ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கைகள் பிரதமர் வரை நீளுமா?
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் பிரதமரையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
திமுக ஆட்சி அமைந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அடிக்கடி கூறி வருகிறார். அவர் பிரதமரை விசாரிக்க வேண்டும் என்று கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உயிரோடிருந்தவரை அவரை அவ்வளவு எளிதாக யாரும் பார்த்துவிட முடியாது அது மாநில அமைச்சர்களாக இருந்தாலும் சரி மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் சரி. அவராக விரும்பினாலன்றி அதற்கான வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இதற்கு மத்திய அமைசார்கள் பியுஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறிய வாக்குமூலங்களே சாட்சி. அப்படி இருக்கையில் அரசியலில் அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர் என்றால் பிரதமர் மோடியை குறிப்பிடலாம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஆளுநர்கள் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் வரை வந்து பார்த்து விட்டு சென்றனர். டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும் வந்து பார்த்து விட்டு சென்றார். அப்படி இருக்கும்போது நெருங்கிய நண்பர் என்ற ரீதியில் இல்லாவிடினும் ஒரு மாநில முதல்வர் மாதங்கள் சில தாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது பிரதமராக கூட அவரை வந்து பார்த்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் பிரதமர் மோடியோ அல்லது ஜெயலலிதா நண்பர் மோடியோ அவரை மருத்துவமனையில் வந்து சந்திக்கவே இல்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது மத்திய அரசு "நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். உதவிகள் தேவை என்றால் செய்வதற்கு தயாராக உள்ளோம்" என்று கூறியது. குறிப்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா பிரதமரின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் உடல்நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார். ஆக ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்பட்டது, அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் என்ன காரணங்களுக்காக மறுக்கப்பட்டது என்பது மத்திய சுகாதாரத் துறைக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய சுகாதராத் துறைக்கு தெரிந்திருக்கும் என்றால் அவர்கள் பிரதமருக்கு சொல்லாமல் தவிர்த்திருப்பார்களா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் பிரதமரையும் விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருக்கலாம்.
விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று கோரியது அப்போது தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லாமல் அவர் விசாரணை ஆணையம் அமைக்க கோரியிருக்க மாட்டார். அப்படி சந்தேகம் இருக்கிறது என்றால் ஏன் இதுவரை அதை அவர் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை? அவர் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர் காலம் தாழ்த்துவது ஏன் என்ற கேள்விகள் இப்போது எழுகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய விடாமல் தடுத்தது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு இதயப் பிரச்சனை வந்தபோது அமெரிக்காவில் இருந்து ஷமீம் ஷர்மா என்ற இதய நோய் மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது எயம்சிலிருந்து வந்த மருத்துவர்கள் மருத்துவ காரணங்களுக்காக ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டாம் என்று கூறியதாக செய்திகள் கூறுகின்றன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இப்படி மறுத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் நிச்சயம் மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும்.
மத்திய அரசுக்கு தெரிந்த சங்கதி பிரதமருக்கு தெரியாமல் இருந்திருக்குமா என்ற கேள்வியும் இதோடு சேர்ந்தே எழுகிறது. ஆகவேதான் ஸ்டாலின் பிரதமரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கலாம். ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் தனக்கு தெரிந்தவற்றை கூறுவதுதானே ஜனநாயக நெறிகளுக்கு உட்பட்டதாக இருக்க முடியும். மத்திய அரசு அல்லது பிரதமர் இது குறித்த மவுனத்தை கலைப்பார்களா ?