உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? மழையை காரணம் கூறத் திட்டம்?
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தள்ளிவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதனைக் காரணமாக கூறி தேர்தல் தள்ளிவைக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இருப்பினும் தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பாக இதுவரை மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...!
மக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்று இருக்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை பிரச்சனைகளை கூட தீர்க்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தவிப்பு
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சாலை பழுது, குடிநீர், கழிவுநீர் கால்வாய் என்பன உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக யாரை சந்தித்து மனு அளிப்பது எனத் தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
பொறுப்பற்ற நிலை
ஊராட்சி, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளோ மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. மாறாக அவர்கள் கூறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிக்கும் செயல்களிலில் தான் ஈடுபட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
இதற்கு உதாரணமாக சென்னை தாம்பரம் பெருநகராட்சி அலுவலகத்தை கூறலாம். மக்கள் தரும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என தகவல் கிடைத்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, மக்கள் பிரச்சனைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அவகாசமில்லை
இதனிடையே அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு குறைந்த அவகாசமே உள்ளதால் அது சாத்தியமா எனத் தெரியவில்லை.
தள்ளிவைக்க திட்டம்?
தமிழகத்தில் இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் அது தொடர்பான முன்னேற்பாடு பணிகளில் கவனம் செலுத்துகிறது. அதற்கு தகுந்தாற்போல் முதல்வரும் ஆட்சியர்களுக்கு நேற்று அறிவுறுத்தி உள்ளார்.
யோசனை
இதனால் மழையை காரணமாக கூறி மேலும் ஒரு மாதத்திற்கு உள்ளாட்சித்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து யோசித்து வருகிறது மாநில தேர்தல் ஆணையம். இருப்பினும் இது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.