுவிட்டது.
ஜெயக்குமார் பேட்டி
அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, "பாஜகவுக்கு எதிராக பேசும் தம்பிதுரையின் கருத்து அவரது சொந்து கருத்துதான் என்றும், அதிமுகவின் கருத்து இல்லை" என்றும் சொல்லிவிட்டார். மற்றொன்று நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழு அமைத்து முறைப்படி அறிவிக்கப்பட்டதில், தம்பிதுரையின் பெயர் இல்லை.
பாஜக கூட்டணி
இதன்மூலம் பொறுப்புகளிலிருந்து தம்பிதுரை கழட்டி விடப்பட்டுள்ளார் என்று நினைப்பதா? ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று நினைப்பதா என தெரியவில்லை. ஆனால் உட்கட்சி பூசல் வெடித்து கிளம்புவதை அதிமுகவே தெளிவாக வெளிப்படுத்துகிறது என்பதும், பாஜகவுடன்தான் கூட்டணி அமைப்போம் என்ற முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது.
மறைமுக ஆதரவாளர்கள்
ஒருவேளை தம்பிதுரை ஓரங்கட்டப்பட்டால் கண்டிப்பாக வரும் தேர்தலில் அவருக்கு எம்பி சீட் ஒதுக்கப்பட வாய்ப்புகள் குறைவுதான். இன்றைக்கு அரசியலுக்கு வந்த தினகரனுக்குகூட ஆளும் தரப்பில் மறைமுக ஆதரவாளர்கள் இருக்கும்போது, இவ்வளவு காலம் அனுபவம் வாய்ந்த தம்பிதுரையின் பின்னால் பலம் வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என்றே தெரிகிறது.
வெட்ட வெளிச்சமாகும்
குழுக்களில் பெயர் இல்லாத காரணத்திற்காகவே அவரை ஒதுக்கி வைத்ததாக எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை பாஜகவுக்கு தற்காலிக சந்தோஷம் தரும் முடிவாகக் கூட இது இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இன்னும் சில நாட்களில் தம்பிதுரையின் நிலை என்னவென்பது வெளிச்சமாகி விடும்.. கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.