பேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக
தமிழக நலனை கருத்தில் கொண்டு, தமிழிசைக்கு ராஜ்ய சபா சீட் தரப்பட வேண்டும்
சென்னை: தமிழிசையை பாஜக தலைமை எந்த காரணத்தை கொண்டும் கைவிட்டு விடக்கூடாது என்பதே பலரது விருப்பமாக உள்ளது. அவருக்கு உரிய அங்கீகாரத்தை பாஜக தர வேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
மாநில பாஜக தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்தராஜன். ஒரு பாரம்பரிய, அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர்.. ஒரு திறமையான டாக்டர்! எந்த இடத்திலும் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் போக்கை உடையவர்.
இதைதான் 2014-ம்ஆண்டு மத்திய பாஜக சரியாக பயன்படுத்தி கொண்டது. மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியதால், பல வகையில் தங்களை காரியங்களை சாதித்து கொண்டது. ஆனால் தமிழிசையோ, தலைமை முன்பு திணறிதான் போனார். சுப்பிரமணியசாமி, எச்.ராஜா போன்று பலமான ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை என்ற காரணத்தினால், அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளானார்.
தமிழக பாஜக தலைவராகிறாரா வானதி .. ரேஸில் மதுரை சீனிவாசனும்.. கருப்பு முருகானந்தனும்!
பாஜக தலைமை
ஆர்.கே.நகரில் நோட்டாவை தாண்ட முடியாத நிலையும், தூத்துக்குடி எம்பி தேர்தலில் சறுக்கலையும் சந்திக்கும் நிலைமை எற்பட்டது. இது எல்லாம் பாஜக தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. அதற்கேற்ற மாதிரி தமிழிசையின் மாநில தலைவர் பதவியும் முடிய போகிறது. இதற்கு முக்கிய நபர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
கைவிட்டுவிடுமா?
அப்படியானால் பாஜக தலைமை தமிழிசையை கைவிட்டுவிடுமா? கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது. அதே சமயம் தமிழிசையை பாஜக கைவிட்டுவிடாமல், அவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிண்டல்கள்
இதற்கு காரணங்களும் உள்ளன.. கல்லடி மரம்தான் தமிழிசை. வேறு யாராவது இந்நேரம் இந்த பதவியில் இருந்திருந்தால், இந்த அளவுக்கு மாநில தலைமையை சிறப்பாக வழிநடத்தி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எத்தனை எத்தனை விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள், தனிநபர் தாக்குதல்கள்.. இவைகளில் சிக்கியும் தன் நிலைப்பாட்டில் இறுதிவரை மாறாதவர்.
தோல்வி
அது மட்டுமல்ல.. 5 தொகுதிகளில் சொல்லிக் கொள்கிற மாதிரி ஓட்டு வாங்காமல் போனதற்கு பாஜகவின் மத, இனவாத செயல்பாடுகள், சிறுபான்மை மக்களை கையாளும் விதம், நீட் தேர்வு, இயற்கை வளம் கொள்ளை உள்ளிட்டவை என பெரிய லிஸ்ட்டே உள்ளது. இதை பாஜக பரிசீலிப்பதை விட்டு விட்டு தமிழிசையை மொத்தமாக ஒதுக்கினால் அது சரியாக இருக்காது.
எச்.ராஜா
அதே சமயம், எச்.ராஜா, வானதி போன்றோர்களுக்கு தலைவர் பதவி தந்தால் அது இன்னும் மக்களை கடுப்பாக்கிவிடுவதுடன், பாஜக மீதான கோபமும் கொஞ்சமும் குறையாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், இவர்களில் யாராவது தலைமை பதவியை ஏற்றாலும் தமிழிசைக்கு ராஜ்ய சபா சீட்டாவது தரப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
வரவேற்பார்கள்
இதன்மூலம் தமிழிசைக்கு என்ன தனிப்பட்ட லாபம் என்பதை விட பாஜகவுக்கு நிறைய லாபம் கிடைக்கலாம். தமிழிசைக்கு வெறும் சீட் கொடுப்பதோடு நிற்காமல் மத்திய அமைச்சர் பதவியையும் தர வேண்டும். அதுதான் மிகச் சரியான கெளரவமாக இருக்க முடியும். நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு சற்றும் குறைந்தவர் கிடையாது தமிழிசை. எனவே தமிழிசைக்கு சீட் தரும்போது, அமைச்சர் பதவி தரும்போது அது தமிழக மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெறும்.
அக்கா
காரணம், தனக்கு இந்த பொறுப்புகள் கிடைத்தால் அதை சரியாகப் பயன்படுத்தி மக்களுக்காக உழைக்க தமிழிசை முயற்சிப்பார் என்று நம்பலாம். அது பாஜகவுக்கும் லாபமாக அமையும், அதன் மீதான அவப் பெயர் நீங்க வாய்ப்பு கிடைக்கும். கூடவே, தமிழிசை மீது மக்களுக்கு அக்கா என்ற அன்பும், பாசமும் அடங்கிய 'சாப்ட் கார்னர்' இருப்பதால், அவரும் தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பார்.
விசுவாசம்
அதிமுக சார்பில் 3 ராஜ்ய சபா சீட்டுகளில் ஒன்றை பாஜக ஏற்கனவே கேட்டதாக ஒரு பேச்சு இருந்தது. ஒருவேளை பாஜக அந்த சீட்டை வாங்கிவிட்டால், அதனை தமிழிசைக்கு ஒதுக்கி தர வேண்டும். பாஜகவை தன் சொந்த மகனே வெறுப்பதும், வீட்டுக்குள்ளேயே இப்படி ஒரு எதிர்ப்பை வைத்திருந்தும், அதனை தமிழிசை மனசுக்குள்ளேயே பூட்டிவைத்து விசுவாசத்தை கட்சிக்காகவே கொட்டியதையும் பாஜக தலைமை நினைத்து பார்ப்பது அவசியம்!