நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?.. பொன்.ராதாகிருஷ்ணன் பதில் இதுதான்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
Recommended Video
3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
பாஜக ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டத்துக்கு பிறகு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பாஜகவில் சென்னை உட்பட 4 மாநகராட்சிகளுக்கான விருப்பமனு நேர்காணல் நிறைவுற்று விட்டது என்று கூறிய அவர் அனைத்து மாவட்டத்திலும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவித்தார்.
அண்ணாமலைக்கு முழு அதிகாரம்
பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன் 31-ம் தேதிக்குபின் வேட்புமனு தாக்கல் தொடங்கும். அனைத்து மாவட்ட தலைமை அலுவலகத்திலும் காணொலி மூலம் அண்ணாமலை கருத்துகள் வழங்கியுள்ளார் என்றார்.
கூட்டணி தொடர்பாக மாவட்ட தலைவர்களுடன் முழுமையாக பேசியதாகவும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தனித்து போட்டியிடுவதற்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கூறினார். அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கூறிய அவர் கூட்டத்தில் பேசப்பட்ட எல்லா விஷயத்தையும் இங்கு பேச தயாராக இல்லை எனவும் கூறினர். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்தால் கொடுக்கும் முதல் வரவேற்பு நாங்களாகத்தான் இருக்கும் என்றும் கூறினார்.
பள்ளி மாணவி தற்கொலை
வினோஜ் செல்வம் மீதான வழக்கு கேவலமான பழிவாங்கும் படலம் என்று கூறிய அவர் இந்த சம்பவம் தமிழகத்திற்கே தலைகுனிவு. ட்விட் செய்ய கூட தமிழகத்தில் அதிகாரம் இல்லை என்று கூறினார். தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மாணவி பேசியதாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நாங்கள் பார்த்த மாணவியின் வீடியோவில் கூறிய வாக்குறுதியை பார்த்ததன் அடிப்படையிலேயே நங்கள் செயல்பட்டு வருகிறோம். இது முதன்முறை அல்ல. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்தார்.