திமுகவின் "மூன்று முடிச்சு".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி!
சென்னை: திமுகவை பொறுத்தவரை ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்களில் சிக்கி வருகிறது.. ஒரு பக்கம் பிகே டீம்.. மற்றொரு பக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி வருகை என்ற மூன்று முடிச்சுக்குள் விழுந்து கிடக்கிறது.. இதிலிருந்து தன்னை மீட்டு எப்படி வெளிவரும் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு!
Recommended Video
சமீப காலமாகவே திமுகவின் செயல்பாடுகள் ஒன்றும் பிடிபடவில்லை.. குறிப்பாக பிகே டீமின் வருகையை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.. இதைதான் வெளிப்படையாக சொன்னார் மூத்த தலைவர் பழ.கருப்பையா.
"ஒரு அரசியல் கட்சியானது செயல்பாடுகள் மூலம்தான் மக்களை கவர வேண்டும், தனியார் ஏஜென்சிகளின் உதவியால் முன்னிலைப்படுத்துவது சரியானது கிடையாது" என்று பகிரங்கமாகவே சொல்லி கட்சியில் இருந்தே விலகி கொண்டார்... பழ கருப்பையா விலகிவிட்டார்.. ஆனால் பலரோ இன்னும் இதை வெளிக்காட்ட முடியாமல் உள்ளனர் என்பதைவிட ஒருவித மன சலிப்பில் உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
கார்ப்பரேட்
இதுவரை தலைவர்கள் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இப்படி எந்த கார்ப்பரேட்களை நம்பியும் அரசியல் செய்யவில்லை.. தங்கள் அனுபவம், அறிவு, முதிர்ச்சி பக்குவத்தாலேயே கட்சியை வழிநடத்தினர்.. குறிப்பாக இவர்கள் தங்களது தொண்டர்களைத்தான் அளவுக்கு அதிகமாக நம்பினார்கள்.. ஆனால் இன்று எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளுக்கு திமுக தலைவர் ஒப்புதல் தருகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
முதிர்ச்சி
கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பும் அளவுக்கு திராவிட கட்சியான திமுக அதன் கொள்கைகளை இழந்துவிட்டதா என்றுகூட சோஷியல் மீடியாவில் மீம்கள் வந்துவிட்டன.. திமுக ஒரு முதிர்ச்சி இயக்கம், அறிவார்ந்த இயக்கம்.. ஆனால் கார்ப்பரேட்களில் கையில் கட்சியை அடமானம் வைப்பது தேவையா என்ற கேள்விதான் எழுந்து வரும்போதுதான், திடீரென "திமுக தனித்து போட்டியிட பிகே ஆலோசனை" என்ற செய்திகள் வந்தன.
ராஜ்ய சபா
அப்படியானால் கூட்டணி கட்சிகளின் கதி? அவர்களின் ஒத்துழைப்பால்தானே 39 பேர் டெல்லிக்கு செல்ல முடிந்தது? இப்போது தனித்து என்றால் கூட்டணி கட்சிகள் எப்படி இதை எடுத்து கொள்வார்கள்? என தெரியவில்லை. ஏற்கனவே ராஜ்ய சபா சீட் தராமல் திமுக ஏமாற்றியதாக காங்கிரஸ் தரப்பு அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது.. இதுபோக பல மாதங்களாக கூட்டணிக்குள் விரிசல்களும் நிலவி வருகின்றன. இந்த சமயத்தில் அந்த விரிசலையும், அவர்களின் அதிருப்தியையும் களையதான் நடவடிக்கை வேண்டுமே தவிர, விரிசலை அதல பாதாளமாக்கி, அதற்குள் கூட்டணி கட்சிகளை தள்ளுவதை போல ஆகிவிடக்கூடாது.
சாதி வாக்குகள்
மற்றொரு பக்கம் ரஜினி தரப்பு களம் இறங்குகிறது.. திமுக தங்களின் கூட்டணி கட்சிகளை சரியான அரவணைப்புடன் உரிய மரியாதையும், முக்கியத்துவம் தந்து இணைத்து கொள்வதுதான் சாலசிறந்தது. இல்லையென்றால் சாதி வாரியாக வாக்குகளை அள்ள குறி வைத்திருக்கும் ரஜினி தரப்பு, இநந்த விரிசலை எளிதாகவே பயன்படுத்தி கொள்ள பார்ப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.
பிகே டீம்
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசும்போது, "பிரசாந்த் கிஷோரை சேர்த்ததால் சில மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.. அதற்கு அவசியமே இல்லை. அவங்கவங்க அவங்க வேலயை பார்க்க போறாங்க.. எந்த தலையீடும் இருக்காது" என்று விளக்கம் தந்தாராம். ஆனாலும் மூத்த நிர்வாகிகள் என்றில்லை, மாவட்ட செயலாளர்கள் சிலருக்கே பிகேவின் வருகை பிடிக்கவில்லையாம். ஆனால் பிரசாந்த் கிஷோருக்கு இது ஒரு பிசினஸ்.. அவ்வளவுதான்.. திமுகவின் கொள்கை, கோட்பாடு, பாரம்பரியம் பற்றியெல்லாம் அவருக்கு கவலை கிடையாது.
பிரசாந்த் கிஷோர்
திமுகவை வெற்றி பெறவைத்துவிட்டால், தென்னிந்தியாவில் தனது ஃபார்முலா வெற்றி என்ற ஒரு பேர் கிடைத்துவிடும்.. இதை வைத்துகொண்டு அடுத்தடுத்த மாநிலங்களுக்கு தாவுவார்.. அதனால் திமுகவை பெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரின் வணிக எண்ணமும் ஒரு காரணம்! அதனால்தான் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைப்பது என்பதே பிரசாந்தின் திட்டமாக உள்ளதாக சொல்கிறார்கள். வாக்கு வங்கியை அள்ள இதுவும் ஒரு யுக்தி என்கிறார்கள்.. சில தினங்களுக்கு முன்பு எச்.ராஜா ஒரு பேட்டி தந்திருந்தார்.. "பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண் அடைந்துள்ளது.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்" என்று சொல்லி இருந்தார்.. அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்? தெய்வீக வழிபாட்டை புகுத்த பிகே டீம் முயற்சி செய்ய போகிறதா என நமக்கு விளங்கவில்லை.
மூன்று முடிச்சு
மொத்தத்தில் திராவிட பாரம்பரியத்தை பாழாக்காமல் கட்டிக்காக்க வேண்டிய மிகப்பெரிய கடமை திமுகவுக்கு உள்ளது.. அதை எந்த கார்ப்பரேட் வியாபாரிகளிடமும் அடமானம் வைத்துவிடக்கூடாது.. மற்றொரு பக்கம் வலுவான இடத்தை தக்க வைத்து கொண்டிக்கும் அதிமுகவுக்கு ஈடு கொடுக்க, கூட்டணி கட்சிகளை அரவணைக்க வேண்டி உள்ளது.. மற்றொரு பக்கம் ரஜினி போன்றோர் களமிறங்கி வாக்குகளை சிதறடிக்கவும் விட்டுத் தர கூடாது என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.. இந்த மூன்று முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டு திமுக வெளியே வருமா?